திருப்பதி: காளஹஸ்தி கோவிலில் நேற்று விசஷேராத்திரி உற்ஸவம் நடந்தது. அதில் திருக்கல்யாணம் செய்த கொண்ட இறை தம்பதியர் கூடலுக்கு முன் ஊடல் கொள்ளும் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவிலில் மகாசிவராத்திரி உற்ஸவத்தின் போது காளஹஸ்தீஸ்வரனுக்கும் ஞானபிரசுனாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. திருக்கல்யாணம் உற்ஸவத்தின் போது காளஹஸ்தீஸ்வரஸ்வாமி கங்கையை திருமணம் செய்து கொண்ட செய்தியை மறைத்து விடுவார். திருமணமாகி சில நாட்களுக்கு பின் இதுகுறித்து தெரிய வரும் ஞானபிரசுனாம்பிகை அம்மன் காளஹஸ்தீஸ்வரன் மீது ஊடல் ஏற்பட்டு கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவார்.உடனே காளஹஸ்தீஸ்வரன் ஞானபிரசுனாம்பிகை அம்மனை பின் தொடர்ந்து சென்று அவரை கெஞ்சி சமாதானப்படுத்தி மீண்டும் கோவிலுக்கு அழைத்து வருவார். ஊடலுக்கு பின் நடக்கும் இந்த கூடலை விசஷே ராத்திரி என்ற பெயரில் கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்றிரவு ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனி பல்லக்கில் முன் செல்ல காளஹஸ்தீஸ்வரன் தனி பல்லக்கில் பின் சென்று மாடவீதியில் வலம் வந்தபடி அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். இதில் கோவில் அதிகாரிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் இரவு கோவிலுக்குள் பள்ளியறை நடத்தப்பட்டது. இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.