பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
கோவை: கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என, எஸ்.பி., உமா வேண்டுகோள் விடுத்தார். கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி., உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களின் செயல்அலுவலர்கள், உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர் அப்போது, எஸ்.பி., உமா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் 71 கோவில்கள் கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோவில் பாதுகாப்பு பணிக்கு இதுவரை 13 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெ.நா.பாளையம், அன்னூர், கிணத்துக்கடவு, வடசித்தூரிலுள்ள 10 புராதான கோவில்களுக்கு, கோவில் பாதுகாப்பு அலுவலர் நியமிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தியுள்ளனர். கோவில் பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாத சம்பளமாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் சம்பளம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பணிக்கு 62 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் பணிக்கு வரும் போது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு செல்ல வேண்டும். கோவிலில் இரவு பாதுகாப்பு பணியில் இருக்கும் போது, இரவு ரோந்து வரும் போலீசார் அவர்களை கண்காணித்து செல்வார்கள். கோவில் அருகில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலும், பொருட்கள் கிடந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அதிக வருவாய் உள்ள சில கோவில்களில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருபாலான கோவில்களில் இரவு பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லை. இந்நிலையில், கோவில்களில் உண்டியல், சாமி ஆபரணங்கள் வைத்திருக்கும் அறை, கருவறை கதவுகள் திறந்து கொண்டால், சைரன் ஒலிக்கும் வகையில் கருவிகளை பொருத்த வேண்டும். கோவிலுக்குள் நவீன கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும். இதற்கு மிகக்குறைந்த செலவுதான் ஏற்படும். அதனால், கோவில் நிதியில் துறை அனுமதி பெற்று கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி சட்டவிரேத, திருட்டு சம்பவங்களை தவிர்க்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு, எஸ்.பி., உமா தெரிவித்தார்.