Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஆலயங்களும் அவற்றின் வித்தியாசமான விசேஷ அபிஷேகங்களும்!
ஜனவரி 29,2013
அ-
+
Temple images

கோயில்களில் பொதுவாக இறைவனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், திருமஞ்சனம் முதலிய அபிஷேகங்கள் நடக்கும். ஆனால் சில கோயில்களில் வித்தியாசமான விசேஷ அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. கேரளாவிலுள்ள கொடுங்கலூர் பகவதி அம்மனுக்கு பால், தயிர் போன்ற அபிஷேகங்களுடன் தவிடும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

வேதாரண்யத்தில் சிவனும் பார்வதியும் மணக்கோலத்தில் காட்சி தரும் வடிவிற்கு வருடத்திற்கு ஒருமுறையே அபிஷேகமும் சந்தனக்காப்பும் நடைபெறும். சிதம்பரத்தில் தில்லைக்காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டும்தான் செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் திரும்புறம்பியம் தலத்திலுள்ள பிரளயம் காத்த வினாயகருக்கு, வினாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது.

திருவலஞ்சுழியிலுள்ள வினாயகர் கடல்நுரையால் செய்யப்பட்டவராதலால் அவருக்கு பச்சைக்கற்பூரம் தூவுவதைத் தவிர வேறு அபிஷேகம் கிடையாது. திருநாகேஸ்வரம் கோயிலில் சுயம்பு வடிவிலுள்ள பார்வதி, சரஸ்வதி, லட்சுமி மூவருக்கும் தைலக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.

தஞ்சாவூரில் மேலவீதியிலுள்ள ஸ்ரீபங்காரு காமாட்சி கோயிலில் உள்ள காமாட்சிக்கு வருடத்திற்குப் பதினொரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். அதையும் மாலை வேளைகளில்தான் செய்கிறார்கள். கேரளாவில் திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினமும் நெய் மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற எந்த அபிஷேகமும் கிடையாது. இக் கோயிலுள்ள பார்வதிக்கு மஞ்சள் பொடியால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூருக்கும், திருவையாறுக்கும் இடையிலுள்ள கல்யாணபுரத்திலிருக்கும் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு வருடத்திற்கொருமுறை திருக்காப்பு சாத்தப்பட்டு கவசம் அணிவிக்கப்படுகிறது. இந்தக் கவசம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அகற்றப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமிக்கும், திருநீர்மலை ரங்கநாதருக்கும் தைலக்காப்பு மட்டும்தான் சாத்தப்படுகிறது. இவர்கள் மூவரும் சுயம்பு மூர்த்தி என்பதால் அபிஷேகம் கிடையாது. திருக்குற்றாலம் குற்றாலநாதருக்கு மூலிகை வேர்கள், மருந்துச் சரக்குகள் ஆகியவற்றை அரைத்துக் காய்ச்சப்படும் தைலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு இந்தத் தைலம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் பொன்னிறை எனுமூரில் உள்ள அகஸ்தீஸ்வரருக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடி அபிஷேகம் செய்யப்படுகிறது. சென்னை-குரோம்பேட்டை கணபதிபுரத்தில் உள்ள செங்கச்சேரி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமியன்று மருதாணி இலை அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அந்த இலை கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.