Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம் ... விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம் (பகுதி-1) விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம் ...
முதல் பக்கம் » விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம் (பகுதி-2)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மே
2012
02:05

9. சிம்சுமார சக்கரம்

மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான். அங்கிருந்து துருவன் சுற்றிக்கொண்டு, சந்திர சூரியாதி கிரகங்களையெல்லாம் சுற்றித் திருப்ப அவைகளும் சக்கரத்தைப் போல அவனைச் சுற்றி சுழல்கின்றன. சந்திர சூர்யர்களும் மற்றுமுள்ள கிரகங்களும், நட்சத்திரங்களும் காற்றின் வடிவமான கயிறுகளினால் கட்டப்பட்டு துருவனிடம் இணைந்துள்ளன. ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரக்கூட்டம் யாவும், சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலக் காணப்படும். அதன் இதயத்திலே சகல தேஜோலோகங்களுக்கும் ஆதார பூதனான ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கிறான். உத்தானபாதனுடைய மகனான துருவன் அந்த உலகநாதனை ஆராதித்து, நட்சத்திரமயமான அந்தச் சிம்சுமாரத்தின் வாலினிடத்தில் இருக்கை பெற்றான். அந்த சிம்சுமாரத்திற்கு ஆதாரம் ஸ்ரீயப்பதியேயாகும். அந்தச் சிம்சுமாரமோ துருவனுக்கு ஆதாரம். அந்தத் துருவனோ, சூரியனுக்கு ஆதாரம், அந்த சூரியனோ தேவ, மனுஷ்யாதி சகலத்துக்கும் ஆதாரம். அது எவ்விதமெனில் சூரியன் ரசவத்தான ஜகங்களை எட்டு மாதங்களில் இழுத்துப் பொழிய அந்த வர்ஷத்தினாலே சகல உயிரினங்களுக்கும் உபயோகமான உணவுகள் உண்டாகின்றன. அன்னத்தாலே தான் சகலமும் உண்டாகி வளர்கின்றன. மேலும் சூரியன் தனது உக்கிரமான கிரணங்களினால், லோகத்திலிருந்து தண்ணீரை ஆகர்ஷித்து, சந்திரனிடம் பெய்ய, அந்தச் சந்திரனும் வாயு நாடி மயங்களான வழிகளினால் புகையும் காற்றும் நெருப்புமான வடிவுள்ள மேகங்களிலே விட, அந்த மேகங்களிலிருந்து நீரானது உலகில் பொழிகிறது. அந்த மேகங்களிலிருந்து தண்ணீர் நழுவி விழாமையினால் அம்மேகங்களுக்கு அப்பிரங்கள் என்று பெயர் வந்தது. ஆனாலும் காற்றினால் அம்மேகங்கள் அலைக்கப்படும் காலத்தால் உண்டான பரிபாகத்தினால் தண்ணீர் நிர்மலமாகி விழுகிறது. ஆறுகள், பூமி, கடல்கள், பிராணிகள் ஆகியவற்றிலுள்ள நால்வகை ஜலத்தையும் கவர்ந்துதான் சூரியன் வர்ஷிக்கிறான். மேலும் ஆகாய கங்கையின் ஜலத்தைத் தனது கிரணங்களால் கொண்டு, மேகங்களிற் சேர்க்காமலே வர்ஷிப்பதும் உண்டு. அந்தத் தூய்மையான நீர் படுவதனால் மனிதனது பாவந்தீரும். அவன் நரகமடைவதில்லை. அந்த ஸ்நானம் திவ்யஸ்நானம் என்று வழங்கப்படும்.

முனிவரே! சூரியன் காணப்படும் போதே எந்த நீர் மேகமின்றி ஆகாயத்திலிருந்து விழுகிறதோ அதுதான் ஆகாய கங்கையின் நீர் என்று சொல்லப்படும். அன்றியும் கிருத்திகை முதலான ஒற்றைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, ஆகாயத்திலிருந்து விழுகிற நீரானது, திக்கஜங்களினாலே பொழியப்படும். ஆகாய கங்கா ஜலமாகச் சொல்லப்படும், ரோகிணி முதலிய இரட்டைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, வானத்திலிருந்து மேகமின்றிப் பொழியும் தண்ணீரானது சூரியன் பெய்யும் ஆகாய கங்கா ஜலமாகக் கூறப்படும். எந்தத் தண்ணீரானது மேகங்களினாலே வர்ஷிக்கப்படுகின்றதோ, அது பிராணிகளின் பிழைப்புக்காக ஓஷதிகளைப் போஷித்து அமுதமென்று சொல்லப்படும். இவ்விதமாக மழையினாலே ஓஷதிகள் பயன் கொடுக்குமளவும் போஷிக்கப்பட்டனவாகி நிற்க, அவற்றைக் கொண்டு, சாஸ்திர நோக்கமுடைய மனிதர்கள் விதிப்படிப் பலவகைப்பட்ட யக்ஞங்களைச் செய்து, தேவதைகளைத் திருப்தி செய்கிறார்கள். இவ்விதமாக யாகங்களும், வேதங்களும், பிராமணாதி ஜாதிகளும், தேவதைகளும், பறவைகளுமான இந்த உலகம் எல்லாம் மழையினாலேயே காக்கப்படுகின்றன. ஏனெனில் உணவை விளைவிப்பதே மழையல்லவா? அந்த மழையை உண்டாக்குவோன் சூரியன்! அந்த சூரியனுக்கு ஆதாரமானவன் துருவன்! அந்த துருவனுக்கு ஆதாரமாக இருப்பது சிம்சுமார சக்கரம்! அந்த சக்கரத்துக்கு ஆதாரம் ஸ்ரீமந்நாராயணன். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் அந்தச் சிம்சுமார சக்கரத்தின் இதயத்தில் இருந்து கொண்டு, சகல பிராணிகளையும் தரிக்கும்படித் தாங்கிக் கொண்டிருக்கிறான்.

10. சூரியனின் ரதம்

மைத்ரேயரே! சூரியன் சஞ்சாரஞ் செய்யும் தட்சிணாயன உத்தராயண எல்லைகளின் நடுவாகிய கிராந்தி விருத்தங்கள் நூற்றியெண்பத்து மூன்று. அம்மண்டலங்களிலேதான் சூரியன் உத்தராயணத்தில் ஏறுவதும், தட்சிணாயனத்தில் இறங்குவதுமான முந்நூற்று அறுபத்தாறு கதிகளினால் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான். சூரியனது தேரானது சூரியர்களாலும், ரிஷிகளாலும், கந்தர்வராலும், அப்சரசுகளாலும், இயக்கர்களாலும், சர்ப்பங்களாலும் ஏற்றப்பட்டிருக்கும். அந்த இரதத்தில் சித்திரை மாதத்தில் தாதா என்ற சூரியனும், கிரதஸ்தலை என்ற அப்சரசும், புலஸ்தியர் என்ற முனிவரும், வாசுகி என்ற சர்ப்பமும், ரதபிருத்து என்ற இயக்கனும், ஹேதி என்ற அரக்கனும், தும்புரு என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். வைகாசி மாதத்தில் அர்யமா என்ற சூரியனும், புலகன் என்ற முனிவரும், புஞ்சிகஸ்தலை என்ற அப்சரசும், ரதவுஜா என்ற யக்ஷனும், கச்சவீரன் என்ற சர்ப்பமும், நாரதன் என்ற கந்தர்வனும், பிரஹேதி என்ற ராட்சனும் வசிப்பார்கள். ஆனி மாதத்தில் மித்திரன் என்ற சூரியனும், அத்திரி என்ற முனிவரும், தக்ஷகன் என்ற சர்ப்பமும், பவுருஷேயன் என்ற அரக்கனும், ஹாஹா என்ற கந்தர்வனும், ரதஸ்வனன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஆடிமாதத்தில் வருணன் என்ற சூரியனும், வசிஷ்டர் என்ற முனிவரும் சகஜநியை என்ற அப்சரசும், ஹூ ஹூ என்ற கந்தர்வனும், நாகம் என்ற சர்ப்பமும், ரதன் என்ற ராக்ஷசனும், சித்திரன் என்னும் யக்ஷனும் வசிப்பார்கள். ஆவணி மாதத்தில் இந்திரன் என்ற சூரியனும், விசுவாவசு என்ற கந்தர்வனும், சுரோதா என்ற யக்ஷனும், ஏலாபுத்திரன் என்ற சர்ப்பமும், அங்கிரசு என்ற ரிஷியும், பிரமலோசை என்ற அப்சரஸும், சர்ப்பி என்ற ராக்ஷசனும் இருப்பார்கள்.

புரட்டாசியில், விவசுவான் என்ற சூரியனும், பிருகு என்ற முனிவரும், அனுமலோசா என்ற அப்சரசும், சங்கபாலன் என்ற சர்ப்பமும், வியாக்கிரன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஐப்பசியில் பூஷா என்ற சூரியனும் வசுருசி என்ற கந்தர்வனும், வாதன் என்ற ராட்சசனும், தனஞ்செயன் என்ற சர்ப்பமும், கவுதமர் என்ற முனிவரும், கிருதாசி என்ற அப்சரசும், சுஷேணன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். கார்த்திகையில் பர்ச்சனியன் என்ற சூரியனும்; விசுவாவசு என்ற கந்தர்வனும், பரத்துவாஜர் என்ற முனிவரும், ஐராவதம் என்ற சர்ப்பமும், விசுவாசி என்ற அப்சரஸும், சேனஜித்து என்ற யக்ஷனும், ஆப என்ற ராக்ஷசனும் வசிப்பார்கள். மார்கழியில் அம்சன் என்ற சூரியனும், காசியபர் என்ற முனிவரும், தார்க்ஷயன் என்ற யக்ஷனும், மகாபத்மன் என்ற சர்ப்பமும், வித்தியுத்து என்ற ராக்ஷசனும், சித்திரசேனன் என்ற கந்தர்வனும், ஊர்வசி என்ற தேவமங்கையும் இருப்பார்கள். தை மாதத்தில் பகன் என்ற சூரியனும், கிருது என்ற முனிவனும், ஊர்ணாயு என்னும் கந்தர்வனும், ஸ்பூர்ஜன் என்ற அரக்கனும், கார்க்கோடகன் என்ற சர்ப்பமும், அரிஷ்டநேமி என்ற யக்ஷனும், பூர்வசித்தி என்ற தேவமங்கையும் வசிப்பார்கள். மாசிமாதத்தில் துவஷ்டா என்ற சூரியனும், ஜமதக்னி என்ற முனிவனும், திலோத்தமை என்ற தேவதாசியும், கம்பளன் என்ற சர்ப்பமும், பிரம்மா பேதன் என்ற அரக்கனும், இருதசித்து என்ற யக்ஷனும், திருதராஷ்டிரன் என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். பங்குனியில் விஷ்ணு என்ற சூரியனும், விசுவாமித்திரர் என்ற முனிவரும், ரம்பை என்ற தேவமங்கையும் சூரியவர்ச்சசு என்ற கந்தர்வனும், சத்தியசித்து என்னும் யக்ஷனும், அசுவதரன் என்ற சர்ப்பமும், யக்ஞாபேதன் என்ற அரக்கனும் வாசஞ்செய்வார்கள். மைத்ரேயரே! இவ்விதமாக ஒவ்வொரு மாதமும் இவர்கள் அனைவரும் ஸ்ரீவிஷ்ணு சக்தியினால் வியாபிக்கப்பட்டு உலகத்தை ஒளிபெறச் செய்வதற்காக சூரிய ரதத்தில் இருப்பார்கள்; இனி இவர்களுடைய செயல்களைக் கேளுங்கள். சூரியமண்டலத்தில் பிரகாசிக்கும் சூரியனுக்குத் தேஜஸ் விருத்தியாகும்படி ரிஷிகள் துதிக்கிறார்கள். கந்தர்வர்கள் கானமிசைக்கிறார்கள். தேவமங்கையர் நடனமாடுகிறார்கள். அரக்கர்கள் சூரியனுக்குப் பின் செல்கிறார்கள். சர்ப்பங்கள் சுமக்கின்றன. இயக்கர் கடிவாள முதலானவற்றைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர்களைத் தவிர வாலகிலியர்கள் என்ற முனிவர்கள் எப்போதும் சூரியனைச் சூழ்ந்து உபாசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்விதமாகச் சூரியமண்டலத்தில் வாசஞ்செய்கிற ஏழு கணங்களும் அந்தந்தச் சமயங்களிலே பனி வெப்பம் தண்ணீர் ஆகியவற்றைப் பொழிவதற்குக் காரணமாக இருக்கின்றன.

11. சூரியனின் சிறப்பு செயல்கள்

பராசர முனிவரே! சூரிய மண்டலத்தில் பனி, வெப்பம், மழை இவற்றிற்குக் காரணமாக ஏழு கணங்கள் இருக்கின்றன என்றும் கந்தர்வர் யக்ஷர் ராக்ஷசர் முனிவர் வாலகிலியர் அப்சரசுகர் நாகர் ஆகியோரது தொழில்கள் இன்னதின்னது என்றும் கூறியருளினீர்கள்! ஆயினும் சூரியனுடைய தொழில் இன்னது என்பதைச் சொல்லவில்லையே! கணங்களே பனி, வெப்பம், தண்ணீர் ஆகியவற்றைப் பொழியுமானால் சூரியனுடைய தொழில்தான் என்ன? சூரியனால் மழை உண்டாகிறது என்று நீங்கள் முன்பு சொன்னீர்கள். அன்றியும் சூரியன் உதயமாகி உச்சியில் வந்து அஸ்தமனமாகிறான் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இத்தகைய செயல்கள் இந்த ஏழு கணங்களுக்கும் பொதுவாக இருக்குமானால், சூரியனுக்குச் சிறப்பு யாது? அதைச்சொல்ல வேண்டும் என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! ரிக்கு, யஜுர், சாமம் என்ற மூன்று வேதவடிவாகிய ஸ்ரீவிஷ்ணு சக்தியே சூரிய ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டு, காய்வதுமல்லாமல், உலகத்தின் பாபத்தையும் போக்கிக் கொண்டு இருப்பதனாலே, அந்த மண்டலத்தில் வாசஞ்செய்கிற ஆதித்தன் முதலிய கணங்கள் ஏழிலும் அந்த ஆதித்தனே முக்கியமானவன். அந்தந்த மாதத்தில் வருகிற சூரியனிடத்தில் மூன்று வேதமயமான ஸ்ரீவிஷ்ணு சக்தியானது பிரவேசம் செய்து விளங்குகிறது. விடியற்காலத்தில் இரிக்குகளும், மத்தியான காலத்தில் யஜுசுகளும், சாயங்காலத்தில் சாமங்களும், சூரிய சரீரகனாய் சூரியனுக்குள்ளே விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவைத் துதிக்கின்றன. இந்த ரிக்கு முதலிய மூன்று வேதங்களும் ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சரீரமாக இருக்கின்றன. ஸ்ரீவிஷ்ணு சக்தியானது சூரியனுக்குள்ளே மட்டுமின்றி பிரமாதிகளுக்குள்ளும் பிரவேசித்து அந்தந்தக் காரியங்களை நடத்துகிறது. படைப்பின் துவக்கத்தில் ரிக்கு வேதமயமான பிரம்மாவாகவும், ஸ்திதியிலே, யஜுர் வேதமயமான ஸ்ரீவிஷ்ணுவாகவும் முடிவில் சாமவேதமயமான ருத்திரனாகவும், ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியானது பிரகாசிக்கின்றது. ஆகையால் ருத்திர சம்பந்தமான சாமத்துவனியானது அசுத்தமென்று எண்ணப்படுகிறது. இவ்வாறு வேதத்திரய ரூபமான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சுத்த சாத்வீக சக்தியானது, தனது சரீரமாக இருக்கும் ஏழு கணங்களுக்குள்ளே சூரியனிடத்திலே சிறப்பாகப் பிரவேசித்திருப்பதால் சூரியனே சிறப்பாகப் பிரகாசித்துக் கொண்டு உலகத்தில் உண்டான அந்தகாரங்களையெல்லாம் நாசம் செய்கிறான்.

இவ்விதமாக வேதமயமான ஸ்ரீவிஷ்ணுசக்தியின் அணுப்பிரவேசாதி அதிசயத்தினால் சூரியன் பிரதானமானதைப் பற்றியே அந்த சூரியனை முனிவர்கள் துதித்துக் கொண்டும் கந்தர்வர்கள் பாடிக்கொண்டும் அரம்பையர்கள் ஆட்டத்தினால் மகிழ்வித்துக் கொண்டும் இராக்கதர் பின் தொடர்ந்து கொண்டும், நாகர்கள் சுமந்து கொண்டும், வாலகிலியர்கள் உபாசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த மண்டலத்திலே சக்தி ரூபத்தைத் தரித்துக் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணுபகவான் சப்தகணங்களைப் போலத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை. அந்தச் சப்தகணமும் ஸ்ரீவிஷ்ணுவைவிட வேறுபட்டவைகளே அணுப்பிரவேசம் எப்படியெனில் ஒரு ஸ்தம்பத்தில் இருக்கிற கண்ணாடிக்கு அருகில் எவனெவன் வருகிறானோ, அவனெல்லாம் தனது சாயலை அந்தக் கண்ணாடியில் காணும்படி அதன் காந்தியை அடைவதைப் போல் அந்த மண்டலத்திலே நிலைத்திருக்கிற ஸ்ரீவிஷ்ணுசக்தியை அங்கே மாதந்தோறும் வருகிற சூரியனும் அடைகிறான். அத்தகைய சூரியன் பிதுர்க்கள் தேவதைகள் மானிடர் முதலியோரைத் திருப்தியடையச் செய்வது எப்படியெனில் சூரியகிரண பிரபாவத்தினாலே நிறைக்கப்பட்டு அமிர்தமயமாக இருக்கும் சந்திரனைக் கிருஷ்ண பக்ஷத்திலே அக்னி முதலிய தேவதைகள் பானஞ்செய்து மிகுந்துள்ள இரண்டு கலைகளுள் ஒன்றை அமாவாசையில் பிதுருக்கள் பானஞ்செய்கிறார்கள். இதுதான் அவர்கள் திருப்தியடையும் விதமாகும். பூமியிலிருந்து தனது கிரணங்களினால் இழுக்கப்படும் ரசத்தை மறுபடியும் மழையாகப் பொழிந்து பயிர்களை விருத்தி செய்து மனுஷ்யாதிகளை சூரியன் திருப்தி செய்கிறான் என்பதை முன்னமே சொன்னேன். இவ்விதமாக சூரியபகவான் தேவர்களுக்கு பக்ஷத்திருப்தியும் பிதுர்களுக்கு மாசத் திருப்தியும் மனுஷ்யாதிகளுக்குத் தினத்திருப்தியும் செய்து வருகிறான்.

12. சந்திர மண்டலம்

மைத்ரேயரே! சந்திரனுடைய தேரானது மூன்று சக்கரங்களைக் கொண்டது. முல்லைப்பூ வர்ணமுடைய பத்துக்குதிரைகள் இடப்பக்க, வலப்பக்கங்களில் கட்டப்பட்டது. துருவனை ஆதாரமாகக் கொண்டு வேகமாகச் செல்லக்கூடியது. அந்த தேரினால் சந்திரன் நாகவீதி முதலிய வீதிகள் அமைந்துள்ள நட்சத்திரங்களிலே சஞ்சரிக்க வருகிறான். சூரிய கிரணங்களுக்கு எப்படியோ அப்படியே சந்திரனுக்கும், உதயாதி காலங்களிலே குறைவும் வளர்ச்சியும் உண்டு. சூரிய ரதத்திலுள்ள குதிரைகளைப் போல ஜலத்திற் பிறந்த சந்திர ரதத்தின் அசுவங்களும், கல்பத்தின் ஆரம்பத்தில் ஒரே முறை ரதத்தில் கட்டப்பட்டு, அதன் முடிவு வரை இருப்பன. தேவதைகளாலே பானஞ்செய்யப்பட்டு, அதன் ஒரு கலையோடு மிகுந்துள்ள அந்தச் சந்திரனைச் சூரியன் ஒரு கிரணத்தால் முன்பு தேவர்கள் பானஞ்செய்ததைப் போல; ஒவ்வொரு நாளைக்கு ஒரு கலையாக வளர்த்து நிறைக்கின்றான். இவ்விதம் அறை மாதத்தில் சந்திரனிடம் நிறைக்கப்படுகின்ற அமிர்தத்தை முப்பத்து மூவாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று அமுதபானர்களாகிய தேவதைகள் பானம் செய்கின்றனர். இவ்விதம் தேவர்களால் பானஞ்செய்யப்பட்டு, இரண்டு கலைகள் மிகுந்தவனாய்ச் சந்திரன் சூரிய கிரணங்களில் மறைவதால், சூரிய மண்டலத்தில் பிரவேசித்தவன் போலாகி அமை என்ற கிரணத்தில் வாசஞ்செய்கிறான். அதனால் அந்த நாள் அமாவாசை என்று வழங்கப்படுகிறது. அந்த நாள் இரவு பகல்களில் சந்திரன் முந்தித் தண்ணீரிலும் பிந்திக்கொடி முதலியவைகளிலும் இருந்து, பிறகு சூரியனை அடைகிறான். ஆகையால் அந்த நாளில் எவனாகிலும் செடி கொடி முதலியவற்றைச் சேதித்தாலும் இலையை உதிர்த்தாலும் பிரம்மஹத்தி செய்த பாவத்தை அடைவான். கலாரூபமான பதினைந்தாவது பங்கினாலே, சந்திரன் சிறிது மிகுந்திருக்கிற அமாவாசையின் அபராண்ணத்திலே குறைந்துள்ள சந்திரனைப் பிதுர்க்கள் அமிர்த பானத்துக்காக உபாசித்து, அமிர்தமயமான அந்தப் பதினைந்தாம் கலையைப் பானஞ்செய்கிறார்கள். சவுமியர் என்றும், பர்ஹிஷதர் என்றும், அக்னிஷ்வாத்தர் என்றும் மூன்று பிரிவினராக இருக்கிறார்கள். அந்தப் பிதுர்க்கள் அமாவாசையில் சந்திர கிரணத்தினின்று ஒழுகும் அமிர்தத்தையுண்டு மேன்மையான மாசத் திருப்தி அடைகிறார்கள். இவ்விதமாகச் சந்திரன் அமிர்தமயமாயும், குளிர்ச்சியுள்ளவையுமான, ஜல பரமாணுக்களாலே சுக்கிலபக்ஷத்தில் தேவதைகளையும், கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்து புல் பூண்டு செடி கொடிகளை உண்டாக்குவதாலும், நிலவால் மகிழ்ச்சியூட்டுவதாலும் மனுஷ்ய மிருக பக்ஷிசாதிகளைத் திருப்தி செய்கிறான்.

இந்தச் சந்திரனது மகனான புதனுடைய தேரானது, வாயு, அக்கினி இவற்றினால் தோன்றியதாய், பூமியிற் பிறந்த பொன் நிறமான எட்டுக் குதிரைகளுடன் கூடியதாய், வரூதம் என்ற முன்தாங்கும் உறுப்பும், அனுகர்ஷம் என்ற அடிப்பகுதியைத் தாங்கும் உறுப்பும், பதாகை முதலிய அவயவமும் கொண்டதாகும். சுக்கிரனுடைய ரதமும் இத்தகைய அவயவ அலங்காரங்களைக் கொண்டதாய் எட்டுக்குதிரைகளைக் கட்டியதாய் மிகப்பெரியதாய், பொன்மயமானதாய் விளங்கும் அங்காரகனுடைய இரதமும் பெரியது. அது அக்கினியிற் பிறந்து பத்மராகம் போலச் சிவந்த எட்டு குதிரைகள் பிணைக்கப்பட்டது. பிரகஸ்பதியின் தேரும் எட்டுக் குதிரைகள் பூட்டியதாகும். அந்தத் தேரிலே ஏறிய குருபகவான், ஒவ்வொரு வருஷம் இருக்கிறார். சனியானவன் ஆகாயத்தில் பிறந்த சித்திர வர்ணமான ரதத்தில் ஏறி, மெல்லச் சஞ்சரிக்கின்றான். ராகுவின் தேரானது சிறிது வெண்ணிறமுடையதாய், வண்டின் நிறமுடைய எட்டுக்குதிரைகள் பூட்டியதாய் அமைந்துள்ளது. இத்தகைய ரதத்தில் ஏறிய ராகுவானவன் சூரியனுக்கு மேலே அந்தகாரமயமான மூன்றாவது ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு, பருவகாலங்களில் அங்கிருந்து திரும்பி பூமி முதலியவற்றின் சாயைகளிலே புகுந்து சூரிய சந்திரர்களை மறைத்து கிரகணங்களை ஏற்படுத்துகிறான். அதுபோலவே கேதுவின் ரதத்தில் புகை வர்ணமுடைய எட்டுக்குதிரைகள் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கேதுவும் ராகுவைப் போலக் கிரகணங்களை உண்டாக்குவான். இவ்விதமாக சூரியன் முதலிய நவகிரகங்களின் ரதங்கள் அமைந்திருக்கும் இந்தக் கிரக நட்சத்திர மண்டலங்கள் யாவுமே, வாயுரூபமான கயிறுகளால் துருவனோடு இணைக்கப்பட்டு தத்தமது சாரத்தில் சுழல்கின்றன. ஆகாயத்தில் உண்டான மண்டலங்கள் அனைத்தும், அத்தனைக் காற்றுக் கயிறுகளினாலே கட்டப்பட்டு, செக்கை இழுக்கும் எருதுகள் தாமாகச் சுற்றுவ÷õடு செக்கையும் சுற்றுவிப்பதுபோல், தாமும் சுற்றிக்கொண்டு தங்களுக்கு ஆதாரமான துருவனையும் சுற்றுவிக்கின்றன. மேலும் இந்தக் கிரகங்கள் யாவும் காற்றின் வடிவான சக்கரத்தினால் தினந்தோறும் ஏவப்பட்டு, கொள்ளிக்கட்டை சுழல்வது சக்கரம் சுழல்வதாகக் காணப்படுவதைப் போல், சுழல்கின்றன. ஆகையால் இந்தக் காற்றுக்குப் பிரவகம் என்ற பெயர் உண்டாயிற்று. இது நிற்க; முன்பு நான் சிம்சுமாரா திருதியான துருவாதார ரூபம் என்று சொன்னேன் அல்லவா? அதையுங் கூறுகிறேன், கேளுங்கள்.

அந்த ஸ்வரூபத்தைக் காண்பவன் அன்றையப் பகலில் செய்த பாவத்திலிருந்து விடுபடுவதுமன்றி, அந்தச் சிம்சுமார சக்கரத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவோ, அத்தனை ஆண்டுகள் சுகமாக ஜீவித்திருப்பான். நட்சத்திர ரூபிகளான சில தேவதைகள் அதன் அவயவமாய் இருப்பார்கள். அந்தச் சிம்சுமாரத்துக்கு உத்தானபாதன் மேல் வாயிலிலும், யக்ஞன் கீழ்வாயிலிலும், தருமன் சிரத்திலும், நாராயணன் இதயத்திலும், அசுவினி தேவதைகள் கால்களிலும், வருணனும் அயர்மாவும் பின் தொடைகளிலும், சம்வச்சரம் குறியிலும், மித்திரன் அபானத்திலும், அக்கினியும் மகேந்திரனும் காசிபனும் துருவனும் முறையே வாலிலும் உள்ளனர். இந்த அக்கினி முதலிய நான்கு நட்சத்திரங்களும் மற்ற அவயவங்களிலுள்ள நட்சத்திரங்களைப் போல் அஸ்தமனமாகாமல் எப்போதும் காணப்படுவன. மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போல, பூமியின் இருப்பையும், அதில் மலைகள், கடல்கள், தேசங்கள் ஆகியவற்றின் அமைப்பையும், ஆகாயத்திலுள்ள கிரக நட்சத்திரங்களின் இருப்பையும் கூடியவரையில் சொன்னேன். மேலும் அதன் சுருக்கத்தைச் சொல்கிறேன், கேட்பீராக. ஸ்ரீவிஷ்ணுவின் சரீரமான ஜலம் யாதுண்டோ, அதிலிருந்து தாமரைப் பூவைப் போன்ற பூமியானது பருவதசமுத்திரங்களுடன் உண்டாயிற்று. ஆகையால் இந்தப் பூமியும் அவருடைய சரீரமேயாகும்! இதுமட்டுமல்ல சூரியாதி ஜோதிகளும் பூமி முதலிய உலகங்களும், வனங்களும், மலைகளும், திசைகளும், நதிகளும், ஆழக்கடல்களும் என்றும் இருக்கின்றதென்று சொல்லத்தக்க சித்தும் மாறுவதனாலே இல்லையென்று சொல்லத்தக்க அசித்தும் யாவுமே அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சரீரங்களாக இருக்கின்றன. ஞானமே வடிவான, சகல ஜீவன்களையும் சரீரமாகக் கொண்டுள்ள அந்த ஸ்ரீபகவானுக்கும் ஞானமே சுத்தஸ்வரூபமேயல்லது தேவமனுஷ்யாதிரூபமன்று. ஆகையால் பர்வதசமுத்திர பூமியாதி ரூபபேதங்கள் எல்லாம் ஜீவன்களுடைய கர்ம வசத்திலுண்டான ஞானபேதத்தைப் பற்றியவைகளாகும். எப்போது இப்படிப்பட்ட ஞானமயமான தனது சொரூபம் சுத்தமானதாகத் தோன்றும், சகலமும் கர்மமூலமான நினைப்பின் பேதத்தினாலே வெவ்வேறு விதமாகத் தோன்றுவதாகுமேயன்றி, இயல்பாகவே அவ்வவ் வஸ்துக்களில் அந்தந்த பேதங்கள் இருக்கமாட்டாது ஞானமயமான பொருளே நிலையானதாகையால் அஸ்தி (இருக்கிறது) என்று உள்பொருளாய்க் கூறப்படும். ஞானம் இல்லாத ஜடம் யாவும் மாறிப் போவனவாகையால் நாஸ்தி (இல்லை) என்று இல்பொருளாய்ச் சொல்லப்படும். ஏனெனில் ஆன்மஸ்வரூபத்தைக் காட்டிலும் ஆதியும், மத்தியமும் முடிவும் இல்லாததும் எப்போதும் மாறாமல் ஒரே ரூபத்தையுடையதுமான பொருள் எங்கே இருக்கிறது? எது அடிக்கடி வேறுபாட்டை அடைகிறதோ அதில் உண்மை எங்கே இருக்கிறது? இவற்றை உதாரணப்படுத்திக் காட்டுகிறேன்.

முதலில் பிருத்வியானது மண் உருண்டையாகி, பிறகு குடமாகி, அது உடையக் கபாலமாகி, அந்தக் கபாலம் துண்டு துண்டாகிச் சூரணமாகி, அப்புறம் துகளாகி அதற்குப் பிறகு அணுவாக மாறுகின்றது. இவையெல்லாம் ஆத்ம ஸ்வரூப யதார்த்தம் தெரியாமல் தேவமனுஷ்யாதி ரூபமாக நிச்சயித்துக் கொண்டவர்களுக்குத் தங்களால் அனுபவிக்கப்படுகின்ற வெவ்வேறு பொருளாகக் காணப்படுகின்றன அல்லவா? இவற்றில் எதை வஸ்துவென்று சொல்லலாம். ஞானகாரமான ஆன்ம வஸ்துவைத் தவிர வேறு எதுவுமே இருக்கிறது என்று சொல்லத்தக்க வஸ்துவல்ல. அந்த ஞானகாரமோ அவரவருடைய கர்ம பேதத்தினால் மாறுபட்ட சித்தமுடைய ஜனங்களுக்கு தேவாதி சரீரப் பிரவேசத்தால் அந்தந்த ரூபமாகத் தோற்றமளிக்கிறது. ஆன்ம ஸ்வரூபமானது இயல்பில் கர்மமில்லாததும், அதனால் வருகின்ற பிரகிருதி சம்பந்தமான மலமில்லாததும், அதனால் உண்டாகத்தக்கதான சோஹ மோஹலோ பாதி தோஷ சம்பந்தம் இல்லாதுடம் தேய்வு வளர்ச்சி முதலியன இல்லாமையால் ஒரே ரூபமானதுமாய் இருக்கிறது. இத்தகைய ஞானரூபமான ஆத்ம ஸ்வரூபமே ஸ்ரீவாசுதேவனுடைய சரீரம்! ஆகையால் அது தன்மயமாக இருக்கின்றது. அந்த ஸ்ரீவாசுதேவராத்மகம் ஆகாத பொருள் ஒன்றுமில்லை. மைத்ரேயரே! இந்தவிதமாக ஞானஸ்வரூபம் ஒன்றே நித்தியமாக இருக்கிறது. ஆகையால் சத்திய பதார்த்தம் என்றும் மற்றது மாறி மாறி அழிவதனாலே அசத்தியம் என்றும் உண்மையை உமக்குச் சொன்னேன். சொல்லாமல் மட்டுமே இருக்கிறது என்று சொல்லத்தக்க நானாவித ஸ்வரூபமுடைய வஸ்துக்கள் யாவும் கர்மாதீனமாகவே இருக்கின்றன. அந்தக் கர்ம ஸ்வரூபம் யக்ஞம் என்றும் பசு என்றும், இரித்விக்குள் என்றும் அக்கினி என்றும், சோமம் என்றும், அரை என்றும் சொர்க்காபேஷை என்றும்! இப்படிப் பலவகையில் கர்ம மார்க்கத்தில் காணப்பட்டவைகளாகும். இவைகளுக்குப் பயன் புவர்லோகம் முதலிய உலகங்களேயாகும். நான் உம்மிடம் சொல்லி விளக்கிய லோகச்சிறப்புகள் எத்தனையுண்டோ அத்தனையிலும் கர்ம வசியனாக இருக்கும். புருஷன் மாறி மாறிப் போய் வந்து கொண்டிருக்கிறான். ஆகையால் இந்தக்கர்ம மார்க்கப்பயன்களிலே ருசி வைக்காமல் எல்லாம் அஞ்ஞானத்தால் தோன்றுவனவென்றும், ஞானம் ஒன்றே நித்திய சுத்த நிர்மல ரூபமானது என்றும் அறிந்து, ஸ்ரீவாசுதேவ பகவானை அடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.

13. ஜடபரதர் உபாக்கியானம்

பராசர மகரிஷியே! நான் கேட்டவண்ணம் பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் மூன்று உலகமும் ஸ்ரீவிஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருப்பதையும் ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் எனக்கு விளக்கியருளினீர்கள்! பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் அறிவிப்பதாகச் சொன்னீர்கள். அதன்படி இப்போது அதைக் கூறியருளல் வேண்டும். யோகத்துடன் கூடி ஸ்ரீவாசுதேவனிடத்தில் இதயத்தை நிலைநிறுத்தித் தியானஞ்செய்து கொண்டு சாளக்கிராம ÷க்ஷத்திரத்தில் வசித்த அந்தப் பரதமகாராஜனுக்கு, ஸ்ரீஹரித்தியான பிரபாவத்தாலும், ÷க்ஷத்திர மகிமையினாலும் மோட்சமுண்டாகாமல், மறுபடி பிராமண ஜன்மம் எப்படி ஏற்பட்டது? அவர் அந்தப் பிராமணப் பிறவியில் என்ன செய்தார்? அந்த விஷயங்களை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார் மைத்ரேயர். உடனே பராசரர் கூறலானார். மைத்ரேயரே! அந்தப் பரத மகாராசன் எம்பெருமானது திருவடிகளையே தியானஞ் செய்துகொண்டு சாளக்கிராமத்திலேயே பலகாலம் வசித்து வந்தார். அவர் மகா குணவான்; மிகவும் உத்தமர், அவர் சொப்பனம் மத்தியம் உள்பட சகல அவஸ்தைகளிலும் யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. வைதிக கிரியைகளை நடத்துவதற்காக சமித்து, புஷ்பம் தருப்பை முதலியவற்றைச் சேகரிப்பது போன்ற செயல்களைத் தவிர வேறெதையுஞ் செய்ததில்லை. இவ்விதமாகப் பரதர் பற்றில்லாமல் யோக தவம் செய்து வரும் போது, ஒருநாள் மகாநதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன்; நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. பரதர் அந்தமான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறிய வருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்.

பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம், அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்தபாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது ÷க்ஷமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ? என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சியடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்ய போகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது. அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆயினும் தனது யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். அதனால் வெறுப்புற்றுத் தன் தாயைப் பிரிந்து முன்பிருந்த சாலக்கிராம ÷க்ஷத்திரத்தை அடைந்து, அங்குள்ள உலர்ந்த புற்களையும், சருகுகளையும் தின்று, மானாகப் பிறக்க ஹேதுவான கர்மங்களைக் கழித்து, அங்கேயே மரணமடைந்தார். பிறகு, அந்த ஊரிலேயே, நல்ல ஒழுக்கமும் யோக நிஷ்டையும் மிகுந்த உத்தமமான பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம ஸ்மரணையோடு பிறந்தார். பூர்வஞானம் தோன்றியதால், முன்பு போலவே சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றவராய், ஆத்ம சொரூபத்தைப் பிரகிருதிக்கு வேறாகவும், தேவாதி சகல சரீரங்களிலும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் யாவும் தம்மைவிடப் பேதமில்லாமல், விலக்ஷணமான ஞானகாரமுள்ளவையாகப் பாவித்து வந்தார்.

வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவர் ஆத்மஞானியாக இருந்ததால் எந்தவொரு கர்மத்தையும் செய்யவில்லை, மேலும், அழுக்கு நிறைந்த உடம்போடும், அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும், ஊத்தைப் பல்லோடும், கண்டோர் அருவருத்து, அவமதிக்கும்படி நடந்து வந்தார். உலகோர் செய்யும் வெகு மதிப்பானது, யாக சம்பத்துக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும். அவமதிப்போ, கர்வ அகங்காரங்களைப் போக்குவதால் யோக சித்தியைத் தருவதாகும். ஆகையால் யோகியானவன், யாவரும் தன்னிடம் சேராமல், தன்னை அவமானம் செய்யும்படி ஜடனைப் போலக் காட்டிப் பெரியோருடைய ஒழுக்கத்திற்குப் பழுதுவராமல் காத்து நடக்கவேண்டும்! என்று இரணிய கர்ப்பவாக்கியங்களை நினைத்து அந்தப் பிராமணர் வித்துவானாக இருந்தும் மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் திரிந்து கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் இருந்ததால், அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. புழுத்துக் கெட்டுப்போன உழுந்து, யவதானியம் முதலியவற்றால் செய்த அப்பங்களையோ, கீரையையோ காட்டுக் கிழங்குகளையோ ஏதாவது ஒன்றை அவர் தின்று பிராணதரணை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை இறந்தார். அவருடைய தம்பியரும், அண்ணன்மார்களும் மற்றுமுள்ள பந்துக்களும், அற்ப ஆகாரம் கொடுத்து, அவரைக் கொண்டு கழனி வேலையைச் செய்வித்து வந்தார்கள். அவர் அந்த வேலையைக் கூடத் திருத்தமாக செய்யாமல் மூடனைப் போலச் செய்துவந்தார். அவர், இதுபோன்று அற்ப ஆகாரத்தைப் புசித்து வந்தாலும் அவர் உடல் நன்றாகப் பருத்தும் கண்கள் இரண்டும் வித்தியாசமில்லாமல் சமமாக விளங்கவே தோற்றத்தில் மாற்றமின்றி இருந்துவந்தார். அவரது உறவினரும் ஊராரும் கூலி கொடுக்காமல், சிறிது ஆகாரத்தை அவருக்குக் கொடுத்து வேலை வாங்கி வந்தார்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் ஜடபரதர் அந்த வேலையைத் தடையின்றிச் செய்தார். முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார். இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களையெல்லாம் அவருக்குச் செய்து, காளியின் திருக்கோயிலின் எதிரே, கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.

பிறகு ஒருநாள், சவ்வீர ராஜனுடைய சேவகன் ஒருவன் ஜடபரதரைப் பிடித்துக்கொண்டு சென்றான். ஜடபரதரை, அரசனது சிவிகையைச் சுமப்பதற்குத் தகுந்த சிவியானாக நினைத்து, அமிஞ்சி பிடித்துப் போட்டான். ஒருநாள் அரசன், இஷிமதி நதி தீரத்தில் இருந்த கபில மகாமுனிரைக் காண்பதற்கு விரும்பினான். துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது! என்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள அரசன் விரும்பினான். எனவே அவன் பயணப்பட்டான். அவ்வரசனுடைய பல்லக்குப் போயிகளாக அமிஞ்சி பிடித்துப் போட்டிருந்த ஆட்களிலே ஜடபரதரும் சேர்ந்திருந்தார். சகல ஞானமும் உணர்ந்தவராக அவர் இருந்தாலும் கூட, தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க, அவர் பல்லக்கை சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும் போது, நுகத்தடியளவு தூரம் ஜந்து வொன்றும் இல்லாபடித் தரையைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவாக நடந்து சென்றார். மற்றவர்கள் துரிதமாக நடந்தனர். பல்லக்கின் வேகம் குறைந்தது. அதனால் சிவிகையில் இருந்த அரசன் சரியாய் நடங்கள்! என்று சிவிகை யாரை அதட்டினான். அவன் அப்படி அதட்டியும் பல்லக்கின் வேகம் குறைந்ததால், அரசன் மிகவும் கோபத்துடன் சிவியாரே! என் பேச்சையுங் கடந்து ஏனிப்படி நடக்கிறீர்கள்? என்று பலமுறைகள் கூவினான். அதற்கு சிவியாட்கள், மகாராஜா! எங்களின் குற்றமில்லை. இவன்தான் இப்படி நடக்கிறான் என்று ஜடபரதரைக் குற்றம் சாட்டினார்கள். அதைக்கேட்ட அரசன், அடா! என் பல்லக்கைச் சிறிது தூரந்தானே நீ சுமந்திருக்கிறாய்! இதனாலேயே விடாய்த்துப் போய்விட்டாயே! மேலும் நீ வருத்தத்தை! சகிக்க மாட்டாதவனோ! பிரத்யக்ஷத்தில் நீ பருத்தவனாகவே காணப்படுகிறாயே! என்று கேட்டான். அதற்கு ஜடபரதர், அரசே! நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. அதனால் நான் ஆயாசமும் அடையவில்லை! என்றார். அதைக் கேட்ட அரசன், அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பார்வையில் நீ பருமனாகத்தானே தோன்றுகிறாய்? இப்போது உனது தோளில் என் பல்லக்கு இருக்கிறது. சுமை சுமந்தால் எந்தப் பிராணிக்கும் களைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாக இருக்க நீ ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டான். அதற்கு ஜடபரதப் பிராமணர், அரசே! நீ என்னவோ பிரத்யக்ஷமாய்க் கண்டேன் என்று சொன்னாயே அந்த வஸ்துவை முன்னே நான் அறியச் சொல்வாயாக அது பலம் உள்ளது என்பதையும் இல்லாதது என்பதையும் பற்றிப் பிறகு பேசலாம். மேலும் என்னாலே சிவிகை சுமக்கப்பட்டது. அது இப்போதும் என்மேல் இருக்கிறது என்று சொன்னாயல்லவா? இது சுத்தப்பொய். அதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக? நிலத்திலே இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அவற்றின்மேல் கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றிலே தொடைகள் இரண்டும் நிற்கின்றன. அவற்றை ஆதாரமாகப் பற்றி நிற்கிறது. வயிறு, மார்பு, கைகள், தோள்கள் இவையனைத்தும் வயிற்றின் மேல் இருக்கின்றன. இந்தத் தோளின் மீது படிந்திருப்பது சிவிகை இப்படியிருக்க எனக்கு ஏது பாரம்?  அந்தச் சிவிகையிலே நீ என்று உன்னால் நினைக்கப்பட்ட தேகம் இருக்கிறது. அந்தத் தேகத்தில் நீ இருக்கிறாய். அதுபோலவே, இந்த தேகத்தில் நான் இருக்கிறேன்.

அரசே! நீயும் நானும் தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவரும் பிருத்வி முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்தப் பூதவர்க்கமும் குணங்களின் வெள்ளத்திலே வீழ்ந்து, அதன் வசத்தால் நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. சத்துவம் முதலான குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் அவித்தையினாலே சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வவித்தை சகல பிராணிகளிலும் இருக்கின்றது. ஆத்மாவோ சுத்தமாய், நாசமில்லாததாய், பசி முதலியவைகள் இல்லாததாய் சத்துவாதி குணரகிதமாய், குணமயமான பிரகிருதியைக் காட்டிலும் வேறானதாக இருக்கிறது. அது சகல ஜந்துக்களிலும் தேகம்போல் அநேக அம்சமாய் இராமல் ஒரே அம்சமாக இருக்கிறது. அது வளர்வதுமில்லை; தேய்வதுமில்லை. இப்படியாக ஆன்மாவுக்கு விருத்தியோ தேய்வோ இல்லாமலிருக்க, நான் பருத்திருக்கிறேன் என்று எந்த யுக்தியினாலே சொன்னாய்? அன்றியும் பூமி, பாதம், கணைக்கால், தொடை, இடை முதலான உறுப்புகளின் அடுக்கின் மேலுள்ள தோளில் இருக்கும் பல்லக்கினால் எனக்குப் பாரம் உண்டென்றால் அந்தப் பாரம் உனக்கும் சமமாக இருக்க வேண்டும்.  மேலும் சகலமான பேருக்கும் இந்தப் பல்லக்கின் பாரம் மட்டுமல்ல, காடு, மலை, வீடு முதலானவற்றைப் பற்றிய பாரமும் உண்டென்றே சொல்ல வேண்டும். இப்படியின்றி, ஆன்மாவானது பிராகிருதங்களான அவயவங்களைவிட வேறு என்பது சித்தப்படும்போது, நான் பாரத்தைச் சுமக்கிறேன் என்பது ஏது? இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ, அந்தப் பொருளால் ஆனது தான் இந்த உடம்புமாகும். இதில் தான் எனக்கும் மற்றவருக்கும் மமத்துவம்! எனது என்ற அபிமானம் உள்ளது! என்று சொல்லி விட்டுப் பல்லக்கைச் சுமந்து கொண்டு சென்றார். இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டு சிவிகையிலிருந்து கீழே இறங்கி ஜடபரத யோகியாரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும். தேவரீர் ஜடனைப்போல ரூபந்தரித்துள்ளீர். தேவரீர் யார் என்றே தெரியவில்லை. என்ன காரணத்தினால் என்ன பயனைக் கருதி இங்கே எழுந்தருளினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்றான். அரசே! நீ யார் என்று என்னைக் கேட்டாயல்லவா? அதற்கு நான் இன்னார் என்று விடையளிக்க முடியவில்லையே! எப்பயனை கருதி எதனால் இங்கே வந்தாய் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுவதில்லை. எங்கும் வருவதற்குப் பயன் அனுபவமே. இந்தச் சுகதுக்க அனுபவங்கள். புண்ணிய பாவங்களால் உண்டானவைகளாய். இடத்தையும் காலத்தையும் பற்றியிருப்பதால் ஜீவன்கள் தனது கர்மானுபவத்திற்கு உரியதேச காலங்களிலே தேகாதிகளைப் பெற்று வருகின்றனர் என்றார் ஜடபரதர்.

யோகியாரே! சகல காரியங்களுக்கும் தருமா தருமங்களும் காரணம் என்பதும் சுகதுக்க அனுபவித்திற்காகத் தேகம் பிரவேசிப்பது என்பது சரிதான். ஆனால் நான் இன்னார் என்று ஆன்மாவைக் குறித்துச் சொல்லக்கூடாது என்று கூறினீர்களே? அதையறிய விரும்புகிறேன் ஆத்மா என்பது இல்லாத பொருள். ஆகையால் அப்படிச் சொல்லக்கூடாது என்றால் ஆத்மா இருக்கிற வஸ்துவேயல்லாமல் இல்லாததன்றே இந்த நான் என்னும் சொல் ஆன்மாவின்மேல் பிரயோகிப்பது குற்றம் அல்லவே? இப்படியிருக்க நான் இன்னான் என்று சொல்ல முடியாது என்று நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்? என்று அரசன் கேட்டான். அரசே! ஆன்மாவைக் குறித்து நான் என்னும் சொல்லைப் பிரயோகிப்பது குற்றமல்ல. அதுவும் சரிதான். ஆனால் நான் இன்னான் என்பதனால் ஆத்மாவல்லாத தேகாதிகளிலே ஆத்மபுத்தியும், இப்படிப்பட்ட பிராந்தியைத் தெரிவிக்கும் சொல்லாவதும் ஆகிய குற்றங்கள் உண்டாம். அரசே! நான் என்று சொல்வது எது? நாக்கும், உதடுகளும், பற்களும், தாழ்களும் தான். நான் என்று சொல்கின்றன என்று நினைக்கிறாயே, அவைகள் அனைத்தும் கருவிகளே யல்லாமல் கர்த்தாவான ஆத்மாவன்று, தேகத்தைக் காட்டிலும் வேறானது. ஞானமே வடிவாகக் கொண்ட நான் என்னும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வடிவுள்ள ஆத்ம ஸ்வரூபம் ஒன்று இருக்குமானால் என்னை இன்னான் என்று சொல்லலாம். அப்படித்தான் இல்லையே? ஆன்மா நித்தியப்பொருள். உடல் முதலியவை அநித்தியப் பொருள்கள். ஆகையால் அரசனாகிய நீயும் இந்தச் சிவிகையைச் சுமக்கின்ற நாங்களும் எல்லாமே இருக்கும் பொருளல்ல. எப்படியெனில் முன்பு மரமாக இருந்தது வெட்டப்பட்டு கட்டையாயிற்று. பிறகு அது நீ ஏறியிருக்கிற பல்லக்கு ஆயிற்று. இந்த நிலையில் அதற்கு மரம் என்றோ கட்டை என்றோ பெயர்களில்லை! மகாராஜா மரத்தின்மேல் ஏறியிருக்கிறார் என்று இவர்களே சொல்வார்களா? அல்லது கட்டையின் மேல் இருக்கிறார் என்றுதான் சொல்வார்களா? சிவிகையில் இருக்கிறார் என்றுதானே சொல்வார்கள்? இதனை ஆராய்ந்தால் சிவிகை என்பது ஒருவகை ஜோடிப்பே ஆகும். அதாவது கட்டைகள் அடுக்கப்பட்ட ஜோடிப்பு. இந்த ஜோடிப்பைப் பிரித்துவிட்டுப் பிறகு பல்லக்கு எங்கே என்பதை தேடிப்பார். அதுபோலவே சலாகை முதலியவற்றைப் பிரித்துக் குடையைத் தேடிப்பார். இந்த நியாயத்தாலேயே, இன்னார், நான் இன்னார் எப்படி என்பது தெரியும், கர்மவசத்தால் உண்டாகியிருக்கிற தேகங்களிலே புருஷன் என்றும் ஸ்திரீ என்றும், மாடென்றும், ஆடென்றும், யானையென்றும், குதிரையென்றும், மரம் என்றும் கொடி என்றும் வழங்கப்படுகின்றன. நீ, நான் என்கிற சொற்களின் முக்கியப் பொருளான ஆன்ம சொரூபமானது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமுமல்ல, மரமுமல்ல. இத்தேவத்துவலதி தர்மங்கள் எல்லாம் கர்மத்தினால் வந்த சரீரரத்தின் ரூபபேதங்களேயாகும். அரசே! நீ உலகத்தாருக்கு அரசன்! தகப்பனுக்கு மகன்! பகைவனுக்கு பகைவன்! மனைவிக்கு மணாளன்! மகனுக்குப் பிதா! இப்படடியிருக்க உன்னை யார் என்று நான் சொல்வேன். மேலும் நீ என்ன சிரசா, கழுத்தா, வயிறா? இந்த உடம்புக்கு நீ யார்? உனக்கு இந்த உடல்யாது? இவ்விதமாய்ச் சகல உறுப்புகளுக்கும் வேறாய் இருக்கிற நீயே நன்றாக ஆலோசித்து நான் யார் என்று சிந்தித்துக்கொள். உண்மை இப்படியிருக்க என்னை நான் இன்னான்! என்று வேறுபடுத்தி எப்படிச் சொல்லமுடியும் என்று ஜடபரதர் விளக்கினார்.

14. பரம்பொருள் தெளிவு

ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஜடபரதர் கூறியதும் அரசன், அவரை நோக்கி சுவாமீ! சகல ஜந்துக்களிலும் பிரகிருதியிலும் வேறாய் ஞானஸ்வரூபமாய் மகத்தானதாய் ஒரேவிதமான ஆத்ம ஸ்வரூபம் உண்டென்றும் கூறினீர்கள். சிவிகையை நான் சுமக்கவில்லை; என்னிடத்தில் சிவிகையும் இல்லை; இந்த உடல் சுமக்கின்றது. நம்மைவிட அது வேறானது. திரிகுணங்களின் ஏவலினால் பஞ்சபூதங்கள் அசைகின்றன. அந்தக்குணப் பிரவிருத்தியும் கருமத்தினால் ஏவப்படுகிறது. ஆகையால் அவற்றால் எனக்கென்ன என்றும் தாங்கள் இத்தகைய பரமார்த்தங்களைக் கூறினீர்கள். மகானே! நான் இந்தச் சம்சாரத்தில் எது உயர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கபில மஹாமுனிவரிடம் போகப் புறப்பட்டேன். இதனிடையில் அந்தப் பரமார்த்த விஷயத்தைத் தேவரீர் அருளிச் செய்ததால் என்மனம் தங்களையே நாடுகின்றது. கபில முனிவர் உலக அஞ்ஞானத்தைப் போக்கும் பொருட்டு பூமியில் இறங்கிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமானவர். தங்களையே அந்தக் கபிலராக நான் கருதுகிறேன். ஆகையால் அடியேனுக்கு எது உயர்ந்ததோ அதனை அறிவிக்க வேண்டும், என்றான். அரசே! இப்போது நீ என்னை உயர்வைப் பற்றிக் கேட்கிறாயா? அல்லது பரமார்த்தத்தைப் பற்றிக் கேட்கிறாயா? சிரேயசு என்பதும் பரமார்த்தம் என்பதும் ஒன்றல்ல. எந்த மனிதன் தனது இஷ்ட தேவதைகளை ஆராதித்துப் பணம் முதலிய சம்பத்துக்களை இச்சிக்கின்றானோ அந்தச் செலவப்பேறே சிரேயசு எனப்படும். அதுபோலவே, சந்தானத்தை இச்சிப்பவன் அதையடைவது சிரேயசாகும். யக்ஞாதி கர்மங்களைச் செய்து சுவர்க்காதிகளைப் பெற நினைப்பவனுக்கு அந்தச் சுவர்ககாதிகளே சிரேயசாகும். எந்தவொரு பயனையுங்கருதாமல் யாகாதி கர்மங்களைச் செய்பவனுக்கு அந்தக் கருமமே உயர்வாகும். யோக நிஷ்டையிலிருந்து ஆத்மத் தியானஞ் செய்வோருக்கு அதுவே உயர்ந்தது. அந்த ஆன்மாவுக்குப் பரமாத்மாவோடு ஒன்றாகக் கூடுதல் மேலான சிரேயசாகும். இப்படி ஒன்றுக்கொன்று மேலான ஏழு சிரேயசுகள், முக்கியமானவைகள். இவற்றின் உட்பிரிவான சிரேயசுகளும் உண்டு. இவையெல்லாம் பரமார்த்தங்களல்ல. எப்படியெனில் பணமே பரமார்த்தமானால் அதைத் தருமத்திற்காகவும், காமத்திற்காகவும் செலவு செய்வார்களல்லவா? அப்படிச் செலவு செய்வதனால் அது பரமார்த்தம் ஆகமாட்டாது. இதனால் சாதிக்கப்படுகின்ற தர்ம, காமங்களும் அழியக்கூடியவை. ஆதலால் அவை பரமார்த்தம் என்று சொல்லப்படமாட்டா; காரியங்கள் எல்லாம் காரணங்களுக்குப் பரமார்த்தமேயல்லாமல் யாவற்றுக்கும் ஆகமாட்டாது. ராஜ்யம் முதலானவை பரமார்த்தம் என்றால், அவை நிலையானதாகாமையால் அவை பரமார்த்த மாகாத்ரிக்கு, யஜுர், சாமம் என்ற வேதங்களின் விதிப்படி செய்கின்ற யாக கருமத்தையே பரமார்த்தம் என்று நீ நினைத்திருந்தாயானால், அதுவுமல்ல மண் என்ற காரணப்பொருளினால் உண்டாக்கப்படும் குடம் முதலியவைகளுக்கான காரியங்கள் எல்லாம் காரணமான மண்ணின் தன்மையையே அடைந்திருப்பதைப் போல், நாசப்படத்தக்க சமித்து; நெய், தர்ப்பை முதலியவற்றால் செய்யப்படும் யாகாதி கர்மமும் நாசப்படத்தக்கது. ஆகையால் அதுவும் பரமார்த்தமாகாது. பரமார்த்தம் என்பது நாசப்படாததாக ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதேயாகும்! யாதொரு பயனையும் விரும்பாமற் செய்கிற யாகங்கள், மோக்ஷத்துக்குச் சாதனமானவை. ஆகையால் அவை பயனைக் கொடுத்தவுடன் நசிப்பதால் அது பரமார்த்தமல்ல ஆன்மத் தியானமும், விசதம் விசத்தரம், பிறவற்றினின்றும் தெளிவு, நற்றெளிவு என்று இவ்வகைப்பட்ட அவஸ்தா பேதங்களை யடைதலாலும், போனதை நினைத்தல், பிரத்யக்ஷத் தோற்றம் முதலாக க்ஷணந்தோறும் மாறுதலினாலும் அது பரமார்த்தமன்று.

பரமாத்மாவோடு ஆத்மா ஐக்கியமாகின்ற யோகமே பரமார்த்தம் என்று சிலர் நினைக்கிறார்கள் அல்லவா? அப்படிப்பட்ட யோகம் பொய்; ஆகையால் அதுவும் பரமார்த்தம் அன்று! அந்த யோகம் ஏன் பொய்யென்றால் ஒரு பொருள் மற்றொரு பொருளாக ஆகமாட்டாதாகையால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாக மாறமாட்டாது. ஆகையால் அரசே! நான் முன்பு சொன்னவைகள் யாவும் சிரேயசுகள் என்பதில் ஐயமில்லை. பரமார்த்தம் எதுவென்று சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். தேகத்தைப் போலப் பல பொருளாயிராமல் ஒரு பொருளாயும், ஞானத்தினால் எங்கும் வியாபிக்கக் கூடியதாயும், தேகத்தைப் பற்றிய வித்தியாசமின்றிச் சமமாயும், நிர்மலமாயும், சத்துவாதிகுண சம்பந்தம் இல்லாததாயும், பிரகிருதிக்கு வேறுபட்டதாயும், உற்பத்தி விநாச விருத்தி க்ஷயாதிகள் இல்லாததாயும், நுண்மையினாலே அக்கினி வாயு ஜலாதிகளான அழிக்கும் பொருள்களுக்கு உட்படாததாயும், பற்றிக்கொள்ளுதல் முதலான தோஷங்கள் இன்றி, தேகாதிகளுக்கு அதிபதியாயும் இருக்கிற ஆத்மஸ்வரூபம் எதுவுண்டோ அது மேலான ஞானவடிவமாய், அவித்யா ரூபங்களான ஜாதி நாமாதிகளோடு பூதம், வர்த்தமானம், பவிஷியத் என்ற மூன்று காலங்களிலேயும் கூடாதது. தன்னுடையதும் பிறரதுமான தேகங்களில் இருக்கின்ற அந்த ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி எல்லாம் ஒரே விதம் என்ற ஞானம் எதுவுண்டோ, அந்த ஞானஸ்வரூபம் தான் பரமார்த்தமாம்! ஆதலால் தேக வித்தியாசத்தினால் மாறுபாடாக நினைப்பவர்கள் யதார்த்தத்தை அறியாதவர்கள். புல்லாங்குழலின் உள்ளே நுழைந்த காற்று ஒன்றாயிருந்தும் அதன் துவார பேதங்களினால் அந்தக் காற்றுக்கு ஆறுவகை ஸ்வரபேத நாமதேயம் உண்டாவதைப்போல, ஆத்துமஸ்வரூபம் பேதம் இல்லாததாக இருந்தும், அதற்குப் புறம்பான கர்ம பேதத்தினால் வந்த சரீர பேதத்தைப் பற்றி, தேவன், மனிதன் என்ற விவகாரம் உண்டாகிறது. அந்தக் கர்மாவாகிய மறைவு அழிந்தால் அந்தத் தேவாதிபேதம் இல்லவேயில்லை என்று அறிவாயாக! என்று ஜடபரதர் உபதேசித்தார்.

15. ருபுநித உபாக்கியானம்

மைத்ரேயரே! இவ்விதமாக ஜடபரதர் கூறியும் அந்த அரசன் மனம் திடப்படாமையால் ஒன்றுமே பேசாமல் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது ஜடபரதர், ஞானபேதம் இன்மையைப் பற்றிய கதையொன்றைச் சொல்லத் துவங்கினார். அரசே! நிதாகருக்கு ஞானத்தை உண்டாக்க ருபு என்பவர் பூர்வத்தில் பரமேஷ்டிக்கு ருபு என்ற குமாரர் ஒருவர் உண்டு. அவர் இயல்பாகவே தத்துவ ஞானமுடையவராக இருந்தார். அவருக்குப் புலஸ்திய முனிவரின் குமாரரான நிதாகர் என்பவர் சீடராக இருந்தார். அவருக்கு அந்த ருபு சகலகலா ஞானங்களையும் ஓதுவித்தார். அவ்வளவு கலைகளைக் கற்றிருந்தும் கூட நிதாகருக்கு ஆத்தும ஸ்வரூபத்தில் பேதம் இல்லாமையைப் பற்றிய வாசனை இல்லை என்பதை ருபு அறிந்துகொண்டார். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு தேவிகா நதிக்கரையில், புலஸ்தியர் ஏற்படுத்திய ஓர் உத்தியான வனத்தில் நிதாகர் வசித்துக் கொண்டிருந்தார். அவரைக் காண ருபு முனிவர் சென்றார். அப்போது நிதாகர் வைசுவ தேவத்தை முடித்துவிட்டு, வாசலில் வந்து அதிதிகளை எதிர்பார்க்கும் தருணத்தில், ருபு முனிவர் வருவதைக் கண்டார் வந்தவரை நிதாகர் உபசரித்து, சுவாமி! அமுது செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்கு ருபு முனிவர், பிராமணோத்தமரே!  உமது வீட்டில் நான் புசிக்கத்தக்க பொருள் என்ன இருக்கிறது? ஈனமான போஜனத்தில் எனக்குப் பிரியமில்லை என்றார். உடனே நிதாகர், சுவாமி என் கிருஹத்தில் அரிசி மாவினாலும் யவதானியங்களாலும் செய்யப்பட்ட அப்பளங்கள் இருக்கின்றன. காய், கிழங்கு, கனி வகை உணவுப்பொருள்கள் உள்ளன. அவற்றையெல்லாம் தேவரீர் அமுது செய்தருளலாம் என்றார். குருநாதரோ, இவையெல்லாம் அற்ப போஜனங்கள்! எனக்கு இவற்றை அருந்தப் பிரியமில்லை. மோர்க்குழம்பு, பாயாசம், தேன் குழல், முதலியவற்றைப் புசிக்க விரும்புகிறேன் என்றார். உடனே, நிதாகர் தம் மனைவியை அழைத்து அடி! நம்முடைய இல்லத்துக்கு ஒரு பெரிய மகான் வந்திருக்கிறார். அவருக்கு, நம் வீட்டில் மிகவும் உயர்ந்த பொருள் எதுவுண்டோ அதைக் கொண்டு அன்னஞ்செய்து, அவருக்கு உணவிடுவாயாக! என்றார். அவரது மனைவியும் தன் கணவனின் கட்டளையை ஏற்று, அக்காரவடிசில் முதலியவற்றைச் செய்து; பரிமாறினாள். அவற்றை ருசித்துப் புசித்துக் கொண்டிருந்த ருபுவை பார்த்து, சுவாமி! தங்களுக்குத் திருப்தியும் சந்துஷ்டியும் உண்டாயினவா? தேவரீர் திருவுள்ளம் நலமா? தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம்எது! எங்கிருந்து எழுந்தருளியிருக்கின்றது? எங்கே எழுந்தருள உத்தேசித்து, இங்கே எழுந்தருளியது? இவற்றையெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும் என்று நிதாகர் கேட்டார்.

பிராமணோத்தமரே! எவனுக்குப் பசியுண்டோ அவனுக்குத்தான் அன்னத்தைப் புசிப்பதனால் திருப்தி உண்டாகிறது. எனக்கு பசியில்லை அப்படியிருக்கு எனக்குத் திருப்தியுண்டாவென்று ஏன் கேட்கிறீர்? பிருதிவி சம்பந்தமான தாதுவானது கர்ப்பத்திலிருக்கும் அக்கினியால் அழிக்கப்படும் அளவில் பசியும் அந்த அக்னி வேகத்தினால் உள்ளேயிருக்கும் நீர் வற்றிப் போவதால் தாகமும் உண்டாகின்றன. (இந்தப் பசி தாகங்கள் இச்சா ரூபங்கள் ஆகையால் அவை மனோதர்மமாகும்.) ஆயினும் தாது க்ஷயத்தினால் உண்டாகின்றனவாகையால் தேக தருமங்களாகின்றன. எனக்கு இவை இல்லையே! ஆகையால் பசியினால் உண்டான திருப்தி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எனக்கு இல்லை. மனது நலமாயிருப்பது சந்துஷ்டியும் சித்தத்தின் தன்மைகளுமேயாகும். ஆகையால் இவ்விரண்டையும் பற்றிச் சித்தத்தையல்லவா கேட்க வேண்டும்? என்னை ஏன் கேட்கிறீர்? நான் மட்டுமல்ல, என்னைப் போலுள்ள ஆன்மாக்களுக்கெல்லாம் இந்தப் பசி முதலானவை இல்லையென்று அறிவீராக. வாசஸ்தானம் எது? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று நீர் கேட்டவைகளுக்குப் பதில் சொல்கிறேன் கேளும். புருஷன் தேவமனுஷ்யாதி சகல சரீரங்களிலேயும் இருக்கத்தக்கவனாய், சகல அசேதனங்களிலேயும் வியாபிக்கத்தக்கவனாய்; ஆகாயத்தைப் போல ஒன்றோடும் ஒட்டாதவனாய் இருக்கிறான். இத்தகைய ஆன்மாவைப் பார்த்து எங்கே இருக்கிறாய்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்ற கேள்விகளுக்குப் பொருள் இல்லை! ஆகையால், அத்தகைய நான் போகிறவனுமல்லன்; வருகிறவனுமல்லன்; ஓரிடத்தில் இருப்பவனுமல்லன் நீயும் மற்றவர்களும் கூட அப்படியேதான்! ஆனால் வருவதும் போவதுமாகத் தோன்றுவது தேகவசத்தினாலேயாகும். ஆகையால் போக்குவரத்துகளுக்குக் கர்த்தாவாகத் தோன்றும் இந்தத் தேகம் நான் அன்று; அதுபோலவே நீயும் அன்று? மற்றவர்களும் மற்றவர்கள் அன்று! ஆனால் நல்ல போஜனம் அளிப்பாய்; அற்ப ஆகாரம் வேண்டாம் என்று நான் சொன்னது சுபாவ சித்தமோ உபாதியைப் பற்றியதோ என்று உமது கருத்தை அறியப் பரீட்சை செய்தேனேயன்றி நான் மெய்யாகக் கேட்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறேன், கேட்பீராக.

உண்பவனுக்கு இது சுவையுள்ளது; இது ருசியில்லாதது என்று ஒரு நியதியும் இல்லை. யாதொரு வியாதியும் இல்லாமல் நல்ல பசியுள்ளவனுக்கு புழுத்த உளுந்து முதலியவற்றால் செய்த தாழ்வான உணவுகளும் ருசியாகவே இருக்கும். அப்படியில்லாதவனுக்குத் தேன்குழல், அக்காரவடிசில் முதலியவை ருசிகரம் ஆகாமற் போகின்றன. ஆகையால் உண்பவனுடைய உடலின் தன்மையின்படி உணவுகளில் ருசியும் அருசியும் உண்டாகின்றன. எனவே மதுரம் என்பதும் அமதுரம் என்பதும் அவுபாதிகமேயன்றி சுவாபிகமன்று, மண்ணாற்கட்டிய வீடு, மண்ணாலேயே பூசப்பட்டு உறுதியாவது போல, பிருத்வி மயமான இந்த உடலும் பிருத்விச் சம்பந்தமான பொருள்களாலேயே உறுதியாக வேண்டியுள்ளது. அதனால் தான் யாவருமே உணவருந்த வேண்டுவது அவசியம். யவம்; கோதுமை, பயிறு முதலிய தானியங்களும் நெய் எண்ணெய் பால் தயிர் முதலிய ரசவஸ்துக்களும் வெல்லம் கனிகள் முதலிய பொருள்களும் பிருத்வி சம்பந்தமான அணுக்களேயாகும். ஆகையால் நான் முன்பு சொல்லி வந்த விஷயங்கள் யாவையும் நன்றாக அறிந்து, இது இனிப்பு இது இனிப்பல்ல என்றும், இவன் தேவன் இவன் மனிதன் என்றும், பேதவிசாரனை செய்யும் மனதை, இத்தகைய பேதங்களெல்லாம் கர்மத்தினால் வந்த விகாரங்கள், என்றும் ஆத்ம சொரூபத்தில் வைஷமியம் யாதும் இல்லை என்றும் சமத்துவ ஞானம் உள்ளதாகச் செய்யவேண்டும். இத்தகைய சமத்துவ புத்திதான் மோக்ஷகாரணமாகும் என்றார் ருபு. நிதாகர் தம் குருவை வணங்கி, ஐயனே! பரமார்த்தத்தைப் பற்றித் தாங்கள் கூறிய வசனங்களைக் கேட்டு என் அஞ்ஞானம் நீங்கியது. தாங்கள் யாரோ தெரியவில்லை. சாதித்தருள வேண்டும்! என்று விண்ணப்பஞ்செய்தார். ருபு, தன் சீடனை நோக்கி, உமக்கு ஆசாரியனான ருபு என்பவன் தான் நான்! உமக்கு ஞானத்தைப் போதிக்கவே இங்கு வந்தேன். நினைத்தபடி உமக்குப் பரமார்த்தத்தைத் தெரிவித்தேன். இனி நான் என்னிடம் போகிறேன். உமக்குச் சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன் கேளும். தேவ மனுஷ்யாதி பேதமாய்க் காணப்படுகின்ற சேதன ஸ்வரூபம் யாவும் ஒன்றேயல்லாமல் பேதப்பட்டதன்று. தேவாதி பேதங்களோ கர்ம வசத்தினால் வந்த பூதவிகாரங்களாகும். இப்படிச் சேதனா சேதனாத்துமகமான சகல பிரபஞ்சமும் ஸ்ரீவாசுதேவன் என்னும் திருநாமமுடைய பரமாத்மாவுக்குத் திருமேனியாய் இருக்கின்றன! என்று கூறினார். அதைக்கேட்ட நிதாகர், இனி அடியேன் அப்படியே நினைத்திருக்கிறேன் என்று தண்டம் சமர்ப்பித்து மகாபக்தியோடு உபசாரஞ்செய்தார். அதன் பிறகு ருபு முனிவர் தம் இருப்பிடத்தை அடைந்தார்.

16. நிதாகரும் ஜடபரதரும் முக்தியடைந்தது

ஜடபரத மகரிஷி சவ்வீர ராஜனை நோக்கி, அரசே! கேள், மறுபடியும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ருபுவானவர் தம் சீடர்களுக்கு ஞானோபதோம் செய்ய நினைத்து, அந்த நகரத்துக்குச் சென்றார். அப்போது பரிவாரங்களுடன் அரசன் பட்டணப்பிரவேசம் செய்து கொண்டிருந்தான். நிதாகர் காட்டிலிருந்து சமித்து, கருப்பைகளைச் சேகரித்துக் கொண்டு சந்தடியாக இருந்ததால் தீட்டுப் படுவோம் என்று பட்டணத்தினுள் போகாமல் தூரத்தில் நின்று கொண்டிருந்தார். பசியினால் மெலிந்திருந்த நிதாசரைக் கண்ட ருபு முனிவர், ஓ பிராமணரே! நீங்கள் ஏன் ஒன்றியாக இங்கே நிற்கிறீர்? என்று கேட்க, அதற்கு நிதாகர், சுவாமி! இங்கு அரசன் பட்டணத்துக்குள் போகிறான். ஆகையால் ஜனநெருக்கம் அதிகமாக இருப்பதால், உள்ளே போகமுடியாமல் இங்கே நிற்கிறேன் என்றார். அதைக் கேட்டதும் ருபு முனிவர், ஐயனே! அரசன் யார்? ஜனங்கள் யார்? எனக்குத் தெரியவில்லை நீரோ அதைத் தெரிந்தவராக இருக்கிறீர்! ஆகையால் எனக்குத் தெரியும்படிச் சொல்லவேண்டும் என்றார். உடனே நிதாகர், அதோ பாரும், பெரியமலைச் சிகரம் போன்று மிகப்பெரியதாக இருக்கும் யானையின் மேல் ஏறிக்கொண்டு பிரகாசிக்கிறானே, அவன் தான் அரசன்! அவனைச் சுற்றி நிற்பவர்கள் பரிவாரங்கள்! என்றார். அதற்கு ருபு புன்முறுவலுடன், ஐயா! நீர் அரசர் என்றும் யானை என்றும் வெவ்வேறான லக்ஷணமுடையனவாய், இரண்டு பொருள்களை ஒரே சமயத்தில் சொல்கிறீர்கள். எனக்கோ அவற்றில் பேதம் தெரியவில்லை. என்ன விசேஷமோ அதை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும். யார் அரசன்! எது யானை? இதையறிய விரும்புகிறேன் என்றார். அவரை நிதாகர் வியப்புடன் பார்த்தபடி, என்ன பிராமணரே! கீழே இருப்பது யானை, மேலே இருப்பது அரசன்! இது உமக்குத் தெரியவில்லையா? என்று கேட்டார். பிராமணரே! கீழே இன்னது மேலே இன்னது என்று எனக்கு நன்றாகத் தெரிவிக்க வேண்டும் என்று ருபு சொன்னார், உடனே நிதாகர் ருபு முனிவரின் மேல் ஏறிக்கொண்டு இப்பொழுது நான் சொல்வதைக் கேளும். நான் இருக்குமிடம்தான் மேல்; மேலே என்னைப்போல் ஏறியிருப்பவனே அரசன்! நீர் இருக்கும் இடம்தான் கீழ், உம்மைப் போல கீழே சுமந்து கொண்டிருப்பதை யானையென்று அறியும்! இந்த விஷயம் உமக்குத் தெரிவதற்குத்தான் கண்கூடாகக் காண்பித்தேன்! என்றார் நிதாகர். பிறகு ருபு புன்முறுவலுடன் சரிதான் நீ என்பதும் நான் என்பதும் எனக்குத் தெரிந்தால் அல்லவோ மற்றைய காரியங்களை நான் அறிந்து கொள்வேன்? அந்தப் பேதமே எனக்குத் தெரியவில்லை! ஆகையால் நீ நான் என்பவர்கள் யாரோ என்பதை தெரியச்சொல்ல வேண்டும் என்றார். எனக்கு இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் நிதாகர் பரபரப்புடன் அவரது திருவடிகளில் விழுந்து தண்டம் சமர்ப்பித்து சுவாமீ! தேவரீர் எனது ஆசாரியரான ருபுவென்று நினைக்கிறேன். மற்றவர்களுடைய இதயம் இப்படி ஆத்ம அபேத ஞானத்தால் தூய்மையடைந்திருக்õது. ஆகையால் நீங்கள் எனது குருநாதர் என்பதில் சந்தேகமேயில்லை என்றார். அதை ருபுமுனிவர் ஆமோதித்து, நான் ருபுதான்! நீ எனக்குச் செய்த பணிவிடைக்கு மகிழ்ந்து உனது ஞானத்தை நிலைப்படுத்த நான் இங்கு வந்தேன். பரமார்த்த சாரமான அபேத ஞானத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன் என்று சொல்லிவிட்டுத் தமது இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். நிதாகரும் சகல ஆத்ம சொரூபங்களும் ஒரே வகையானவையே என்ற உறுதியடைந்து, யாவற்றையும் பிரம்மஸ்வரூபமாகத் தியானித்து, மேலான மோட்சத்தை அடைந்தார்.

அரசே! நீயும் அப்படியேதான். சத்துருக்கள், மித்திரர்கள் என்ற வித்தியாசமின்றி, கர்மவசத்தால் எங்கும் இருக்கின்ற ஆத்ம சொரூபம் ஒருவிதமானதே என்பதை நினைத்திருப்பாயாக. களங்கமற்ற சுத்தமான ஆகாயம் ஒன்றேதான் ஆயினும் அது உபாதி வசத்தால் கறுப்பு, வெளுப்பு என்று வெவ்வேறாகத் தோன்றுகிறது. அதுபோலவே ஒரே விதமான ஆத்ம ஸ்வரூபம் அஞ்ஞானிகளுக்கு வெவ்வேறாகத் தோற்றமளிக்கிறது. இதை இன்னுஞ் சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். எந்தெந்தப் பொருளுண்டோ, அந்தந்தப் பொருள்கள் யாவும் ஸ்ரீ அச்சுதனுடைய சொரூபம்தான்! அவனுக்கு வேறானதும் மேலானதும் எதுவுமில்லை. நானும் அவன் ஸ்வரூபம்; நீயும் அப்படியே சகலமும் அப்படித்தான். ஆகையால் எல்லாம் வேறு வேறு என்கின்ற பேதபுத்தியாகிய அஞ்ஞானத்தை விட்டு விடு என்று ஜடபரதயோகியார் கூறினார். அரசன் சுத்த ஞானியானான் ஜடபரதயோகியும் பூர்வ ஜன்ம ஸ்மரணத்தினால் ஞானயோகமடைந்து அந்தப் பிறவியிலே மோட்சமடைந்தார். இத்தகைய மகானுபாவரான ஜடபரத யோகியாரின் இந்த மேன்மையான சரிதத்தை எவன் ஒருவன் சொல்லுகிறானோ, எவன் பக்தியுடன் இதைக் கேட்கிறானோ அத்தகையோரெல்லாம் சுத்த ஞானமுடையவர்களாகி மோக்ஷம் பெறுதற்குத் தக்கவராவர்.

இரண்டாவது அம்சம் முடிந்தது.

 
மேலும் விஷ்ணு புராணம் »
temple news
1. புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் ... மேலும்
 
temple news
9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும் பராசரர் ... மேலும்
 
temple news
15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும் பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! ... மேலும்
 
temple news
1. பிரியவிரத வம்சம் பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ... மேலும்
 
temple news
1. கடந்த மனுவந்தரங்கள் மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar