கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 07:05
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமாக வரதராஜ பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா மே 15 ல் தொடங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோயிலில் வழிபட்டனர். பின்னர் இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கருப்பண்ண சுவாமியிடம் விடைபெற்ற பெருமாள், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் 5:40 மணிக்கு வைகையில் இறங்கினார்.
தொடர்ந்து வைகை ஆற்றில் மண்டகப்படிகளில் சிறப்பு பூஜைகள் நடந்து, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில், ஆற்றுப் பாலம் வழியாக, மஞ்சள் பட்டினம் மண்டகப்படி அடைந்தார். அங்கு காலை 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், மதியம் 3:00 மணிக்கு அனுமார் கோயிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து பெரிய பஜார் வழியாக வைகை ஆற்றில் மாலை 6:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து எமனேஸ்வரம் பகுதியில் அனைத்து நெசவாளர் குடியிருப்புகளுக்கும் சென்ற பெருமாள், நள்ளிரவு வண்டியூர் மண்டகப்படியில் சேர்க்கையாகினார். நாளை இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து அவதார சேவைகளில் அருள்பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.