பதிவு செய்த நாள்
27
டிச
2012
11:12
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் குருசாமி மோகன் தலைமையில் நடந்த மண்டல பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கோயிலில் டிச.,17ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று மண்டல பூஜையையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் முத்து நாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று, அங்கிருந்து வண்ணக்கலவை பூசி "ஐயப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் துவங்கியது. வல்லபை பஸ்மகுளத்தில் உற்சவருக்கு, 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. இதை தொடர்ந்து மூலவருக்கு, 33 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடந்தது. ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
பரமக்குடி: பரமக்குடி ஐந்துமுனை ரோடு அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில், வைகை ஆற்றில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு, 10 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் வீதியுலா நடந்தது. தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஆலயத்தில், 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் சர்வஅலங்காரத்துடன் ஐயப்பன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.
கடலாடி: கடலாடியில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, கருப்பையா தலைமையில் நடந்தது. திருவிளக்கு பூஜை, ஐயப்பன் வரலாறு சொற்பொழிவு நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.