பதிவு செய்த நாள்
16
மார்
2013
11:03
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 17ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 25ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அறுபடை முருகத்தலங்களுக்கு அடுத்தாற் போல் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் முருகபக்தர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கழுகுமலை மலைக்குன்றை விமானமாக கொண்ட இக்கோயிலில் கழுகாசலமூர்த்தி ராஜகோலத்தில் மேற்கு முகமாக அருள்பாலிக்கிறார். மேலும் சுவாமியை சுற்றிவந்து தரிசனம் செய்ய வேண்டுமெனில் மலைக்குன்றையே சுற்றி வர வேண்டும் என்பதால் இங்கு நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் பெரும் பெயர் பெற்றது. இக்கோயிலில் முருகனுக்கு தினந்தோறும் பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், மாதாந்திர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும் முருகனுக்கென்று சிறப்பாக கொண்டாடும் திருவிழாக்கள் பக்தர்களிடம் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்விழாக்களில் கழுகுமலை நகரமே விழாக்கோலம் பூண்டு கொண்டாடும் விழாவாக பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா உள்ளது. இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா வரும் 17ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 13 நாட்கள் நடக்கிறது. இதில் இன்று ராஜஅநுக்கை, நாளை தேவஅநுக்கை ஆகியன நடக்கிறது.
தொடர்ந்து 17ந்தேதியன்று முதல் நாள் திருவிழாவாக கோலாகல கொடியேற்றம் நடக்கிறது. மேலும் கொடியேற்ற சிறப்பு பூஜைகளும், பூச்சப்பரத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இதையடுத்து 2ம்நாளன்று பூதவாகனத்திலும், 3ம் நாளன்று அன்னவாகனத்திலும், 4ம் நாளன்று வெள்ளி யானை வாகனத்திலும், 5ம் நாளன்று வெள்ளி மயில் வாகனத்திலும், 6ம் நாளன்று ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தருடன் அகிலாண்டேஸ்வரி அம்பிகையும், மேஷ வாகனத்தில் முருகனுடன் வள்ளி தெய்வானை திருவீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து 7ம் திருநாளன்று மாலை சுமார் 4 மணிக்கு சண்முகருக்கு அர்ச்சனையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவப்புமலர் சூடி சிவன் அம்சத்திலும், இரவு 12 மணிக்கு வெள்ளைமலர் சூடி அலங்காரம் செய்யப்பட்டு பிரம்மன் அம்சமாகவும், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பச்சைமலர் சூடி அலங்காரம் செய்து திருமால் அம்சத்தில் கழுகுமலை மலைக்குன்றை சுற்றி கிரிவலமாக திருவீதி உலாவும், 8ம் திருநாளன்று கயிலாய பர்வத வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது.தொடர்ந்து வரும் 25ந்தேதி 9ம் திருநாளாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைரத்தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. இதில் காலை சுமார் 7 மணியளவில் சுவாமி திருதேரில் எழுந்தருளல் சிறப்பு பூஜைகளும், கோரதத்தில் சண்டிகேஸ்வரரும், சட்ட ரதத்தில் விநாயகரும் முன்செல்ல, 10.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் வைர தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் (மார்ச்.26) தீர்த்தவாரியும், இரவில் தபசுக்காட்சியும், அதற்கடுத்த நாள் (மார்ச்.27) திருக்கல்யாணமும், அடுத்தநாள் (மார்ச்.28) தந்த பல்லக்கில் பட்டின பிரவேசமும், இறுதிநாளில் (மார்ச்29) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கழுகாசலமூர்த்தி கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் தலைமையில் செய்து வருகின்றனர்.