பதிவு செய்த நாள்
24
பிப்
2020
10:02
திருப்பதி: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் நடந்து வரும் மகாசிவராத்திரி பிரம்மோற்ஸவத்தின், 8ம் நாள் காலை, அதிகாரநந்தி மற்றும் காமதேனு வாகனத்தில் உற்ஸவமூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி பட்டணத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. அதன், எட்டாம் நாள், ஸ்கந்தராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை, காளஹஸ்தீஸ்வரனும், ஞானபிரசுனாம்பிகை அம்மனும் சோமஸ்கந்தமூர்த்தியாய் அதிகாரநந்தி வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்தனர். இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வாகன சேவை தரிசித்தனர்.
அதன்பின் காலை, உற்ஸவமூர்த்திகளுக்கு கோயிலுக்குள் சுகந்த திரவிய மங்கல பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் இரவு, 8:00 மணிக்கு காளஹஸ்தீஸ்வரன் யானை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் சிம்ம வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்தனர். ஸ்கந்தராத்திரி அன்று, சிவபார்வதி கல்யாணம் நடந்து வருகிறது. அதன்படி, உற்ஸவமூர்த்திகள் மாடவீதி வலத்திற்கு பின் கோவில் அருகில் உள்ள கல்யாண உற்ஸவ மண்டபத்தை அடைந்தனர். அங்கு, அவர்களுக்கு கல்யாணஉற்ஸவம் விமரிசையாக நடத்தப்பட்டது. கல்யாண உற்ஸவத்தின் போது லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.