பதிவு செய்த நாள்
24
டிச
2012
12:12
கிறிஸ்து இயேசுவாக பிறக்க சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்டது. இஸ்ரேலில் கிமு 700ல் வாழ்ந்த ஏசாயாவும், அதற்கு பின்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து பிறப்பை முன்னறிவித்தனர். குறிப்பாக தாவீதின் வம்சத்தில்(யூதர்கள்) கன்னிப்பெண் ஒருத்தி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், யூதேயா தேசத்தில் பெத்லகேம் என்னுமிடத்தில் அவர் பிறப்பார் என்றும், இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தைக் காண்பார்கள் என்றும், மரணத்தைச் சந்தித்து உயிரோடு எழுந்திருப்பார் என்றும், அவர் அதிசயமானவர், ஆலோசனை தருபவர், வல்லமையுள்ளவர், நிரந்தரக் கடவுள், சமாதானப்பிரபு என்ற முன்னறிவிப்புகளின்படி தோன்றினார். ரோமப் பேரரசர் ஏரோதுவின் ஆட்சியில் இயேசு பிறப்பதற்கு முன் வானில் அதுவரை தோன்றியிராத நட்சத்திரத்தைக் கண்ட வானசாஸ்திரிகள் கிழக்கிலிருந்து ஜெருசலேமுக்கு வந்தனர். யோசோப்பு என்னும் தச்சனுக்கு மனைவியாக நிச்சயம் செய்யப்பட்ட மரியாளிடம், கபிரியேல் என்னும் தூதன் கடவுளின் அருளால் ஒரு குமாரனைப் பெறுவாய் என்றும், யோசேப்பிடம் அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும் என்றும் முன்னறிவிப்பு செய்தார். இதன்படியே இயேசு கிறிஸ்து பிறந்தார்.
நாற்பதாவது தலைமுறை: ஆதாம் முதல் ஆபிரகாம் 20 தலைமுறை, பின்பு ஆப்ரகாமிலிருந்து ஈசாக்கு, யாக்கோபு, யூதா, பாரேஸ், எஸ்ரோம், ஆராம், அம்மினதாப், நகசோன், சல்மோன், போவாஸ், ஓபேத், ஈசாய், தாவீது, சாலமோன், ரெகோபெயாம், அபியா, ஆசா, யோசபாத், யோராம், உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா, மனோசே, ஆமோன், யோசியா, எகோனியோ, சலோத்தியேல், சொரபாபேல், அபியூத், எலியாக்கீம், ஆசோர், சாதோக், ஆகீம், எலியூத், எலெயாசார், மாத்தான், யாக்கோபு, மரியாள்( கன்னிப்பெண்) வரை 40ம் தலைமுறையில் இயேசு பிறந்தார்.
இயேசுவை தெய்வமாக ஏற்றது எப்போது?
இயேசு கிறிஸ்து, 33 வருடங்கள் வாழ்ந்து அற்புதங்கள் செய்தார். பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். உலக மக்களின் பாவப்பலியாக சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து 40 நாட்கள் வரை சீடர்கள் மற்றும் விசுவாசித்த மக்களுக்கு தரிசனம் காட்சிகள் தந்தார். இயேசுவின் மறைவுக்குப் பின் சுமார் 300 ஆண்டுகள் கழித்து ரோம அரசு, அவரைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலக வரலாறு கி.மு., என்றும், கி.பி., என்றும் எழுதுவதற்கு தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.