பதிவு செய்த நாள்
28
டிச
2012
10:12
கீழக்கரை: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, மரகத நடராஜர் சந்தனகாப்பு களைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொட்டும் மழையில் நனைந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மங்களநாதசுவாமி கோயிலில், ஆடும் திருக்கோலத்தில் நடராஜரின், ஆறு அடி உயர பச்சை மரகத சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில், ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். நேற்று அதிகாலை 4 மணிக்கு, நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது. புஷ்பாஞ்சலியோடு, மரகத நடராஜருக்கு, தீபாராதனை நடந்தது. காலை 10.10 மணிக்கு நடராஜரின், திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டது. நடராஜர் சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு, 32 வகையான மூலிகைகளால், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பச்சை மரகத மேனியாய் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். இரவு 10 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்கியது. இரவு 10.30 மணிக்கு கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
சிவகங்கை காமாட்சி அம்மாள் கூறியதாவது: பத்து ரூபாய் கொடுத்து சுவாமி படத்துடன், சந்தன பாக்கெட், பல ஆண்டுகளாக தேவஸ்தான அலுவலகத்தில் வாங்கி வந்தேன். இந்த ஆண்டு, 100 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்களுக்கு மட்டும் சந்தனம் வழங்கப்பட்டது. இந்து அறநிலைய துறை இணை ஆணையர் ஆதரவுடன், தேவஸ்தானத்திற்கு சந்தனம் விற்பனையில் நல்ல வசூல். எவ்வளவு தான் வசூல் வந்தாலும், ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகளை வெட்டுவதற்கும், மரகத நடராஜர் சன்னதில் கோபுரத்தில் உள்ள புறாக்கழிவுகளை அகற்றுவதற்கும் தேவஸ்தானத்திற்கு மனதில்லை, என்றார்.
போட்டோவுக்கு தடா: ஆருத்ரா தரிசன விழாவில், மரகத நடராஜர் சந்தனம் களைப்பு, அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க அனுமதிப்பது வழக்கம்.நேற்று சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவையொட்டி, போட்டோ எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
ஏமாற்றத்தில் ஏழைகள்.. வி.ஐ.பி.,க்களுக்கு கரிசனம் : நேற்று ரூ.100 டிக்கெட் எடுத்து தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும் சந்தனம் வழங்கப்பட்டதால், ஏழை, எளிய பக்தர்கள், சந்தனம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வெளியான சந்தனத்தை, முண்டியடித்து பாட்டில்களில் பிடித்துச் சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு, டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பவர்களுக்கு, பந்தல் வசதி செய்யப்படவில்லை. நேற்று மழை தொடர்ந்து பெய்ததால், கைக்குழந்தைகளோடு வந்தவர்கள் மழையில் நீண்டநேரம் நனைந்தபடி நின்றிருந்தனர். இலவச தரிசனம், மற்றும் ரூ.10 தரிசனத்திற்கு நின்ற கூட்டத்தை விட, ரூ.100 கட்டணத்திற்கான பிரிவில், பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். நடராஜர் சன்னதியில் பக்தர்கள் வெளிவரும் வாசல் வழியாக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால், சாதாரண பக்தர்கள் காக்க வைக்கப்பட்டனர்.