இன்று ஆவணி அவிட்டம் : சந்ததிகளிடம் சேர்ப்பது நம் கடமை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 07:08
இந்த திருநாளை கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு வேதம் கிடைத்த நன்னாள் ஆவணி அவிட்டம்.
இதனால் இதனை வேதத்தின் ஆண்டு விழா என்றே சொல்லலாம். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் வேதம் ஓதும் அந்தணர்கள் நடத்தும் வழிபாட்டிற்கு உபாகர்மா என்று பெயர். வேதம் கற்கத் தொடங்குவதால் உபாகர்மா எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி புதிதாகப் பூணுால் அணிந்து வேதத்தை அத்யயனம் (படிக்க) செய்ய ஆரம்பிப்பர். தற்காலத்தில் கோயிலில் இந்த சடங்கை நடத்துகிறார்கள். வேத கால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்ப்பணமும் கொடுப்பர்.
ரிக் வேதிகள் ஆவணி திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதிகள் ஆவணி பவுர்ணமியன்று உபாகர்மம் செய்வர். அதாவது ரிக் வேதிகள் நட்சத்திரத்தை வைத்தும், யஜுர் வேதிகள் திதியை வைத்தும் நாள் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளாகவே அமையும். சாம வேதிகள் இன்னும் சில நாள் கழித்து பாத்ரபத மாத அஸ்த நட்சத்திரத்தன்று உபாகர்மாவைச் செய்வர். அநேகமாக விநாயகர் சதுர்த்தியன்றோ அல்லது அதற்கு முன்போ, பின்போ வரும். ஆவணி அவிட்டத்தை பெரும்பாலும் புதுப்பூணுால் அணியும் நாளாக கருதுகிறார்கள். உண்மையில் பூணுால் மாற்றுவது என்பது உபாகர்மாவின் ஓர் அங்கம் மட்டுமே.
பூணுால் அணிந்த பின் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது வழக்கம். மனதிற்குள் காம சிந்தனை நுழைவதற்குள் காயத்ரி தேவி நுழைய வேண்டும் என்பர். இந்த மந்திரத்தை ஜபிப்போரின் மனமும், உடலும் துாய்மை பெறும். அதனால் ஏற்படும் ஆன்மிக அதிர்வலைகளால் உலகமே நன்மை பெறும். உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழும். வேதம் நமக்கு அளித்த பெருஞ்செல்வமான காயத்ரி ஜபத்தை சந்ததிகளிடம் சேர்க்கும் கடமை பெற்றோருக்கு உள்ளது.