தியாகதுருகம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வீட்டில் விரதம் இருந்து பக்தர்கள் முருகனை வழிபட்டனர். தியாகதுருகம் பகுதியில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
குறிப்பாக கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில் அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தியோடு நிறைவேற்றுவார்கள். தற்போது கொரோனா தோற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று பங்குனி உத்திர திருவிழா என்பதால் கோயிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் பக்தர்கள் வீட்டிலேயே விரதம் மேற்கொண்டனர். பூஜை அறையில் முருகனுக்கு படையலிட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வழிபாடு நடத்தினார். அனைத்து கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கொரோனா வைரஸ் அழியவும், தொற்று நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றவும் வேண்டிக்கொண்டனர். இந்நோய் விரைவில் அழிந்தால் அடுத்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக பக்தர்கள் பலர் வேண்டிக்கொண்டனர்.