விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, விருத்தாம்பிகை அம்மன் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கடந்த 21ம் தேதி துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு கிளி, பூத, நாக, யானை, கமலம், வெள்ளி அன்னம், குதிரை வாகனத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. இதையொட்டி, காலை 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சுவாமிகள் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.