பதிவு செய்த நாள்
26
பிப்
2015
11:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த மாசி மாத கிருத்திகை திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும், காலை, இரவு நேரங்களில் உற்சவ பெருமான் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நேற்று, மாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 7:00 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்திலும், இரவு 8:00 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், உற்சவ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.