பதிவு செய்த நாள்
14
ஆக
2022
02:08
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் அருகில் வடக்கு மாட வீதியில், குறிப்பிட்ட பகுதியை வாகன நிறுத்தும் இடமாக மாற்றுவதற்கு தடை விதிக்க கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த, போர்க்கால அடிப்படையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பார்க்கிங் வசதி இல்லை: கோவிலில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, பார்க்கிங் வசதி இல்லாததால், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்துகின்றனர். அவர்களின் வாகனங்கள் திருடு போகின்றன.பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 40 அடி அகலம் உள்ள வடக்கு மாட வீதியில், மாநகராட்சி அனுமதியுடன் சாலையின் ஓரத்தில், இரு சக்கர வாகன நிறுத்துமிட வசதி செய்து தர, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், சென்னை, வடபழநியை சேர்ந்த எஸ்.முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வடபழநி ஆண்டவர் கோவில் அருகில், வடக்கு மாட வீதியில் குறிப்பிட்ட பகுதியை, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர் கார்த்திகா அசோக்; கோவில் நிர்வாக அதிகாரி சார்பில், வழக்கறிஞர் எம்.கார்த்திகேயன் ஆஜராகினர்.மாநகராட்சி கவுன்சிலில், 2020 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:வடபழநி கோவில் வடக்கு மாட வீதியில் உள்ள, 4,344 சதுர அடி இடத்தை, வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்த, நிபந்தனையுடன் தடையின்மை சான்றிதழ் வழங்க, பணிகள் நிலைக் குழு சிறப்பு அதிகாரி மற்றும் மன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம்: தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த வாகன நிறுத்தும் இடத்தை, உரிமை மாற்றம் எதுவும் இன்றி, எந்தவித கட்டணமும் இன்றி, கோவில் நிர்வாகத்துக்கு வழங்கவும், பிற்காலத்தில் சாலை விரிவாக்கம் தேவைப்பட்டால், மாநகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர் கார்த்திகா அசோக் ஆஜராகி, வடக்கு மாட வீதியில் 4,344 சதுர அடி காலியிடத்தை, கோவிலுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு, வடபழநி ஆண்டர் கோவில் நிர்வாக அதிகாரி, 2020 ஜூலையில் கடிதம் அனுப்பி உள்ளார். சாலை, தெரு ஓரப்பகுதிகளை குத்தகைக்கு விட, மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. அதில், யாரும் குறுக்கிட முடியாது, என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு:சாலை மற்றும் தெரு ஓரப்பகுதிகள் தொடர்பாக, நிபந்தனை அடிப்படையில் குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்ற, மாநகராட்சி கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது.
சேறு உள்ள பகுதியில், பேவர் பிளாக் கல் பதித்து, வாகன நிறுத்துமிடத்துக்கு அனுமதி அளிக்கும்படி, கோவில் நிர்வாகத்திடம் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று, மாநகராட்சி கவுன்சிலில் 2020 செப்டம்பர் 8ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கோவிலுக்கு சாதகமாக, நிரந்தரமாக இடம் மாற்ற செய்ய, எந்த முடிவும் எடுக்கவில்லை. சாலை விரிவாக்கத்துக்கு இடம் தேவைப்படும்போது, மாநகராட்சி அந்த இடத்தை திரும்ப பெற்று கொள்ளும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, குறிப்பிட்ட இடத்துக்கு உரிமம் வழங்க, மாநகராட்சி முடிவெடுத்து உள்ளது.
எனவே, மாநகராட்சி சட்டத்தில் உள்ள அதிகாரத்தின்படி, சென்னை மாநகராட்சி எடுத்த முடிவில், மனுதாரர் குறுக்கிடுவது சரியல்ல. வடபழநி ஆண்டவர் கோவில் எதிரில், வடக்கு மாட வீதியில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தி, இதுவரை அனுபவித்த வசதிகளை பாதுகாக்கும் விதத்தில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.சாலை ஓரத்தை, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பயன்படுத்துவதால், கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், கோவிலை சுற்றிய தெருக்களில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதற்கு வழி வகுக்கப்பட்டது.வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி இருப்பதைப் பொறுத்து, அந்தப்பகுதியில் உள்ள போலீஸ் கமிஷனர், வாகன நிறுத்தப் பிரச்னையை கவனிக்கலாம் என, ஏற்கனவே உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுஉள்ளது.பொது இடத்தில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றியதால், கோவிலை சுற்றி போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளது எனவும், மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல்: எனவே, வடக்கு மாட வீதியில் குடியிருக்கும் மனுதாரர், மாநகராட்சியின் உரிமைகளில் குறுக்கிட முடியாது. கோவில் அருகில் சொத்து வாங்குவதற்கு முன், அந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் இருக்கும்; அதனால் சில அசவுகரியங்கள் வரும் என்பதை மனுதாரர் தெரிந்திருக்க வேண்டும். இவ்வழக்கில் தகுதி இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவர்கள், வாகனங்களை கோவிலை சுற்றி இஷ்டத்திற்கு நிறுத்துகின்றனர். குறிப்பாக, கோவிலின் நுழைவாயில் முன்புறம் உள்ள சாலையின் இரு புறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இம்மாத இறுதியில் இருந்து திருமண சீசன் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என, ஹிந்து பண்டிகைகள் தொடர்ந்து வர உள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும். எனவே, வடபழநி ஆண்டவர் கோவில் வடக்கு மாட வீதியில் வாகன நிறுத்தும் வசதியை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வெகு விரைவில்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், ஜூலை 28ம் தேதி துவங்கி, இம்மாதம் 10ம் தேதி முடிவடைந்தன. இதற்காக பல துறைகளில் அனுமதி பெறுவது உள்ளிட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்து, நான்கே மாதங்களில் தமிழக அரசு செய்தது.முதல்வர் ஸ்டாலினும், பன்னாட்டு விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய, 18 மாதங்கள் தேவை என்று சொல்வர்; ஆனால், நான்கே மாதங்களில் அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்துள்ளது என, பெருமிதம் தெரிவித்தார்.
செஸ் போட்டியை விட மிகவும் குறைந்த காலமும், வேலையுமே, வடபழநி இரு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்த தேவைப்படும். எனவே, ஆறு மாதங்களுக்கு மேல் எடுக்காமல் வெகு விரைவில் பார்க்கிங் பகுதியை அமைத்து முடிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட வேண்டும்.