Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-2) விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம் (பகுதி-1) விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம் ...
முதல் பக்கம் » விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-3)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மே
2012
02:05

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்

பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! பிரசேதசர்கள் கடல் நீரில் மூழ்கிக் கடுந்தவஞ் செய்துவந்த காலத்தில் அவர்களது தந்தையான பிராசீனபரிஹி, நாரத முனிவரின் உபதேசத்தைப் பெற்று அரசாட்சியைத் துறந்து, யோக நிஷ்டை புரியலானார். அதனால் அராஜகமாகி ஜனங்கள் பயிர்த்தொழிலைக் கைவிட்டனர். ஆகையால் பூமியில் உண்டான விருட்சங்களில் கிளைகள் அதிகமாகி மிகவும் நெருங்கிப் பூமியையும் வானத்தையும் மூடிக்கொண்டன. அதனால் காற்றுக்கூட வீச முடியாமற் போயிற்று. இவ்விதமாக மரங்கள் எல்லாம் வானளாவ இருந்ததால், பதினாயிரம் ஆண்டுகள் காற்றுஞ் சஞ்சரிக்க இடமில்லாமல் இருந்தது. சகல ஜனங்களும் அசையவும் முடியாமல் நாசமடைந்தனர். பிறகு பிரசேதசர்கள் ஜலத்திலிருந்து வெளிப்பட்டு வந்து, மரங்கள் வளர்ந்து உலகை மூடியிருப்பதால் பிரஜாக்ஷயமுண்டானதைக் கண்டு மிகவும் கோபங்கொண்டார்கள். உடனே, தங்கள் முகங்களிலிருந்து வாயுவையும், அக்கினியையும் உண்டாக்கினார்கள். அந்தப் பெருங்காற்று, மரங்களை எல்லாம் வேரோடு வீழ்த்தியது. காலாக்கினிக்குச் சமமான அந்த அக்கினி அவற்றை எரித்தது. இதனால் மரங்கள் யாவும் ஏககாலத்தில் நாசமாகத் துவங்கின. ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் நின்றன. தவிர, மற்றவையெல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்டு ஓஷதிகளுக்கு அதிபதியான சந்திரன் கலங்கி, பிரசேதசர்களிடம் வந்து கூறலானான். அரசகுமாரர்களே; நீங்கள் கோபத்தை விட்டு என் வார்த்தையைக் கேளுங்கள். மரங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து நட்பை ஏற்படுத்துகிறேன். மரங்களுக்கெல்லாம் மகளான மாரிஷை என்ற கன்னியை, நான் எதிர்காலத்தையுணர்ந்து எனது கிரணங்களால் வளர்த்து வந்திருக்கிறேன். ஜகன்மோகன ரூபலாவண்ய மிகுந்த அந்தப் பெண் மாரிஷையை உங்களுக்குப் பாரியையாகத் தருகிறேன். அவள் உங்கள் வமிசத்தை அபிவிருத்தி செய்யத்தக்கவள். அந்தப் பெண்ணிடம் உங்கள் தேஜஸின் பாதியினாலும், எனது தேஜஸின் பாதியினாலும், மகா பண்டிதனான தக்ஷன் என்ற பிரஜாபதி பிறப்பான். அவன் அக்கினிக்கு ஈடான தேஜஸையுடையவனாக, வெகுவான பிரஜாவிருத்தி செய்வான். அந்தக் கன்னிகையின் உற்பத்தி விவரத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

பூர்வத்தில் வேதசாஸ்திரங்களை நன்றாக அறிந்தவரான கண்டு என்ற மாமுனிவர்; கோமதி என்ற அழகிய நதிகரையில் அருந்தவஞ்செய்து கொண்டிருந்தார். இந்திரன் அவருடைய தவத்தைக் கெடுக்க நினைத்து பிரமிலோசை என்ற தேவலோக மங்கையை அனுப்பினான். அந்தப் பொற்கொடியாள் மாமுனிவரின் ஆசிரமத்துக்கு வந்து மனோகரலாவண்ய ஆடல்களால் அவரை மோகிக்கச் செய்தாள். கண்டு மாமுனிவர், அவளுடைய அழகில் மனங்கலங்கியவராய், அவளுடன் கூடி மந்திர பருவதத்தில் நூறு ஆண்டுக்காலம் கிரீடித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்தப் பெண்ணரசி, முனிவரை நோக்கி பிராமண உத்தமரே! நான் இனி தேவலோகம் போகிறேன். எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள் என்றாள். கண்டுமா முனிவரோ அவளைப் பிரிவதற்கு மனமில்லாமல், நல்லவளே! நீ இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கெஞ்சினார். அதனால் பிரமிலோசையாள்; மீண்டும் நூறு ஆண்டுகள் அம்முனிவரின் இஷ்டபோகங்களுக்கு இசைந்து அவருக்குத் திருப்தியுண்டாக்கினாள். பிறகு, அவள் அவரை நோக்கி; மகாத்மாவே! நான் சுவர்க்கத்திற்குப் போகிறேன். உத்தரவு கொடுங்கள் என்றாள். அப்போதும் கண்டுமா முனிவர் அவளைப் பிரிய மனமில்லாமல் அடி; கட்டழகி போகலாம் இரு! என்றார். அதன்படியே தெய்வப்பெண் பிரமிலோசையும் மீண்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் இருந்து பிறகு ஒருநாள் அவரை நோக்கிப் புன்னகையுடன் நான் இனியாகிலும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்டாள். அப்போது கண்டு முனிவர் காமப் பரவசத்தால், அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, அழகிய புருவமுடையவளே! இன்னும் ஒரு கணம் இரு, நீ போய்விட்டாய் என்றால் நெடுங்காலம் வரமாட்டயல்லவா? என்றார். கட்டழகி பிரமிலோசை தன்னை முனிவர் சபித்து விடுவாரே என்று பயந்து, சிறிது நாள் குறைய இருநூறு ஆண்டுகள் அவருடன் கூடியிருந்து, பிறகு மீண்டும் தேவருலகம் செல்ல வேண்டும் என்று முனிவரிடம் விடை கேட்டாள். அப்போதும் கண்டுமாமுனிவர் போகத்தில் திருப்தியடையாமல், மேலும் சிலகாலம் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். இவ்விதம் பிரமிலோசை பிரிவுவிடை கேட்கக் கேட்க இன்னும் சில நாள் இரு! சிலநாள் இரு! என்று கண்டுமாமுனிவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். பிரமிலோசையும் சாப பயத்தாலும் தாட்சண்யத்தாலும் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்கியும், தன்னைப் பிரிந்தால் அவர் மிகவும் வருந்தி வாடுவாரே என்ற பச்சாதாபத்தாலும், அவரைப் பிரிய மனமில்லாமலும், பிரிவதற்கு மார்க்கமில்லாமலும் தவித்தாள். எத்தனையோ வகையான இன்பங்களை எத்தனையோ ஆண்டுகள் அனுபவித்த கண்டுமாமுனிவரின் காதல் நாளுக்கு நாள் வலிமை பெறலாயிற்று.

இப்படியிருக்கும் போது ஒரு சமயம் கண்டுமாமுனிவர், அவசர அவசரமாக எழுந்து, தமது ஆசிரமத்தை விட்டு எங்கோ புறப்பட்டுச் சென்றார். அப்போது தெய்வ அழகி பிரமிலோசை அவரைத் தடுத்து, இப்போது நீங்கள் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறீர்கள்! என்று கேட்டாள். அதற்கு முனிவர், பெண்ணே! மாலைப்பொழுது முடிந்து சந்தியா காலம் நெருங்கி விட்டது. ஆகையால் நான் சந்தியாவந்தனம் செய்யப்போகிறேன். அப்படிச் செய்யவில்லையென்றால் என் கடமையில் ஒன்றை நிராகரித்ததாகி விடும் என்றார். அதைக் கேட்டதும் பிரமிலோசை புன்னகையுடன் அவரை நோக்கி, சர்வ தர்மக்ஞரே! சந்திப்பொழுது விரைவது இப்பொழுது தானா உங்களுக்குத் தெரிந்தது. எத்தனையோ ஆண்டுகளெல்லாம் உங்களுக்கு ஒரே நாளாக இருப்பது அனைவருக்குமே வியப்பைத் தருமே? இதை யாரிடத்திலாவது சொல்லிப்பாரும்! என்றாள். அவளை நோக்கி முனிவர், பெண்ணே! நீ அதிகாலையில் நதிக்கரையிலிருந்து வந்தாய். அப்போது உன்னைப்பார்த்த நான் என் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தேன். இப்போது இன்றைய நாள் முடிந்து, சாயங்காலமானபடியால் சந்தியாவந்தனம் செய்யப் போகிறேன். இதற்கு நீ ஏன் என்னைப் பரிகாசம் செய்கிறாய்? உண்மையைச் சொல் என்றார். அதற்குப் பிரமிலோசை, பிராமணோத்தமரே! நான் அதிகாலையில் நதிக்கரைக்கு வந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் இன்று அதிகாலையில் அல்ல! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளின் அதிகாலையில் நான் வந்தேன். நான் உம்மிடம் வந்து எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்றாள். அதைக்கேட்டதும் கண்டுமா முனிவர் மிகவும் பயந்து நடுநடுங்கி பிரமிலோசையை நோக்கி, பெண்ணே! நான் உன்னுடன் கூடி எத்தனை காலம் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்? அதை நீயே சொல்வாயாக! என்று கேட்டார். அதற்கு அவள், முனிவரே! நான் வந்து தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகளும் ஆறுமாதமும் மூன்று நாட்களும் ஆயின! என்றாள். அந்தத் தேவமங்கையைப் பார்த்து கண்டு மாமுனிவர் குழப்பத்துடன், பெண்ணே! நீ சொல்வது யதார்த்தமோ அல்லது பரிஹாசமோ? உண்மையைச் சொல். நான் உன்னுடன் கூடியிருந்தது ஒரே நாள் தான் என்று நினைக்கிறேன் என்றார். பிரமிலோசை தலையாட்டி அந்தணரில் உயர்ந்தவரான உம்மிடம் நான் ஏன் உண்மையில்லாததை சொல்கிறேன்? அதுவும் அறவழியை அனுசரித்து நீங்கள் கேட்கும் இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா? ஆகையால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றாள்.

உடனே தவமுனிவர் தன்னைத்தானே கடிந்துகொண்டார். சை! என் தவம் எல்லாம் நஷ்டமாயிற்றே! நான் என்ன செய்வேன்? பிரமவித்துக்களான பிராமணர்களுக்குக் குலதனமாகிய வேதத்தியனம் வீணாயிற்றே! என் விவேகம் எல்லாம் பறிபோய் விட்டதே! என்னை வஞ்சிப்பதற்காக எவனோ ஒருவன் இந்த வனிதையை என்னிடம் அனுப்பிவிட்டானோ? பசி, தாகம், சோகம், மோகம், வார்த்திக்யம், மரணம் ஆகிய ஷடூர்மி! என்று சொல்லப்படும். இந்த ஆறு விகாரங்களும் இல்லாமல் நிர்மலமாக இருக்கும் பரப்பிரமத்தை அறியும் பொருட்டு மனதையடக்கியாள வேண்டும் என்று நிச்சயஞ் செய்த எனது விவேகத்தை அபகரித்து, என்னை யோகப் பிரஷ்டனாகச் செய்த காமம் என்னும் மாபெரும் பூதத்தை தகிக்க வேண்டும். சாந்திராயாணதி விரதங்களும் வேதாப்பியாசமும் மற்றுமுண்டான மோட்ச காரணங்களான புண்ணியங்களும் நரகத்திற்கு வழியான துஷ்ட சகவாசத்தால் பாழாக்கப்பட்டனவே? என்று கண்டு மாமுனிவர் தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டே; தேவமங்கையான பிரமிலோசையை நோக்கி, அடி பாதகீ! நீ இனிமேலாவது என்னை விட்டு உன்னிச்சையாகப் போய்விடு. நீ வந்து உன்னுடைய நடையுடை பாவனைகளால் என் சித்தத்தை கலக்கி, என் தவத்தைக் குலைத்து இந்திரனுக்கு சாதகமான காரியங்களைச் செய்து விட்டாய். இத்தகைய உன்னை என் கோபாக்கினி சுவாலைகளினால் சாம்பலாக்கிவிட வேண்டும். ஆயினும் சத்புருஷடன் ஏழடி உடன் நடந்தவர்கள் கூட நண்பர்கள் ஆவார்கள். ஆகையால் இத்தனைக் காலமும் என்னுடன் நீ கூடியிருந்ததை எண்ணி உன்னை மன்னித்தேன். நியாயமாக விசாரித்தால் உன்னைக் குறைசொல்லி ஒரு பயனும் இல்லை. நான் எனது ஐம்புலன்களையும் வெல்லமாட்டாமல் காமமோக பரவசமானதால், குற்றமே என்னுடையதாகின்றது. தேவேந்திரனுக்குப் பிரீதியாக என்னுடைய தவத்துக்கு ஊறு விளைத்த உன்னுடைய மாமோகத்திற்கு இருப்பிடமான மாயையைத் தகிக்க வேண்டும்! என்று கோபித்தார். உடனே தெய்வப்பெண் பிரமிலோசை பயத்தால் நடுநடுங்கி, தன் உடல் வியர்க்க கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடல் வியர்க்க, மெய் சிலிர்த்துக் கொடிபோல நிற்கும் அந்தப்பெண் கொடியை நோக்கி மாமுனிவர் கோபத்துடன் போ, போ! என்று உரக்கக் கூவினார். உடனே, அவரது கோபத்திற்குப் பயந்து பிரமிலோசை அந்த ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு, வானத்து வழியே செல்லும்பொழுது, அவள் தனது சரீரத்தில் உண்டான வியர்வையை மரங்களின் நுனியிலிருந்த துளிர்களினாலே துடைத்து, விருட்சங்களில் போட்டு, மரத்தின் மேல் மரமாகத் தாண்டிச் சென்றாள்.

பிரமிலோசை என்னும் அந்தத் தெய்வ மங்கையிடம் கண்டு மாமுனிவரால் உண்டான கர்ப்பமானது அவளுடைய ரோம கூபங்களிலிருந்து வியர்வையாகக் கசிந்து வந்ததால்; அந்தக் கர்ப்பத்தை விருட்சங்கள் தரித்தன. பிறகு, அவ்வியர்வையெல்லாம் வாயுவினால் கூட்டப்பெற்று ஒன்றாய்த் திரண்டன. அவற்றை சந்திரனாகிய நான் எனது கிரணங்களினால் வளர்த்து வந்தேன். இவ்விதமாக அந்த கர்ப்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வர, அதிலிருந்து மிகவும் அழகிய கன்னி ஒருத்தி தோன்றினாள். அவள் தான் இப்பொழுது மாரிஷை என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள். இந்த மரங்களே இந்த மங்கையை உங்களுக்குத் தருவதால், உங்களுடைய கோபத்தை விட்டு விடுங்கள். இந்த மாரீஷையானவள் கண்டுமாமுனிவர் பிரமிலோசையிடம் விட்ட வீரியத்தாலே, தருக்களிலே தரித்து, வாயுவும் நானும் வளர்த்ததால், கண்டு முனிவருக்கும் மரங்களுக்கும் எனக்கும் வாயுவுக்கும் பிரமிலோசைக்கும் மகளாகிறாள். இது நிற்க, கண்டு மகரிஷியானவர், பிரமிலோசை சென்ற பிறகு தமது தவம் க்ஷீணித்ததற்காக மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீவிஷ்ணு தேவனின் நிவாஸ ஸ்தானமான ஸ்ரீபுரு÷ஷாத்தமம் என்று வழங்கப்படும் ஒரு மலைக்கு வந்து அங்கே ஏகாக்கிர சித்தத்தோடு ஹரியை ஆராதித்தவண்ணம் மகாநிஷ்டையிலிருந்து வந்தார் இவ்வாறு சந்திரன் கூறி முடித்தான். அதைக்கேட்ட பிரசேதசர்கள் சந்திரனை நோக்கி, மகாத்மாவே ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் உவக்கும்படி கண்டு மகரிஷி செய்த அந்தப் பிரமபார ஸ்துதியை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். உடனே சந்திரன் கூறினான்.

முடிவற்றதும், தாண்டக் கூடாததும் காமக் குரோத மோகாதி திமிங்கலங்கள் நிறைந்ததும் பயங்கரமானதுமான சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு ஒரு தெப்பத்தைப் போல இருப்பவனும், இதற்குப் பரமமான முடிவாக இருப்பவனும், உபதேச பரம்பரையினால் அறியப்பட்டவனும் அளவற்ற சக்தியுடையவனும், தேச, கால, பொருள்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாதவனும் நிறைவு பெறாத கர்மாதிகளைத் தனது திருநாம சங்கீர்த்தனத்தினாலே நிறைவேற்றுகிறவனும், பிரம்மாதிகளான சகல ஆன்ம கோடிகளுக்கும் மேம்பட்டவனாய் காரணமாய் நிரதிசய ஆனந்தரூபனாய் இருக்கிறவனும், பிரம்மாதிகளைப் போல், காலவசத்தாலே அகப்படாமல் சகல சக்திகளோடுங்கூடி நித்தியமாய்த் தேஜோமயமாய் விளங்கும் திவ்யமங்கள விக்கிரகமுடையவனாய் ஆனந்த ஸ்வரூபியாய் இருப்பவனும், முக்கியத்துக்கு முடிவிடமாயும் வேத வைதீகங்களைப் பரிபாலிப்பவனாயும் பிரதானமும் சீவனும் பிரளய காலத்தில் லயமடைகிற ஸ்தானமாயும், யாவற்றுக்கும் கலப்புண்டாகாமல் இருக்கும்படி ஏற்பட்ட அணையாயும், முக்தியடைந்தவர்களுக்கும் மேம்பட்டவன் என்று சொல்லும்படியான காரணத்துவ சேஷித்துவங்களையுடையவனாகவும், பிரபஞ்சத்துக்கு பரிய வசானமான காலத்துக்கும் ஸ்தானமாயும் ஆகாயம் முதலான விபுத்திர வியங்களையும் நிறைப்பவனாயும், சகல ரக்ஷகர்களும் ரக்ஷகனாயும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுதேவா! ஜகத்துக்குக் காரணமான விராட் புருஷனும் அவனுக்கு காரணமான அகங்காரமும் அதற்குக் காரணமான மகத்தத்துவமும் அதற்குக் காரணமான பிரகிருதியும் இந்தத் தத்துவங்களின் முக்கிய காரியங்களும் ஆகி, காரிய காரண ரூபமாகக் காணப்பட்டுக் கொண்டு, சுவாபாவிகங்களும் அனந்தங்களுமான ஞானம், பலம், ஐசுவரியம், வீரிய சக்தி தேஜசவுசீரிய, வாதசல்லய சௌரிய, தைரியாதி சகல கலியாண குணங்களுக்கும் ஆசிரயனாகி கிரியா சொரூபங்களாலேயும் கர்த்துரு சொரூபங்களாலே÷யும், சேதனா சேதனங்களையெல்லாம் ரட்சித்து வருகின்றான். வேதங்களுக்கு அதிபதியும் வேத வேதாந்தங்களினால் அறியப்படுவோனும், வேத வேதாந்த சாஸ்திரங்களும், அந்த ஸ்ரீவிஷ்ணுவேயன்றி வேறல்ல. சாஸ்திர ஜன்யம், விவேக ஜன்யம் என்று வழங்கப்படும் இரண்டுவித ஞானமும், முதல் வேத பிரவர்த்தனான பிரமாவும் ஸ்மிருதி பிரவர்த்தகரான மனு முதலானவரும், இந்த அச்சுதனேயாவன். அபக்ஷயாதி தோஷங்களை அடையாமல் ஜனன ரகிதமும் அட்சரமும் நித்தியமுமான பரப்பிரமம் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும்! அந்தப் பிரமமே, பக்த பரிபாலானார்த்தமாக இந்தப் புனிதப் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் சகல கல்யாண குணங்களும் பூரணமாக விளங்கும்படி புரு÷ஷாத்தமன் என்கின்ற அரீச்சாரூபியாய்த் திருவவதாரஞ்செய்தருளி விளங்கா நின்றது. ஆகையால் அந்தக் கேசவனைச் சிந்தித்து சரணடைந்து நிற்கிற அடியேனிடத்தில் சத்கிரியா யோகங்களுக்குப் பங்கம் ஏற்படும்படி உண்டாகும். ராகத்து வேஷலோப மோகாதி துர்க்குணங்கள் சாந்தமாகக் கடவன! என்று கண்டு முனிவர் பரமமான பிரமபார ஸ்துதியை ஜபித்து கேசவனை ஆராதித்து சித்திபெற்றுப் பரமபதத்திற்குச் சென்றார்.

இனி மாரிஷை என்னும் கன்னிகையின் முந்திய பிறவியின் சரிதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், இதைச் சொல்வதால் எனக்குப் பெரியதொரு காரிய சித்தியும் இதைக் கேட்பதால் உங்களுக்கு மேன்மையான பல சித்தியும் உண்டாகும். உருவின் கர்ப்பத்தில் ஜனித்த இந்த மாரிஷை பூர்வஜன்மத்தில் ஓர் அரசனின் பத்தினியாக இருந்தாள். புத்திரப் பேறடையாமலேயே இளவயதில் விதவையானாள். பிறகு பக்தியுடன் ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வந்தாள். அதனால் அந்த எம்பெருமான் திருவுள்ளம் உவந்து, பிரத்யட்சமாகி அந்தப் பெண்ணைப் பார்த்து, பெண்ணே! உனக்குப் பிரியமான வரத்தைக் கேள் என்றார். அதற்கு ராஜபத்தினியும் சுவாமியைப் பார்த்து, சுவாமி! அடியேன் இளவயதிலேயே வைதவ்யத்தையடைந்து சந்தானமற்ற துர்த்தசையில் இருக்கிறேன். இதனால் எனது இந்தப் பிறவியே வீணாயிற்று! இனி உம்முடைய கருணையால் அடியேனுக்கு ஜன்ம ஜன்மங்களிலேயும் சர்வ ஜகத் பூஜ்யர்களான புருஷர்களும் பிரமனுக்கு இணையான புத்திரனும் உண்டாக வேண்டும். நானும், சகலஜன இருதயானந்தகரமான அழகோடு, அயோநிஜையாய்ப் பிறக்க வேண்டும். தேவரீர், கிருபை கூர்ந்து இந்த வரங்களை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். வணங்கி வழிபட்டாள். தன் முன்பு வழிபாடு செய்த அந்த வனிதையை விஷ்ணு பகவான் தமது தாமரை மலர்க்கரங்களால் எடுத்து; பெண்ணே! உனக்கு வேறொரு பிறவியிலே பிரசித்தியும் புகழும் உடையவர்களாய் மகா உதாரகுணமுள்ள கணவர்கள் பத்துப்பேர் உண்டாவார்கள். மகாத்மாவாகவும்; பலபராக்கிரமத்துடன் பிரமனுக்கு சமானமாகவும் உள்ள மகன் ஒருவனும் பிறந்து, திரிலோகமும் நிறையும் படியான சந்தானத்தையுடையவனாய் அனேக வமிசங்களுக்குக் கர்த்தாவாக இருப்பான். நீயும் பேரழகும் நற்குணங்களும் கொண்ட பதிவிரதையாய் அயோநிஜையாய், சகல ஜனங்களுக்கும் இருதய ஆனந்தமுண்டாகும்படி இருக்கக் கடவாய்! என்று அருளிச் செய்து அந்தர்த்தானமானார். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணனுடைய கிருபையால் இச்சித்த வரங்களைப் பெற்ற அந்த ராஜபத்தினியே இப்பொழுது மாரிஷையாக பிறந்திருக்கிறாள். ஆகையால் பிரசேதசர்களே; அந்தக் கன்னிகையை நீங்கள் ஏற்பீராக என்று சந்திரன் சொன்னான். உடனே பிரசேதசரர்கள் தங்கள் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார்கள். மரங்களும் தங்கள் கன்னிகையான மாரிஷையை கொடுக்க, அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு அந்த மங்கையிடம் பிரசேதசரர்கள் பதின்மராலும் மகானுபாவனான தக்ஷப் பிரஜாபதி பிறந்தான். இந்தப் பிரஜாபதியே பூர்வத்தில் பிரமாவினுடைய தக்ஷிண அங்குஷ்டத்திலிருந்து பிறந்திருந்தான். மகா தபசியாசியான அந்தத் தக்ஷன், பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்து சரங்களும் அசரங்களும் இருபாதங்களும், நான்கு பாதங்களுமான ஐந்து ஜாதங்களைப் படைத்து பிரமாவின் ஆக்ஞையைப் பரிபாலித்தான். அந்த விவரத்தைக் கேளுங்கள்.

தக்ஷன் ஐம்பது பெண்களைப் பெற்றான். அவர்களில் பத்துப்பெண்களைத் தருமனுக்கும் பதின்மூன்று பெண்களை காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் கொடுத்தான். அப்பெண்களிடம் தேவ; தைத்ய, தானவ புசங்க, கந்தர்வ, தேவர்கள் ஜனித்தார்கள். மைத்ரேயரே! அது முதலாகத்தான் பிரஜைகள் ஆண் பெண் உடலுறவினால் பிறந்து வருகின்றனர். அதற்கு முன் பூர்வ காலத்திலே தவம் மிகுந்த மகாத்மாக்கள் வெறும் தரிசன ஸ்பரிச சங்கல்பத்தினாலேயே சந்தானங்களை உண்டாக்கி வந்தனர். இவ்வாறு பராசரர் கூறி நிறுத்தினார். அப்போது மைத்ரேயர், அவரை நோக்கி, முனிவரே பூர்வத்தில் தக்ஷன் என்பவன் பிரும்மாவின் வலது பாதத்தின் கட்டை விரலில் பிறந்தான் என்று கேட்டிருக்கிறேன். இப்போது பிரசேதசர்களால் பிறந்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த விஷயம் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சந்திரனுக்குப் பாட்டனான தக்ஷன், திரும்பவும் அவனுக்கு எப்படி மாமனானான்? என்று கேட்க பராசரர் கூறலானார். சகல பூதங்களுக்கும் உற்பத்தியும் அழிவும் நித்தியம்! ஆகையால் திவ்ய ஞானமுடைய முனிவர்களுக்கு இதில் சந்தேகம் உண்டாவதில்லை. அவர்கள் மயங்குவதுமில்லை தக்ஷன் முதலான சகல தேவ முனிவர் கூட்டமும் யுகந்தோறும் பிறந்து லயத்தை அடைந்து வருகின்றனர். ஆகையால் இதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. பூர்வகாலத்தில் வயதும் இல்லை. பெரியவன் சிறியவன் என்று வேறுபாடும் இல்லை. தவத்தாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்களே மேலானவராகக் கருதப்பட்டார்கள்! என்றார் பராசரர். முனிவரே! தேவர்கள்; தானவர்கள், கந்தருவர்கள், ராக்ஷசர்கள் முதலானவர்களின் உற்பத்தியை எனக்குத் தெளிவாகக் கூறவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். கமலாசனான பிருமனின் நியோகத்தால் முன்பு தேவர்கள் ரிஷிகள்; கந்தர்வர்கள்; அசுரர்கள், பன்னகாதி பூதங்கள் முதலானவர்களைத் தக்ஷன் தனது சங்கற்பமாத்திரத்தாலேயே சிருஷ்டித்தான். அவை அபிவிருத்தியாகாமல் நசித்துப் போனதைக் கண்டு, அவன் மீண்டும் பிரஜாசிருஷ்டியில் முயன்றான். அதற்காக வீரணப் பிரஜாபதியின் மகளான அசிக்கினி என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் அரிய சுவர்கள் என்கிற பெயரால் புகழ்பெற்று, பிரஜாவிருத்தி செய்ய எத்தனித்தார்கள். அப்போது நாரத முனிவர் அவர்களிடம் வந்து, அரிய சுவர்களே! பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்த நீங்கள் ஒரு காரியத்தை முன்னதாகச் செய்ய வேண்டும். அதாவது பூமியின் நிலப்பரப்பையும் உயர்வையும் தாழ்வையும் அறிய வேண்டும். நீங்கள் பாலியர்கள் ஆகையால் அதனை அறியமாட்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் பிரஜைகளைச் சிருஷ்டிப்பது எப்படி? தடையில்லாமல் எங்குமே செல்லும் திறமையுடைய நீங்கள் பூமியின் அளவு பரிமாணங்களை ஏன் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பூமி பரிமாணத்தை அறிந்து வருகிறோம் என்று கூறிவிட்டு நான்கு திக்கிலும் சென்று, சமுத்திரத்தில் சேரும் நதிகளைப் போல் திரும்பி வராமலேயே மறைந்து விட்டார்கள். அவ்வாறு அரியசுவர்கள் நாசமடைந்ததைப் பிரசேதசனான தக்ஷன் கேட்டுத் திரும்பவும் வீரண புத்திரியான அசிக்கினியிடத்தில் ஆயிரம் மக்களைப் பெற்றான். அவர்கள் சபளாசுவர்கள் என்ற பெயருடன் பிரஜா சிருஷ்டி செய்ய எத்தனித்தனர். அப்போது முன்போலவே நாரத முனிவர் வந்து முன் சொன்னது போல அவர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் சரிதான் என்று தங்கள் மூத்த சகோதரர்கள் சென்ற மார்க்கத்திலேயே பூமியின் பரிமாணத்தை அறிந்து வரச்சென்று திரும்பி வராமலே போய்விட்டார்கள். அதுமுதல், தூரதேசதனான சகோதரனைத் தேடிக்கொண்டு ஒருவன் சென்றால் நாசமடைவான்! என்பது சொல் வழக்காயிற்று.

பிறகு சபளா சுவர்களும் நாசம் அடைந்ததைத் தக்ஷன் கேள்விப்பட்டு மிகவும் கோபங்கொண்டு நாரதரை அழைத்து, நாரதா! எங்குமே நிலைபெறாமல் திரிந்து கொண்டேயிருப்பாயாக என்று சபித்தான். மீண்டும் தக்ஷன் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து, அசிக்கினியிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களிலே பத்துப்பெண்களைத் தருமனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தான். அரிஷ்டநேமிக்கு நால்வரையும், வெகு புத்திரனுக்கு இருவரையும், ஆங்கிரசுக்கு இரண்டு பெண்களையும், பிருசாசுவனுக்கு இரண்டு பெண்களையும் கொடுத்தான். முதல் பத்துப் பெண்களாகிய அருந்ததி, வசு, ஜாமி, லங்கை, பானு, மருத்வதி, சங்கல்பை, முகூர்த்தை, சாத்தியை, அசுவை என்று சொல்லப்பட்ட கன்னிகளைத் திருமணஞ்செய்து கொண்ட தருமன், விசுவையின் மூலம் விசுவ தேவதைகளையும், சாத்தியையிடம் சாத்தியர்களையும், மருத்துவதியிடம் மருத்தவத்தர்களையும், முகூர்த்தையிடம் முகூர்த்தர்களையும், பானுவிடம் பானுக்களையும், லங்கையிடம் சகோஷனையும், ஜாமியிடம் நாகவீதி என்ற திவ்யமார்க்க அபிமானியையும், அருந்ததியிடம் பூமியைச் சேர்ந்த பொருள்கள் அனைத்தையும் சங்கல்பையிடம் சங்கல்ப்பன் என்பவனையும் பெற்றான். அவர்களில் அபாரமான பலமும் தேஜஸும் உடையவர்களாய் விளங்கும் அக்கினி முதலான வசுக்களின் வமிசத்தை விவரமாகச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆபன், துருவன், சோமன், அனிலன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலான வசுக்கள் எண்மர் ஆவர். அவர்களில் ஆபனுக்கு வைஸ்தப்த்தன், சிரமன், சிராந்தன், துனி என்ற பிள்ளைகள் உண்டானார்கள். துருவனுக்கு சகல உலகங்களையும் நடத்தும் காலன் உற்பத்தியானான். சோமனுக்கு வர்ச்சன் என்ற மகன் பிறந்தான். அவனால்தான் ஜனங்களுக்கு வர்ச்சஸ் என்ற பிரகாசம் உண்டாகிறது. தருமனுக்கு மனோகரை என்பவளிடம் திரவிணன், உதவகன், சிசிரன், பிராணன், ரமணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அனலனுக்கு சிவை என்பவளிடத்தில் புரோசவன், அவிக்தி, யாதகதி என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அனலன் என்றால் அக்கினியாகும். ருத்திர வீரியத்தை அக்கினியே ஏற்றுக்கொண்டு வழியில் நாணற் புதரில் விட்டதால், சுப்ரமணியரை அக்கினி புத்திரன் என்றும் இங்கு கூறப்படுகிறது. சாகன் முதலியோர், குமாரனின் தம்பியர் ஆவர். அனலனுக்கு நாணற்புதரிலே குமாரன் என்று சொல்லப்படும் சுப்பிரமணியன் உண்டானான். அவனுடைய முதுகிலிருந்து, சாகன், விசாகன், நைகமேஷன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுப்பிரமணியன் கிருத்தைகளின் ஸ்தன்ய பானஞ் செய்ததால் அவர்களுக்குப் பிள்ளையாகிக் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். பிரத்யூஷனுக்கு தேவன் என்ற முனிவன் ஜனித்தான். அவனுக்க பொறுமையும் புத்தியும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவன் பிரகஸ்பதி, அந்தப் பிரகஸ்பதிக்குச் சகோதரியான ஒருத்தி யோக சித்தியுடையவளாய், விரக்தியடைந்து பிரமசரியத்தோடு உலகமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் வசுக்களில் எட்டாவதான பிரபாசனனுக்கு மனைவியாகி விசுவகர்மாவைப் பெற்றாள். அவன் விசித்திரங்களான அநேக சிற்பக்கலைகளை அறிந்தவனாய் தேவதச்சனாகி அநேக திவ்ய ஆபரணங்களையும் விமானாதிகளையும் நிர்மாணஞ் செய்தான்.

அவன் செய்த சிற்பங்களில் சிலவற்றை அறிந்துதான் பூவுலகிலுள்ள ஜனங்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணரசியிடம், அனஜகபாத், அகிர்ப்புத்தினியன், துவஷ்டா, ருத்திரன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் துவஷ்டாவுக்கு விசுவரூபன் என்னும் மகாதவசியான புத்திரன் ஒருவன் பிறந்தான். அறிஞனான ருத்திரனுடைய அமிசமாய் அரண்பகுரூபன், திரியம்பகன், விருஷாகபி சம்புகபர்த்தி, ரைவதன், மிருக வியாழன், சர்வன் கபாலி என்னும் பதினொருவர் பிறந்து, ருத்திரன் என்ற பெயரைப் பெற்று, திரிலோகாதிபதிகளாய் விளங்குகிறார்கள். இவர்களிடமிருந்து அளவற்ற தேஜஸ் வாய்ந்த நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இவ்விதமிருக்க காசிபருக்கு மனைவியாக இருந்த அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரசை, கஷை சுரபி, வினதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்ற பெயருடைய பதின்மூன்று பத்தினிகளில் அதிதி என்பவளுக்குப் பூர்வத்தில் சாட்சுஷ மன்வந்தரத்திலே துஷிதர் என்ற பன்னிரண்டு தேவதைகள். வைவஸ்வத மனுவந்தரம் வரும்போது நாம் யாவரும் அதிதியின் கர்ப்பத்திலே ஜனிக்க வேண்டும்! என்று நிச்சயித்து கொண்டே பிறந்தார்கள். அவர்கள் இந்திரன் விஷ்ணு அரியமன் தாதா; துவஷ்டா, பூஷா, விவசுவான், சவிதா, மித்திரன், வருணன், அமிசு, பகன் என்ற பெயர்களைப் பெற்று, துவாச ருத்திரர்கள் என்று வழங்கப்படுகின்றனர். இப்படியாக வைவஸ்வத மனுவந்தரத்திலே ஆதித்தியர் என்று சொல்லப்படுவோர், சாட்சுஷ மனுவந்தரத்தில் துஷிதர் என்று வழங்கப்பட்டனர். சந்திரனுக்கு மனைவியான அசுவினி முதலான இருபத்தேழு பெண்களுக்கும் காந்தியுள்ள மக்கள் உண்டானார்கள். அரிஷ்டநேமியின் பத்தினிகள் நால்வருக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். வெகுபுத்திரனுக்கு பத்தினிகளான இருவரிடத்திலும் காற்று, வெயில், மழை, துர்ப்பிஷம், இவற்றுக்கு ஏதுக்களாய் கபில வர்ணமும் இரத்த வர்ணமும் அரித்ராவர்ணமும், நீலவண்ணமும் கொண்ட நான்கு மின்னல்கள் உண்டாயின. ஆங்கிரசுக்கு பிரம ரிஷிகள் துதிக்கத்தக்க மேன்மை பெற்ற பிரதியங்கிரகங்கள் என்ற மந்திரங்கள் உதித்தன. பிருசாசுவனுக்கு, திவ்விய பாணங்கள் பிறந்தன. இவ்விதமாகக் கல்பாதி காலத்திலே உண்டான முப்பத்து முக்கோடி தேவதைகளும், தினந்தோறும் சூரியன் உதயமாகி மறைவதைப் போல ஒவ்வொரு மனுவந்தரத்திலும் பிறந்து கொண்டே வருவார்ரகள். இவர்கள் சுயஇச்சைப்படி பிறப்பார்கள். திதி என்பவளிடத்தில் காசிபருக்கு இரணியகசிபுவும், இரணியாக்ஷனும், விப்ரசித்தி என்ற ராக்ஷதனுக்குப் பாரியையான சிம்மிகை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அவர்களில் இரணியகசிபுக்கு அனகிலாதன், ஹிலாதன், பிரகலாதன், சம்கிலாதன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே பிரகலாதன் ஜீதேந்திரியனும், மகா பாகவதனுமாய் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தியுடையவனாய் விளங்கி வந்தான்.

தைத்திய ராஜனான இரணியகசிபுவின் கட்டளையினால், அசுரர் கொளுத்திய அக்கினியும் ஸ்ரீவாசுதேவனது இதயகமலத்தில் வசித்ததால் மகாத்மாவான பிரகலாதனைத் தகிக்கமாட்டாமற் போயிற்று. பிரகலாதன் என்னும் அந்த மகானுபாலன், பாசங்களினால் கட்டப்பட்ட கடலின் நடுவேயிருந்து அசைந்த போது அநேக மலைகளும் காடுகளும் நடுங்கின. பூமண்டலமே நடுங்கியது. எங்குமே எம்பெருமானைப் பாவித்ததால், அந்த மகானின் உடல் மலைபோலக் கடினமாயிற்று. அதனால் அசுரர்கள் பிரயோகித்த பாணங்கள் அவரைப் பாதிக்கவில்லை. இரணியகசிபு ஏவிய லிஷாக்கினிச் சுவாலை வீசும் சர்ப்பங்கள் அந்த மகாத்மாவை பீடிக்கவில்லை. பர்வதங்களால் அமுக்கப்பட்ட போதும், ஸ்ரீவிஷ்ணு ஸ்மரணை என்ற கவசத்தால் பிரகலாதன் காக்கப்பட்டு, மரணமடையாமற் போனான். சொர்க்கத்தின் உயரமான இடத்திலிருந்து, பிரகலாதனை இரணியகசிபு கீழே தள்ளியபோதும் அந்த மகாத்மாவை பூமாதேவி ஏந்திக் கொண்டாள். அதன்பிறகு இரணியகசிபு மிகவும் ஆத்திரமடைந்து சம்சோஷகன் என்ற வாயுவை ஏவினான். ஆனால் மதுசூதனான விஷ்ணுவின் இருதயத்திலே பிரகலாதன் இருந்ததால், அந்த வாயு பிரகலாதனிடம் புகுந்து நாசமடைந்து போயிற்று. திக்கு கஜங்கள் எல்லாம் இரணியகசிபுவின் உத்தரவினால் பிரகலாதன் மீது பாய்ந்து தந்தங்கள் ஒடிந்து, மதமழிந்தன. நைத்தியப் புரோகிதர்களால் நிருமிக்கப்பட்ட கிருத்தியைகள். கோவிந்த சரணாரவிந்தங்களில் மனதைச் செலுத்தியிருந்த அந்த மஹா யோகிந்தனைப் பாதிக்காமற் போயின. மகாமாயாவியான சம்பராசுரன் என்பவன், புண்ணிய புருஷனான பிரகலாதன் மீது ஏவிய அனந்த மாயைகளும் ஸ்ரீவிஷ்ணுவின் திருக்கையால் விடப்பட்ட சக்கராயுதத்தால் சாம்பலாயின. இரணியகசிபுவின் சமையற்காரர்கள் ஆலகாலம் என்ற கொடிய விஷத்துடன் கலந்து வைத்த அன்னமானது பிரகலாதனின் உதரத்தில் ஜீரணமாகி விட்டது. சர்வ பூதசமனும் சர்வ உயிர்களுக்கும் மித்திரனான அந்த மகாத்மா, தன் சரீரத்தைப் போலவும் தன் பிள்ளைகளைப் போலவும், சர்வ பூதங்களையும் லாலனை செய்து வருவான். அந்த ஞானி சத்புருஷர்களுக்கெல்லாம் உபமானமாகப் புகழ்பெற்று விளங்கினான்.

16. பிரகலாத சரித்திரப் பிரச்னை

பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத் காரணமான பிரமம் என்ற பொருளையும் தங்களிடம் விளக்கமாகக் கேட்டறிந்தேன். ஆனால் தைத்ய புங்கவனான பிரகலாதனே; அக்னியும் ஆயுதங்களும் அழிக்கமாட்டாமற் போயின என்றும் சமாகித சித்தனான அந்தத் தைத்திய உத்தமன் மலைகளினால் அமுக்கப்பட்ட போதிலும் மரணமடையாதிருந்தான் என்றும் அந்தப் பிரகலாதாழ்வானின் பெருமைகளையெல்லாம் நீங்களே புகழ்ந்து கூறினீர்கள்! ஆகையால் தத்துவஞானமும் பகவத் பக்தியுமுடைய பிரகலாத மகானுபாவனின் ஒப்பற்ற சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். அந்த மகதர்மிஷ்டனை; அசுரர்கள் ஏன் ஆயுதத்தால் புடைத்தார்கள்? பாரங்களால் கட்டிச் சமுத்திரத்தில் ஏன் போட்டார்கள்? திக்கஜங்களைக் கொண்டு அவனை ஏன் அவர்கள் துன்புறுத்த வேண்டும்? அவனை ஏன் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள்? அவனை ஏன் அக்கினியில் போட்டு எரித்தார்கள்? அவன் மீது ஏன் சர்ப்பங்களை கடிக்கவிட்டார்கள்? இரணியகசிபுவின் சமையற்காரர், அன்னத்தில் விஷத்தை ஏன் கலந்து வைத்தார்கள்? இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன? அந்தப் பரமபாகவதரான பிரகலாத ஆழ்வான் சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். இந்தச் செய்கைகள் எதனாலும் பிரகலாதன் மரணமடையாமல் இருந்தது ஆச்சரியமல்ல! ஏனென்றால் ஸ்ரீவிஷ்ணுவின் சரணாவிந்தங்களிலே சித்தத்தை நிலைபெற வைத்தவனை நிக்கிரகிக்க வல்லவன் இந்த ஜகத்திலேயே இல்லையே? ஆனால் தங்கள் குலத்தில் பிறந்த பிரகலாதன், ஸ்ரீகேசவனை ஆராதனை செய்து அசுரரிடையே பகைமை ஏற்படுத்தியதா? அதுவும் விஷ்ணு பக்தரான பிரகலாதாழ்வானுக்கு அசுரர்கள் ஏன் அத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள்? இவற்றையும் பிரகலாதாழ்வானின் பிரபாவங்களையும் கேட்பதற்கு நான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிற÷ன். தாங்கள் கிருபை கூர்ந்து அதைக் கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.

17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.

18. அசுரப்புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.
அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது. விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புரு÷ஷாத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புரு÷ஷாத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புரு÷ஷாத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து, விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய், மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான். தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான். இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய் அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான். யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன. பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம் விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால், தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான். புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு, வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான். பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே! பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே! குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே! மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும், வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே! சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே! ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே! நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே! அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்! எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ, எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ, இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன் என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம் ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான். அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால் நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான். அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா! நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன். உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார். சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும் அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும். மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது. இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான். எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும் இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்! மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும் போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும், பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும். இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன். உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும். சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான். புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன். சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.

குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால் பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார். பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான். இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப, அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான். பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி, மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார். தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி, உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு, அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.

மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன். எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும், அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ, அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில் சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது. கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன் இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே, சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.

21. தனு முதலியோர் வமிச வரலாறு

மைத்ரேயரே! இத்தகைய புகழ்மிக்க பிரகலாதனனுக்குச் சிபிபாஷ்கலன், விரோசனன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். விரோசனனுக்கப் பலிச் சக்கரவர்த்தி பிறந்தான். பலிக்கு பாணாசுரன் முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தனர். இது நிற்க, இரணியாட்சனுக்குச் சர்ச்சுரன் சகுனி, பூதசந்தாயனன், மகாநயான், மஹாபாஹி, காலநாபன் என்ற பிள்ளைகள் அறுவர் பிறந்தார்கள். இது திதியின் வமிசமாகும். இனி காசிபருக்குப் பாரியையான தனு முதலிய பெண்களின் வமிசங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள் தனு என்பவளுக்கு துவிமூர்த்தா, சம்பரன் அஜோமுகன், சங்குசிரன், கபிலன், சங்கரன், ஏகவத்திரன், தாரகன், சொர்ப்பானு, விருஷர்பர்வா, புலோமன், விப்ரசித்தி முதலிய அதிபலசாலிகளான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே சொர்ப்பானுவுக்குப் பிரபை என்பவளும் விருஷபர்வாவுக்குச் சர்மிஷ்டையென்பவளும், வைசுவாநாதனுக்கு உபதாநவி அயசிரை புலோமை காலகை என்ற நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள். அவர்களில் புலோமை, காலகை என்பவர்கள் மரீசிக்கு மனைவியாயினர். அவர்களுக்கு புலோலமர், காலகேயர் என்ற புகழ்பெற்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இரணியனுக்குச் சகோதரியான சிம்ஹிகை என்பவள் விப்பிரசித்திக் மனைவியாகி திரியமிசன் சல்லியன் நபன் வாதாவி இல்லலன், நமுசிககிருமன், அந்தகன், நரகன், காலநாபன் ராகு என்ற மகாசக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்றான். இவ்விதமாகத் தனுவென்பவனின் வமிச்தி மகாபலசாலிகளான அசுரர்கள் பலர் பிறந்தார்கள். இவர்களுக்கு சஹஸ்ர சங்கைகளாகப் புத்திர பவுத்திர சந்தானங்கள் உண்டாயின. முன்பு நான் சொன்னது போல ஆத்ம ஞானியான பிரகலாதாழ்வானின் வமிசத்தில் நிவாதகவசர் என்ற தைத்தியர் தோன்றினர். தாம்பரை என்பவளுக்குக் காசிபர் மூலமாக சுதி, சேனி, பரசி, சுக்ரீவை கிருத்தரி, சுசி என்ற ஆறுபெண்கள் பிறந்தார்கள். அவர்களில் சுகிக்குக் கோட்டான்களும், காக்கைகளும் பிறந்தன. சேனி என்பவளுக்குப் பருந்துகளும், பரசிக்குச் செம்போத்துகளும், கிருத்திரிக்கு கழுகுகளும்; சுகிக்குத் தண்ணீர்ப் பறவைகளும், சுக்ரீவைக்குக் குதிரைகளும் ஒட்டகங்களும் பிறந்தன. இது தாம்பரையின் வமிச விபரமாகும். இனி, விந்தைக்குக் கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களில் கருடன் சர்ப்பங்களைப் புசிப்பவனாய் கடூரமான ரூபமுடையவனாய் பறவையினத்துக்கெல்லாம் உயர்ந்தோனாய் புகழ்பெற்றிருந்தான். சுரசை என்பவளுக்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றலுடைய ஆயிரம் பாம்புகள் பிறந்தன. கத்துருவுக்குப் பலமும் தேஜசுடைய அநேக பணமண்டல மண்டிதங்களாயுள்ள அநேகம் நாகங்கள் உண்டாயின. அவை கருடனுக்கு வயப்பட்டிருந்தன. அந்த நாகர்களில் சேஷன், வாசுகி, தக்ஷகன், சங்கன், சுவேகன், மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், கார்க்கோடகன், தனஞ்சயன் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் விஷச்சுவாலையோடும் தந்தங்களுடனும் கூடிய முகங்களோடும் விளங்குவார்கள்.

குரோதவசை என்பவளுக்குப் பதினாயிரம் ராட்சச சர்ப்பங்களும், நிலத்திலும் நீரிலும் சஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்த குரோதவச கணம் என்ற பெயரைப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோரமானவர்கள். சுரபி என்பவளுக்கு மரங்களும், கொடிகளும், புற்களும் உண்டாயின. சுஷை என்பவளுக்கு யட்ச ராட்சதர்களும், மனு என்பவளுக்க அப்சரசுகளும், அரிஷ்டை என்பவளுக்கு மகாபலசாலிகளான கந்தர்வர்களும் பிறந்தார்கள். இந்தவிதமாக தாவர ஜங்கமங்களான காசிபரின் சந்தானங்களையெல்லாம் சொன்னேன். அவர்களுடைய புத்திர பவுத்திராதி சந்ததிகளோ எண்ணமுடியாத அளவில் பெருகின. மைத்ரேயரே! இது சுவாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பாகும். இனி வைவஸ்வத மனுவந்திரத்தில் வருணன் ஒரு யாகம் நடத்த, அதில் சதுர்முகப் பிருமன் ஹோதாவாகி அதை நிர்வாகம் செய்தான். அப்போது பிரஜா சிருஷ்டி செய்தவிதத்தை விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள். தேவ, ரிஷி, கந்தர்வ பன்னகாதிகளுக்கும் பிதாமகனான சதுர்முகன் நூதன சிருஷ்டி செய்ய காலம் பெறாமல் பூர்வத்தில் சுவாரோசிஷ மனுவந்தரத்திலே தன் சங்கல்பத்தால் உண்டான சப்தரிஷிகளை நோக்கி, வைவசுவத மனுவந்தரத்திலே நீங்களே பிரஜைகளைப் படையுங்கள்! என்று நியமித்தான். இவர்களும் அப்படியே செய்தனர். இது நிற்க. தேவர் தேவதைகளினாலே அசுரர்கள் எல்லாம் விநாசமாய்ப் போனதால், திதி என்பவள் புத்திர சோகமடைந்து அநேக காலம் தன் கணவரான காசிபரை ஆராதித்து வந்தாள். அவர் அதனால் மகிழ்ந்து திதியை நோக்கி, பெண்ணே! உனக்கு பிரியமான வரத்தைக் கேள்! என்றார். அதற்கு அவள், எனக்கு இந்திரனைச் சங்கரிக்கத் தக்கவனான  ஒரு மகன் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். அதைக் கேட்டதும் காசிபமுனிவர் அவளைப் பார்த்து எனது பிரிபுத்தினியே; உனக்கு இந்திரனை சங்கரிக்கத்தக்க மகன் வேண்டும் என்றால் நூறு ஆண்டுகள் சம சித்தத்துடன் சுசியாய்க் கர்ப்பத்தைத் தரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லி, அவளுடன் கூடிக் கலந்தார். அதனால் அவருடைய மனைவி கருவுற்று நித்தியமும் சுசியாய் விரதம் அனுஷ்டித்து வந்தாள். இப்படியிருக்க இந்தச் செய்தியை இந்திரன் அறிந்தான். உடனே அவன் சூழ்ச்சி செய்து அந்த ரிஷிபத்தினியின் அருகில் வந்து இருந்து; அவளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவளது கர்ப்பத்தை சிதைக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியிருக்க சிலநாள் குறைய நூறு ஆண்டுகள் நிறையும் காலத்தில் ஒருநாள் திதிதேவி பாதசுத்தி செய்யாமல் படுக்கையில் படுத்து நித்திரை செய்தாள். அப்போது இந்திரன் அவள் சுத்தமில்லாமல் அசுசியாக இருப்பதையறிந்து வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு; அவள் வயிற்றிலே சூட்சும ரூபத்துடன் சென்று அந்தக்கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துண்டித்தான். அப்போது அந்தச் சிசு, பெருஞ்சப்தத்துடன் ரோதனம் செய்ய இந்திரன், ரோதனம் செய்யாதே என்று பலமுறைகள் கூறி கோபங்கொண்டு அந்த ஏழு துண்டுகளையும் மறுபடியும் எவ்வேழாகத் துண்டித்தான். அந்த நாற்பத்தொன்பது துண்டங்களுக்கும் மரோதி (ரோதனம் செய்யாதே) என்று சொன்ன காரணத்தால் மருத்துக்கள் என்ற நாமதேயம் உண்டாயிற்று. பிறகு, அந்த மருத்துக்கள் விவேக சத்துவ சம்பன்னராய் இந்திரனுக்கு உதவலானார்கள்.

22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

மைத்ரேயரே! பூர்வத்தில் மிருது மாமன்னன் மாமுனிவர்களால் முடிசூட்டப் பெற்ற போது கிரக நட்சத்திரங்களுக்கும் ஓஷதிகளுக்கும் பிராமணர்களுக்கும் வேள்விகளுக்கும், தவங்களுக்கும், சந்திரனை அரசாக பிருமதேவன் நியமித்தான். குபேரனை ராஜாக்களுக்கு அதிபதியாகவும் வருணனை ஜலத்துக்கு அதிபதியாகவும், விஷ்ணு என்னும் சூரியன் ஆதித்யர்களுக்கும் அதிபதியாகவும், தக்ஷனை கர்த்தமர் முதலிய பிரஜாநாகருக்கு அதிபதியாகவும், இந்திரனை வசு ருத்திர, ஆதித்திய பிரமுகமான தேவதைகளுக்கு அதிபதியாகவும், பிரகலாதனைத் தைத்யதானவருக்கு அதிபதியாகவும், யமதர்மனை பிதுர்தேவதைகளுக்கு அதிபதியாகவும், ஐராவதத்தை யானைகளுக்கு அதிபதியாகவும், வாசுகியை பாம்புகளுக்கெல்லாம் அரசாகவும் விருஷப ராஜனைப் பசுக்களுக்கு அதிபதியாகவும், ஹிமவானை மலைகளுக்கு அரசாகவும், கபிலரை முனிவர்களுக்கு அரசாகவும், சிங்கத்தை மிருகங்களுக்கு அதிபதியாகவும், கல்லால மரத்தை மரங்களின் அரசாகவும் ஏற்படுத்தி, இவ்விதமாக அந்தந்த சாதிகளுக்குத் தக்கபடி தலைவர்கள் ஆகும்படி ராஜ்யாதிபத்யங் கொடுத்தருளினான். இப்படிச் செய்த பிறகு அந்த பிரம்மா வைராசப் பிரஜாதிபதியின் குமாரனான சுதன்வாவைக் கீழ்த்திசைக்கு அதிபதியாகவும், கர்த்தமப் பிரஜாபதியின் தனயனான சங்கபதனை தென்திசைக்கு அதிபதியாகவும், ரஜசு என்ற பிரஜாபதியின் மகனான கேதுமா என்பவனை மேலைத்திசைக்கு அதிபதியாகவும், பர்வசன்யப் பிரஜாபதியின் மகனான ஹிரண்யரோமா என்பவனை வடதிசைக்கு அதிபதியாகவும் நியமித்தான். அவர்களால் தீவுகள், சமுத்திரங்கள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமண்டலம் யாவும், இது வரையில் தங்கள் எல்லைகளிலே தர்மமாக பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. இப்போது நான் சொன்னவர்களும் மற்ற அரசர்களும் ஜகத்தை ரக்ஷிப்பதில் புகுந்துள்ள ஸ்ரீமந்நாராயணனுடைய விபூதியாக இருப்பவர்கள் என்று அறிந்து கொள்வீராக. பூர்வத்தில் இருந்தோரும் இப்போது இருப்போரும் இனிமேல் உண்டாவோருமான பூதாதிபதிகள் யார் யாருண்டோ அவர்கள் அனைவரும் சர்வமயனாக இருக்கும். விஷ்ணுவின் அம்ச பூதர் என்று அறிவீராக. தேவ, தானவ பைசாச மானுட, பட்சி, மிருக, பன்னதாதிபதிகளும், கிரகாதிபதிகளும் விருட்ச பருவதாதிபதிகளுமாக இருப்போரும், சென்றோரும் உண்டாவோரும், யாவரும் சர்வ பூதமயனான ஸ்ரீவிஷ்ணுவின் அமிச பூதரேயன்றி வேறல்ல.

மைத்ரேயரே! ஜகத் ரட்சண தீட்சிதனும், சர்வேசுவரனுமான ஸ்ரீஹரியைத் தவிர யாருக்கும் காக்கும் திறமையில்லை இதுமட்டுமல்ல. அவன் சத்துவ குணாச்ரியமான சொரூபத்தோடு எப்படி ஜகத்தை ரட்சிக்கிறானோ அப்படியே ராஜச தாமச குணங்களை அங்கீகரித்துப் படைப்புக் காலத்தில் படைப்புக் கர்த்தாவாகிச் சங்காரஞ்செய்துகொண்டும் இருக்கிறான். அந்த ஜனார்த்தனன் சிருஷ்டியிலும் நான்கு வகையின்னாய் அப்படியே ஸ்திதி சங்காரங்களிலும், நந்நான்கு பேதமுடையவனாகவும் இருக்கிறான். எப்படியெனில் முதல் அம்சத்தில் பிரமாவாகவும், இரண்டாவது அம்சத்தில் மரீசிப் பிரஜாபதிகளாகவும், மூன்றாவது அம்சத்தில் காலமாயும், நான்காவது அம்சத்தில் சகலபூதங்களாயும், ரசோகுணத்தை ஆஸ்ரயித்துப் படைப்பான். ஸ்திதிக் காலத்தில் சத்தவ குணாசிரயமான முதலமிசத்தினால் நானாவித திவ்ய அவதார ரூபிராயும், இரண்டாவது அம்சத்தினால் மனுவாதி ரூபியாயும், மூன்றாவது அம்சத்தில் காலரூபியாயும், நான்காவது அம்சத்தில் சகல பூதங்களிலிருந்தும் ரட்சிப்பான். சங்கார காலத்தில் தமோ குணத்தை ஆஸ்ரயித்து முதலம்சத்தால் ருத்ரரூபத் தரித்தும், இரண்டாவது அம்சத்தால் அக்னி; வாயு, அந்தகாதி ரூபங்களைக் கொண்டும், மூன்றாவது அம்சத்தால் காலசொரூபந் தரித்தும், நான்காவது அம்சத்தில் சர்வபூத அந்தரியாமியாக இருந்தும் சங்கரிப்பான். மைத்ரேயரே! இவ்விதமாகக் கல்பந்தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய கிரியைகளில் எம்பெருமானுக்கு நந்நான்கு பேதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிருமாவும் தஷாதிகளும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய லோகசிருஷ்டி ஹேதுக்களான லீலா விபூதிகளாகும். உபேந்திராதியவதார சொரூபங்களும் மனு முதலானவர்களும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய லோக சங்கார காரணங்களான விபூதிகளாகும். பிரம்மாவும் மரீசி முதலிய பிரஜாபதிகளும் ஆதிகாலம் முதலாகப் பிரளயகாலம் வரையிலும் சதுர்வித பூதசாதங்களைப் படைத்து வருகிறார்கள். ஆதிகாலத்தில் பிரம்மாவினாலும் இடையிலே மரீசி முதலிய பிரஜாபதிகளாலும் பிறகு அந்தந்த ஜந்துக்களாலும் படைக்கப்பட்டு வருகின்றன. படைப்புக்கெல்லாம் முக்கிய காரணம் காலம் கால சக்தியல்லாமல் பிரம்மாவும் தக்ஷõதிகளும் பிரஜைகளும் படைக்கமாட்டார்கள். ஸ்திதியும் இப்படியே கால சக்தியில்லாமல் நடைபெறாது.

பிரளயத்திலே ருத்திராதிகளும் கால சக்தியின்றி சங்கரிக்கமாட்டார்கள். மைத்ரேயரே! அநேக வார்த்தைகளினால் பிரயோசனமென்ன? எதனால் எது படைக்கப்படுகிறதோ, அந்தப் படைக்கப்படும் வஸ்துவின் படைப்பைக் குறித்துக் காரணமாக இருக்கும் அந்த வஸ்துவெல்லாம் எம்பெருமானின் திருமேனியேயாகும். இதுபோலவே, ஒன்றைச் சங்கரிக்கின்ற வஸ்து எதுவுண்டோ அதுவும் சங்கார ஹேதுவான ஜனார்த்தனனுடைய வுத்திர ரூபமாகும். ஸ்ரீவிஷ்ணுவே, சிருஷ்டியும் ரக்ஷணையும் சங்காரமும் செய்யும் ஜீவன்களுக்கு அந்தரியாமியாகிச் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களைச் செய்தருளுகிறான். இந்தவிதமாகவே சத்துவ, ராஜச, தமோ குணங்களில் புகுந்து சிருஷ்டிக்காலம் முதலிய காலங்களினால் மூன்றுவிதமாக இருக்கிற பிரம்மாதி ஸ்தாவாரந்தமான நாராயணனுடைய ரூபத்தை விவரித்தேன். இனிமேல் முக்தஜீவமயமான அவனுடைய ரூப அந்தரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பிரகிருதி குணவர்ச்சிதமும் ஞானகுணவத்தும் சுயம்பிரகாசமும் உபமான ரகிதமும், சகலபூத வியாபகமும், பிரம்மாதி ஜீவசாதங்களைவிட உயர்ந்த முக்த ஜீவ ஸ்வரூபமும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரஸ்வரூபம் என்று வழங்கப்படும். அதுவும் நான்குவிதமாக இருக்கும். இவ்வாறு பராசர மகரிஷி கூறிவிரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! ஞானமயமாய், நாராயணனுக்குச் சரீரபூதமான முக்த சொரூபம் நான்குவிதம் என்றீர்களே, அதைச்சற்று விளக்கமாகக் கூறவேண்டும்! என்று வேண்டினார். அதற்குப் பராசரர் பின்வருமாறு விளக்கம் கூறலானார். மைத்ரேயரே! உலகத்தில் விருப்பதற்கு உரிய பொருளைச் சம்பாதிப்பதற்குக் கருவியாக இருப்பது சாதனம் என்றும், இஷ்டவஸ்துவானது சாத்தியம் என்றும் சொல்லப்படும். மோட்சத்தை விரும்பும் யோகிகளுக்கு பிராணயாமம் போன்றவை சாதனமாயும் பரப்பிரம்மமானது சாத்தியமாகவும் உள்ளன. யோகிகளுக்கு முக்தி நிமித்தமாக யோக சாஸ்திரத்தினாற் பிறந்த பிராணாயாமம் முதலிய சாதனங்களுடைய ஞானமானது அந்த ஞானமய ஸ்வரூபத்திற்கு முதல் பேதமாகும். பாதமோட்சனார்த்தமாக யோகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு சாத்தியமாய் சாஸ்திரத்தினால் உண்டான ஆன்ம விஷயமான ஞானமானது இரண்டாவது பேதமாகும். இவ்விரண்டும் சாத்திய சாதன சம்பந்தத்தினாலே சேர்ந்ததாய், தேவ மனுஷியாதி பேதமில்லாத ஆன்மாவைப் பற்றி வியாபித்திருக்கிற தியான ரூபமான ஞானமானது மூன்றாவது பேதம். இந்த மூன்று வகையான ஞானங்களுக்கும் சாதனமாக இருத்தலாகிய விசேஷம் யாது உண்டோ அதைத் தள்ளுதலினாலே தோன்றும் ஆத்மசாட்சாத்காரமானது நான்காவது பேதம்! இந்த ஞானம் பொருளான ஆன்ம ஸ்வரூபமானது சாதனா அனுஷ்டானம் இல்லாததாய் ரூபாதிகளுக்கு கோசரமாகத்தாய் சுருக்கமின்றி வியாபித்திருப்பதாய், உபமான ரகிதமாய், தன்னாலேயே அறியத்தக்கதாய், விருத்தி க்ஷயாதிகளற்றதாய், குறிகளால் அறியப்படாததாய், உணவாசை முதலிய ஆறு ஊர்ஜிகமற்றதாய் பற்றாததாய் நின்று ஞானமயனான ஸ்ரீவிஷ்ணுபகவானுக்கு பிரமம் என்ற பெயர் கொண்ட சொரூபம் என்று வழங்கப்படும். எந்த யோகிகள் அந்த ஸ்வரூபத்திலே முடிவுகாலத்து நினைப்பின் சக்தியினாலே, வேறான நினைப்புகளையெல்லாம் தவிர்த்து, சகல உபாதிகளும் இல்லாமையாகிற லயத்தை அடைகிறார்களோ; அவர்கள் சம்சாரம் என்ற கழனியில் விதைப்பதற்கு உமி நீங்கிய அரிசியைப் போலாவார்கள்.

நான் இப்போது விவரித்த முக்த ஸ்வரூபத்துக்கு உள்ள சகல குணங்களையும் கொண்டதாய், நித்திய சுத்தமாய், சர்வாத்மகமாய், பரிபூரணமாய், வேறுகுணங்களில்லாததாய் கல்யாண குணங்களைக் கொண்டதாய், ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய உத்தம ஸ்வரூபம் ஒன்றுண்டு. அதுதான் பரப்பிரம்மம் என்று வழங்கப்படும். அந்த பரப்பிரம்மத்தை அடைந்த யோகியானவன் புனராவிருத்தி இல்லாமல், புண்ணிய பாவ வர்ஜிதனாய், சகல கிலேசமும் இல்லாதவனாய், அத்யந்த நிர்மலமான ஆனந்தானுபவஞ்செய்து கொண்டிருப்பான். அந்தப் பரப்பிரம்மத்துக்கு மூர்த்தம் அமூர்த்தம் என்று சொல்லப்பட்டு அழியாததாகையால் அக்ஷரம் என்ற பெயரைப் பெறும். ஏகதேசத்திலிருக்காத அக்கினியின் பிரபைச் சிறப்பு பரவலாக வியாபித்திருப்பதைப் போலவே, பரப்பிரம்மமான நாராயணனுடைய சக்தி சிறப்பானது. சகல ஜெகத்தையும் வியாபித்துள்ளது. அக்கினியின் அருகிலேயிருந்தால் பிரபைச் சிறப்பு அதிகமாக இருக்கும். தூரத்திலிருந்தால் அது சொற்பமாக இருக்கும். அதுபோலவே, ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியும் பிரமாதி ஸ்தாவராந்தமான ஜகத்தில் ஏறவுங் குறையவும் வியாபித்துள்ளது. அதன் விவரத்தையும் சொல்லுகிறேன். கேளுங்கள். பிரம்ம, விஷ்ணு ருத்திரரிடத்திலே, பிரம சக்தியானது அதிகஅளவில் வியாபித்திருக்கும் அதிலே பிரம ருத்திரர்களிடத்திலே அனுப்பிரவேசமாகவும் விஷ்ணுவினிடத்திலே சொரூபமாகவும் இருக்கும் என்று அறியவேண்டும். இனி, அவர்களைக் காட்டிலும் தக்ஷõதிகளும் அவர்களைவிட மனிதர்களும், அவர்களைவிட பசு, பட்சி சரீஷ ரூபங்களும், அவற்றை விட மரஞ்செடி கொடிகளும் முறைமுறையாகக் குறைந்திருக்கும். இவ்விதமாக உற்பத்தி நாசம் முதலிய விற்பங்களையுடையதாயும், கணக்கற்றதாயும், நித்தியமாயும் இருக்கிற இந்தப் பிரபஞ்சம் எம்பெருமானுக்கு ஒரு ரூபமாகும்! பூர்வத்தில் சொல்லப்பட்ட சர்வ சக்திகளையும் கொண்டவனுக்கு மூர்த்தமான வேறொரு ரூபமும் உண்டு. மந்திர ஜபாதி சகிதமான சாலம்பனம் என்ற மகாயோகத்தை பயிலு போது யோகிகளுக்குள்ளே அஸ்திர பூஷணாதி சகிதமும் திவ்வியமுமான விஷ்ணு தேவனுடைய அந்த ரூபந்தான் தியானஞ்செய்ய வேண்டுவதாகும். சித்தத்தை நிச்சலமாக்கி யோகாப்பியாசஞ் செய்யும் யோகியாருக்கு இப்போது நான் அறிவித்த தியானச் சிறப்பு சித்திக்கும். மைத்ரேயரே! அந்த எம்பெருமானுக்கு முன்பு சொன்ன சகலரூபங்களை விட பரமமான ரூபம் அந்த விஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறல்ல. அதுவே திருவுள்ளமுகந்த ஸ்வரூபம். ஏனென்றால், அந்த ஸ்ரீஹரியே சர்வாத்துமகமான பரப்பிரம சொரூபம். அவனிடமே சகல லோகங்களும் வஸ்திரங்களில் நூல்களைப் போலக் கலந்து கோப்புண்டு இருக்கின்றன. எப்படியெனில் சகல உலகங்களும் அவனாலே உண்டாகி, அவனிடத்திலேயே நின்றிருக்கின்றன. க்ஷராக்ஷரமயனான ஸ்ரீவிஷ்ணு, பிரகிருதி புருஷாதிகளையெல்லாம் அஸ்திர பூஷணங்களாகத் திரிந்திருப்பவன்-இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவர் பெருமானே! ஸ்ரீமந்நாராயணன் சகல ஜகத்தையும் அஸ்திரபூஷண சொரூபமாகத் தரித்திருக்கும் விதத்தை சொல்ல வேண்டும்! என்று கேட்டார்.

பராசரர் அதற்கு பின்வருமாறு விவரித்து கூறினார். அப்பிரமேயனாயும், சர்வ சக்தனாயும் சர்வேசுவரனாயும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானுக்குத் தெண்டம் சமர்ப்பித்து , என் பிதாமகனான வசிஷ்ட முனிவர் அருளிச்செய்த வண்ணம் ஸ்ரீமந்நாராயணனுடைய அஸ்திரபூஷணாதி சொரூபத்தை விவரிக்கிறேன்; கேளுங்கள். உலகத்தோடு ஒட்டாதவனும் பிரகிருதி குணராகிதனுமான ÷க்ஷத்திரக்ஞனே, கவுஸ்துபமணியாகவும் ஜகதாதி காரணமான மூலப்பிரகிருதியே! ஸ்ரீவச்சம் என்ற மறுவாகவும், புத்தியே! கவுமோதகி என்ற கதாயதமாகவும், சாமசாகங்காரமே பாஞ்சசன்னியம் என்ற சங்காகவும், சாத்விகங்காரமே சாரங்கம் என்ற வில்லாகவும், சலனாத்மகமான மனமே மகாவேகத்தில் வாயுவையும் மிஞ்சக்கூடிய சுதர்சனம் என்ற சக்கரமாகவும், பஞ்ச மஹா பூதங்களும், முத்து மாணிக்க மரகத இந்திர நீல வஜ்ஜிரமயமாய், பஞ்சவர்ணமான வைஜயந்தி என்ற வனமாலையாகவும், ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் அம்புகளாகவும், வித்தையே அத்யந்த நிர்மலமான நந்தகம் என்ற கத்தியாகவும், அவித்தையே அந்தக் கத்தியின் உறையாகவும் ஸ்ரீமந்நாராயணன் பிரகிருதி புருஷர்களையெல்லாம் அஸ்திர பூஷண சொரூபமாகத் தரித்துக் கொண்டு விசித்திர சக்தியுக்தனாகிச் சேதனருக்கெல்லாம் இதஞ்செய்தருள்வான். வித்தையும் அவித்தையும் சேதனமும் அசேதனமும் நாராயணனிடத்தில் தான் இருப்பவை கலா, காஷ்டா முகூர்த்த அகோராத்திர மாச அயன சம்வச்சரரூபமான காலமும் ஸ்ரீஹரி சொரூபமாகும். பூலோக புவர்லோக சவர்லோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், தேவ, மனுஷ்ய பசு, பக்ஷியாதி உயிர் வகைகளும், ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்கிற வேதங்களும், உபநிஷத்தக்களும் இதிஹாசங்களும், வேதாங்கங்களும், மநுவாதி ஸ்மிரிதிகளும், கல்ப சூத்திரங்களும் காவியங்களும் கீதங்களும் மற்றும் உண்டான இதர சாஸ்திர வகையும் மூர்த்தங்களாயும் அமூர்த்தங்களாயும் இருக்கும் பதார்த்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய சரீரமே என்று நினையுங்கள். யாவருக்கும் ஸ்ரீஹரியே ஆத்மபூதன்! சகலமும் அவனே! அவனைக் காட்டிலும் காரியமும் காரணமுமான வேறுபொருள் இல்லை என்ற திடசித்தம் எவனுக்கு ஏற்படுகிறதோ, அவன் பிறவித்தொடர்புடைய, தொந்த துக்கமில்லாமல் பரமமான மோட்ச ஆனந்தத்தை அடைவான். மைத்ரேயரே! சகலபாபக்ஷயகரமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் முதலாம் அமிசத்தை, இருபத்திரண்டு அத்தியாயங்களில் விளக்கமாகச் சொன்னேன். இந்த முதலாவது அம்சத்தை கேட்ட மனிதருக்கு, புண்ணிய நதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகைப் பவுர்ணமி அமாவாசையில் ஸ்நானம் செய்த பயன் உண்டாகும். புத்திர பவுத்திர தன கனக, வஸ்து வாகனங்களும் அட்சயமான பரமபத சுகமும் உண்டாகும்! தேவ, ரிஷி, பிதுர், கந்தர்வ, யக்ஷர் ஆகியோரது படைப்பு வரிசை முறையைக் கேட்டவருக்க, தேவ, ரிஷி கந்தர்வாதிகளனைவரும் மகிழ்ந்து வலுவிலேயே சகல அபீஷ்டங்களையும் கொடுப்பார்கள்.

முதல் அம்சம் முடிந்தது.

 
மேலும் விஷ்ணு புராணம் »
temple news
1. புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் ... மேலும்
 
temple news
9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும் பராசரர் ... மேலும்
 
temple news
1. பிரியவிரத வம்சம் பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ... மேலும்
 
temple news
9. சிம்சுமார சக்கரம் மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற ... மேலும்
 
temple news
1. கடந்த மனுவந்தரங்கள் மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar