பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
மனதாலும் தீங்கு நினைக்காத மீன ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன் சாதகமாக உள்ளனர். புதன் ஆக.21 வரை நன்மை தருவார். இதனால் லாபம் அதிகரிக்கும். பணச்செழிப்பு அதிகமாக இருக்கும். பின்னடைவு மறையும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ராகு 4ம் இடமான மிதுன ராசியில் இருந்து இருந்து வீண் கலகம், அலைச்சலை உருவாக்கி இருப்பார். குடும்பத்தில் பகையையும், பிரிவையும் உருவாக்கி இருக்கலாம். அவர் செப்.1ல் 3ம் இடமான ரிஷபத்திற்கு வந்து நன்மைகளை தர உள்ளார். குறிப்பாக முயற்சியில் வெற்றி, நற்சுகம், பொருளாதார வளத்தை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சியை கொடுப்பார்.
கேது 10ம் இடமான தனுசு ராசியில் இருந்து உடல் உபாதை தந்திருப்பார். அவர் செப்.1ல் 9ம் இடமான விருச்சிகத்திற்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் இருந்த உடல் உபாதை குணம் பெறும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு ஏற்படலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். ஆக.31 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். ஆனால் கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறலாம். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக.31க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் ஆதரவுடன் இருப்பர். பிறந்த வீட்டில் இருந்து பொருள் கிடைக்கப் பெறலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் குடும்ப விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
உடல் நலம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவர். ஆக.31க்கு பிறகு கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
* வியாபாரம் சிறப்பாக அமையும். பிற்போக்கானநிலை மறையும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
* அரசு பணியாளர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
* தனியார் பணியாளர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னேறுவர். புதிய பதவி தேடி வரும்.
* ஐ.டி., துறையினருக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
* மருத்துவர்களுக்கு மாத பிற்பகுதியில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் அனுசரணையும், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* வக்கீல்கள் மாத முற்பகுதியில் வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
* பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியோடு நற்புகழும் கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்கள் திருப்திகரமான பலனைக் காணபர். வருமானத்திற்கு குறைவிருக்காது.
* விவசாயிகள் போதிய வருமானத்தைக் காண்பர். நெல், சோளம், எள், கொள்ளு, கிழங்கு மூலம் அதிக வருமானம் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கூடுதல் மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பில் போதிய வருமானம் பெறலாம்.
* மாணவர்கள் ஆக. 29வரை நற்பலனை எதிர்பார்க்கலாம். அதன்பின் விடாமுயற்சி தேவைப்படும்.
சுமாரான பலன்கள்
* தனியார் துறையினர் ஆக.29க்கு பிறகு முயற்சி எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். அலைச்சலும். வேலைப்பளு இருக்கும். என்றாலும் அதற்கான பலன் கிடைக்கும்.
* ஆசிரியர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது
* போலீஸ், ராணுவத்தினர் அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். பதவி, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.
* தரகு,கமிஷன் தொழில் போட்டியாளர்களின் இடையூறு தலைதுாக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
* அரசியல்வாதிகளுக்கு பெண்கள் வகையில் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
நல்ல நாள் ஆக: 19,20,21,22,28,29,30,31 செப்டம்பர் 4,5,9,10,16.
கவன நாள் ஆக. 23,24,25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,7. நிறம்: சிவப்பு, வெள்ளை.
பரிகாரம்
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு அபிேஷகம்
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு தீபம்