பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாள் காலை 5.25 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். பின், கோயிலில் உள்ள சயன மண்டபத்தில் மாலை வரை எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், இணை கமிஷனர் ஜெயராமன், கண்காணிப்பாளர்கள் கனகரத்தினம், முருகேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன்: சக்கரத்தாழ்வார் கோயில் சொர்க்கவாசல் திறப்பில், தக்கார் அங்கயற்கண்ணி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
சோழவந்தான்: ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி அருள்செல்வன், ஆலய ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு, நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், ஆலய ஊழியர்
வெங்கடேஷன் ஏற்பாடு செய்திருந்தனர். தென்கரை சத்யபாமா, ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில், மேலக்கால் வெங்கடேஷ பெருமாள் கோயிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: இக்கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். மூலவர்கள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளி இருப்பதால், ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்றும் நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில், இந்தாண்டு முதன்முறையாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரை கூடழலகர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.