காளையார்கோவில் : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கள்ளிவயலில், 2,500ஆண்டுகளுக்கு முந்தைய கல் வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலை வரலாற்று துறை கவுரவ விரிவுரையாளர் டி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:காளையார்கோவில் பகுதியில் கல்வட்டம் இருப்பதை அறிந்து அப்பகுதியில் ஆய்வு செய்தோம். இப்பகுதியில் 20 மீட்டருக்கு ஒரு கல் வட்டம் வீதம் ஏராளமானவை உள்ளன. பொதுவாக கல் வட்டம் வட்டமாக காணப்படும். ஆனால் அதற்கு மாறாக சதுரமாகவும் சில உள்ளன.ஒரு கல் வட்டத்திற்கு எட்டு கற்கள் வீதம் அரணாக அமைத்துள்ளனர். இது மாதிரியான கல்வட்டம் அதிசயம் தான்.இதுபோன்ற பகுதிகளை பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் கட்டுமான பொருளாக கற்களை மக்கள் எடுத்து சென்று விடுவர். இவற்றை பாதுகாத்து, தமிழ் நாகரிக கலாசாரத்தை வெளி உலகிற்கு சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இங்குள்ள கல்வட்டம் 2,500 ஆண்டுக்கு முந்தையவை. இவை, ஈமச்சின்னங்களின் அடையாளம். அக்கால கட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் தலைவர்கள் அல்லது முக்கிய நபர்களை புதைத்த இடத்தை சுற்றி கற்களை அடுக்கி வைத்து அடக்கம் செய்துள்ளனர்.அது தான் கல் வட்டம் என அழைக்கப்படுகிறது.