பதிவு செய்த நாள்
04
ஆக
2015
11:08
நாகப்பட்டினம்: கடைமடை மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள், ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர். ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயி கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, மேட்டூர் அணையில், குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12ம் தேதி அணை திறப்பு இல்லாமல் போனது.தற்போது, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் உபரி நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணை நீ ர்மட்டம் உயர்ந்தது. இதனால், ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டது. அணை திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ள மதகுகள், துார்ந்து போய் கிடக்கும் கால்வாய்களால், கடைமடை பகுதிகளுக்கு நீர் வரவில்லை. இதன் காரணமாக, பொதுமக்களும், விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். தொன்று தொட்டு கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவை, கரை புரண்டோடும் நீர்நிலைகளில் கோலாகலமாகக் கொண்டாட முடியாவிட்டா லும், மனம் தளராத மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு மங்கலப் பொருட்களை வைத்து பூஜை செய்தனர். சிலர், நாகை கடல் பகுதிக்கு வந்து பூஜை செய்து, மஞ்சள், காதோலை, கருகுமணி, குங்குமம், பலவித பழங்கள் என்று மங்கலப் பொருட்களை கடல் நீரில் விட்டு, கடவுளை வழிபட்டு சென்றனர். ஆடிப்பெருக்கு பண்டிகை என்றால், மக்களிடம் வழக்கமாகக் காணப்படும் ஆரவாரம் காணப்படவில்லை.