பதிவு செய்த நாள்
12
செப்
2014
10:09
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. அதில், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்துடன் பங்கேற்று கந்தனை வழிபட்டனர். திருப்போரூரில் சுயம்பு மூர்த்தியாக கந்தசுவாமி எழுந்தருளி உள்ளார். இவ்வூரில் கந்த பெருமான் விண்ணிலிருந்து போர் புரிந்து, தாருகன் என்ற அசுரனின் ஆணவத்தை அழித்ததால், தாரகாபுரி எனவும் சமராபுரி எனவும் வழங்கப்படுகிறது. திருப்பணிகள் : இங்குள்ள கந்தபெருமானின் அருளைப் போற்றி, ”சகல போகமும் மாசறு சகல வேதமுமே தொழு சமரமாபுர மேவிய பெருமாளே!” என அருணகிரிநாதர் பாடியுள்ளார். கோவிலின் முதல் ஆதீனம் சிதம்பர சுவாமிகள், 726 பாடல்கள் பாடிஉள்ளார். பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்தசுவாமி கோவிலின் கும்பாபிஷேகம், 1999ம் ஆண்டு நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு, ஜூலை மாதம் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கி, நடந்து வந்தன. இப்பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.
’கந்தா, முருகா’ கோஷம் : இதையடுத்து, நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மூலவர், சக்கரஸ்தாபனம், உற்சவர், ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னிதிகளின் விமானங்களில் திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ’கந்தா, முருகா, சரவணா, வேலவா, சண்முகா, ஆறுமுகா’ என, பக்தி கோஷங்கள் எழுப்பினர். வாணவேடிக்கைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகாபிஷேகம், தீபதுாப ஆராதனை நடந்தன. கும்பாபிஷேகத்தின் போது, சிறிய ரக விமானம் மூலம், கும்பாபிஷேக விமான கலசங்கள் மீதும், பக்தர்கள் மீதும் மலர்கள் துாவப்பட்டன.
விழாவை ஒட்டி, சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமலிருக்க பேருந்துகளும், ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஒரு கி.மீ.,க்கு முன்னதாக நிறுத்தப்பட்டன. தீயணைப்பு வாகனங்களும் மருத்துவ உதவி வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.
சிறப்பு மலர் : மாடவீதி தெருக்களில் பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கந்தசஷ்டி புத்தகங்களும் வழங்கப்பட்டன. பக்தர்களை வரவேற்கும் விதமாக சுவாமி மலையிலிருந்து லட்சுமி பிரியா யானை வரவழைக்கப்பட்டிருந்தது. விழாவில் வேத பாராயண வைபவங்களுடன் திருப்போரூர் சன்னிதி முறை பாடல்கள், திருப்புகழ், கந்தபுராணம், திருவாசக, திருமுறை மற்றும் நாதஸ்வர கச்சேரியும் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, ’தினமலர்’ சார்பில், பக்தர்களுக்கு கும்பாபிஷேக சிறப்பு மலர் வினியோகிக்கப்பட்டது.விழாவில், சைவ மடாதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடைய கோயில்கள் :