பதிவு செய்த நாள்
25
மே
2015
10:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில், நேற்று நடந்த தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீமிதித்தனர். காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா, கடந்த, 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது. கடந்த, 18ம் தேதி, திரவுபதி கல்யாணம், 20ம் தேதி அர்ச்சுனன் தபசு நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான கிராம பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், கனகம்மாசத்திரம் அடுத்த, ராமஞ்சேரி பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலிலும் நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், காலை, 10:30 மணிக்கு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர்.