பதிவு செய்த நாள்
08
பிப்
2013
12:02
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 16ம் தேதியன்று மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு இம்மாதம் 16ம் தேதி அதிகாலை 1மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 ம ணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. 22ம் தேதி 7ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த ர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 23ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும், காலை 10.30 மணிக்கு 11.30 மணிக்குள் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சைசாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் வந்து சேர்கிறார்.
தேரோட்டம் - தெப்பத்திருவிழா : 24ம் தேதியன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. வரும் 26ம் தேதி 11ம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா உட்பட கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு, திருக்கோயில் 1ம் திருவிழா மற்றும் 7ம் திருவிழா ஆகிய நாட்களில் அதிகாலை 1 மணிக்கும், 2ம் திருவிழா, 9ம் திருவிழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கும், மற்ற நாட்களில் கோயில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது.