பதிவு செய்த நாள்
22
ஜூன்
2022
03:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே, சிவபுரத்திலுள்ள சிவகுருநாதசுவாமி அமைந்துள்ளது. ராவணன் கைலாயத்துக்கு வந்த போது, நந்தி தேவர் தடுத்து நிறுத்தினார். தன் சகோதரனான ராவணனை கைலாயத்திற்குள் அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமடைந்த நந்தி, குபேரனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார்.
இதனால் பதவியிழந்த குபேரன், தனபதி என்னும் பெயருடன் மன்னனாக பூமியில் வாழ்ந்தான். சிவபக்தனான தனபதிக்கு சிவனுக்கு பரிகார பூஜை செய்து இழந்த பதவியைத் திரும்பப் பெற்றான். குபேரன் பூஜித்த லிங்கம் சிவகுருநாதர் என்னும் பெயர் பெற்றது.
இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில், பைரவர் தெற்கு நோக்கி இருப்பது விஷேசமாகும். இக்கோவில் பைரவருக்கு, வாஸ்து.பாலகிருஷ்ணன், வைத்தியநாதன் ஆகிய உபயதாரர் மூலம், மூலவர் பைவரவருக்கு 4 அடி உயரத்தில் வெள்ளி கவசமும், ஐம்பொன்னாலான உற்சவர் பைரவர் சிலை மற்றும் வெள்ளி கவசமும் தலா 1 அடி உயரத்தில் நேற்று வழங்கப்பட்டது. கவசங்கள் மற்றும் சிலையின் மொத்த 11.05 கிலோ, 12 லட்சம் மதிப்பாகும். இச்சிலை மற்றும் கவசங்களை கோவில் செயல் அலுவலர் சசிகலாவிடம், சிவகுருநாதர் மற்றும் கிராம மக்கள் ஒப்படைத்தனர். ஆனால், அறநிலையத்துறையின் நகைமதிப்பீட்டாளர் மூலம் பெற வேண்டும் என்பதால், மீண்டும் உபயதாரரிடம் வழங்கப்பட்டு, இரண்டு நாட்களில் சிலை மற்றும் கவசம் கோவிலில் பெற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவிலில், காணாமல் போய் மீண்டும் வந்த நடராஜர் சிலையை திருவாரூரில் உள்ளது. அச்சிலையை மீண்டும் கோவிலுக்கு வழிபாட்டிற்கு கொண்டு வர அரசு ஏற்பாடு செய்யவும், தற்போது சோமஸ்கந்தர் சிலை கிடைத்திருக்கிறது, அதுவும் மீண்டும் கோவிலுக்கு வழிபாட்டிற்கு கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம. நிரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.