பதிவு செய்த நாள்
30
மே
2015
10:05
திருத்தணி: தினமலர் செய்தி எதிரொலியால், மலைக்கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட படிகள் நேற்று பக்தர்கள் வசதிக்காக திறக்கப்பட்டது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நடந்து செல்வதற்கு வசதியாக, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஆகிய இரு இடங்களில் கோவில் நிர்வாகம் படிகள் அமைத்தது. இந்த படிகள் வழியாக, பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டு வந்தனர். முக்கிய திருவிழாக்கள், ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிவதால், நெரிசல் ஏற்பட்டு மலைக்கோவிலில் நடப்பதற்கு கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்றாவது புதிய படிகள் அமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் புதிய படிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று புதிய படிகள் திறப்பு விழா கோவில் ஆணையர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் கோவில் தக்கார் ஜெய்சங்கர் கலந்து கொண்டு புதிய படிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவில் ஊழியர்கள்,பக்தர்கள் கலந்து கொண்டனர்.