Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லவகுசா பகுதி-14 லவகுசா பகுதி-16 லவகுசா பகுதி-16
முதல் பக்கம் » லவகுசா
லவகுசா பகுதி-15
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மார்
2011
05:03

ஏவலர்கள் சொன்னதைக் கேட்ட சத்ருக்கனன் ஆச்சரியமடைந்தவனாய், குதிரை நின்ற இடத்திற்கு வந்தான். அங்கு நின்ற குழந்தைகளைப் பார்த்தவுடனேயே மனதில் மரியாதை ஏற்பட்டது. ஓ இவர்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வடிவத்தை ஒத்திருக்கிறார்களே! என்ன தேஜஸ் இவர்களது முகத்தில்! அவன் ஓடோடிச் சென்று அந்தக் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். அன்புச்செல்வங்களே! என்ன இது விளையாட்டு! அஸ்வமேத யாகக்குதிரையை பிடிக்கலாமா? பாவம்..அறியாப்பிள்ளைகள் நீங்கள்...உங்களிடமா இந்த ஏவலர்கள் சண்டைக்கு வந்தார்கள்? அவர்கள் உங்களுடன் சண்டை போட்டதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு குதிரைகள் என்றால் இஷ்டமா? இதோ! என் படையில் பல ஜாதி குதிரைகள் உள்ளன. எல்லாமே உயர்வகை தான். அவற்றில் எத்தனை குதிரைகளை வேணடுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் குதிரை தன் பவனியைத் தொடரட்டும்! ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை அறியாதவர்கள் யார்? அவரது ஆட்சி இந்த பூமியெங்கும் வியாபிப்பதில் உங்களுக்கும் எந்த மாறுபாட்ட கருத்து இருக்காது இல்லையா? பிறகு ஏன் இந்தக் குதிரையைப் பிடிக்க வேண்டும்? என கனிவுடன் பேசினான். லவகுசர் சிரித்தனர். நீர் யார்? என்றதும், நான் ராமச்சந்திர மூர்த்தியின் கடைசி சகோதரன் சத்ருக்கனன், என்றதும், அவர்களது நகைப்பு இன்னும் அதிகமாயிற்று.

சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர். குழந்தைகளே! நான் முதலில் உங்களை அறியாப்பிள்ளைகள் என்று தான் நினைத்தேன். நீங்களோ, அதிகமாகப் பேசுகிறீர்கள். ராமபிரான் எதைச் செய்தாலும் அதில் காரணமிருக்கும். குதிரையை விடுகிறீர்களா? இல்லையா? என மிரட்டிப் பார்த்தான். குழந்தைகள் ஒரேயடியாக மறுத்து விட்டனர். ஐயோ! சின்னஞ்சிறு பாலகர்களான உங்களுடன் சண்டை போட வேண்டியதாகி விட்டதே! என்ற சத்ருக்கனன், சில அம்புகளை வானில் எய்து அவர்களைப் பயமுறுத்திப் பார்த்தான். அவர்களோ, அவற்றுக்கு பதிலடி கொடுத்து நொறுக்கித் தள்ளவே, கோபமடைந்த சத்ருக்கனன், அவர்களுடன் கடும் போர் செய்தான். ஆனால், லவகுசர்களின் அம்புகளுக்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை. அவன் கைசோர்ந்தான். இறுதியில் லவகுசர் விட்ட அம்பிற்கு மயங்கி களத்திலேயே சாய்ந்து விட்டான். இந்தத் தகவல் ராமபிரானுக்குச் சென்றது.என்ன, யாகக் குதிரையை கட்டி வைத்தார்களா? அதிலும் சின்னஞ்சிறுவர்களா? லட்சுமணா! உடனே புறப்படு! குதிரையை மீட்டு தொடர்ந்து உலகெங்கும் அழைத்துச் செல், என உத்தரவிட்டார் ராமபிரான்.

இலங்கை போர்க்களத்திலே, மாவீரன் இந்திரஜித்தையே வென்ற அந்த வெற்றித்திருமகன், பெரும் படையுடன் குதிரை நிற்கும் கானகத்திற்கு, தானும் தோற்கப்போகிறோம் என்பது தெரியாமலேயே புறப்பட்டான். இதனிடையே சத்ருக்கனனை வென்ற லவகுசர், தாய் சீதாவுக்கு அதை அறிவிக்காமலேயே அமைதியாக இருந்து விட்டனர். அவள் கவலையுடன் இருப்பதைக் கவனித்தனர். இந்நேரத்தில் வால்மீகி முனிவர் அங்கு வந்தார். ஜனகனின் திருமகளே! ஏனிந்த முக வாட்டம்? நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் தானே குழந்தைகளும் மகிழ்ந்து விளையாவார்கள்? வாட்டம் கொள்ளாதே. எல்லாம் வல்ல லலிதாம்பிகை உனக்கு நல்லருள் தருவாள், என ஆறுதலாய் வாழ்த்துச் சொன்னார். கண்களில் நீர் வழிய நின்ற சீதாதேவி, சுவாமி! என் கவலையெல்லாம் என் பர்த்தாவைப் பற்றியது தான். அவரை மீண்டும் அடைவேன் என்ற நம்பிக்கையே உள்ளத்தில் இருந்து நீங்கி விட்டது போல் இருக்கிறது. அவரை மீண்டும் அடையாவிட்டாலும், அவர் திருமுகம் காணவாவது தங்கள் ஆலோசனை வேண்டும் ஐயனே! என்று உருக்கமாகக் கேட்டாள். அம்மா! நீ பூமிதேவியின் புத்திரி, பொறுமையின் அணிகலன். அவசரப்படாதே. கணவனைப் பிரிந்த பெண்கள் அவனை மீண்டும் அடைய, இந்த மண்ணின் பெண்மணிகள் லலிதா நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். ஒன்பது இரவுகள் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு, அந்த தேவியின் சகஸ்ர (ஆயிரம்) நாமங்களைச் சொல்லி வழிபட்டால், அவள் உன்னை உன் கணவனிடம் சேர்க்க வரமருள்வாள். ஆனால்...ஒன்று... என்று இழுத்து நிறுத்தியவரின் முகத்தை ஆவலுடன் நோக்கிய சீதா, என்ன சுவாமி? விரத முறை கடுமையானதாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? எவ்வளவு கடுமையான விரதமாயினும், என் பர்த்தாவை அடைவதற்காக அனுஷ்டிக்க காத்திருக்கிறேன், என்றாள். தாயே! அப்படி ஒன்றும் கடுமையான நிபந்தனை ஏதுமில்லை. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், எப்படிப்பட்ட துன்பமான வேளையிலும், விரதத்தை கைவிட்டு விடக்கூடாது. எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும், அவற்றைத் தகர்த்து, நிறைவேற்றியாக வேண்டும். விரதமிருப்பவரின் மனநிலையை உறுதிசெய்து பார்ப்பதே விரதத்தின் நோக்கம். ஒருவேளை, இடையிலேயே விரதத்தைக் கைவிட நேர்ந்தால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். நீ ஆஸ்ரமவாசியாக இருப்பதால், அத்தகைய இடைஞ்சல்கள் ஏதும் வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்போது சொல்...லலிதா நோன்பைத் துவங்குகிறாயா? என்றார் வால்மீகி. சுவாமி! என் கணவரை மீண்டும் சந்திப்பதற்காக எவ்வளவு கடுமையான விரதத்தையும் ஏற்கத்தயார், என்ற  சீதா, தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களை இந்தக் காட்டில் போய் எங்கே தேடுவது என யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அப்போது லவகுசர் அங்கே வந்தனர்.

 
மேலும் லவகுசா »
temple news

லவகுசா பகுதி-1 பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-2 பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-3 பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-4 பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-5 பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar