வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி
பதிவு செய்த நாள்
15
ஜூலை 2025 12:07
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி குண்டம் விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு, 32ம் ஆண்டு ஆடி குண்டம் விழா வருகிற, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 25ம் தேதி லட்சார்ச்சனையும், 26ல் கிராம சாந்தியும், 27ல் கொடியேற்றமும், 28ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நடைபெற உள்ளது. 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதைத்தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 30ம் தேதி மாவிளக்கும், பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி பரிவேட்டை வானவேடிக்கையும், ஆகஸ்ட் 1ம் தேதி மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் சிறப்பு பூஜை இன்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டத்தை சுற்றி, பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்தனர். அதன் பின்பு கோவில் பூசாரி, சிறப்பு பூஜை செய்து, குண்டம் கண் திறந்தார். இவ்விழாவில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
|