பதிவு செய்த நாள்
10
அக்
2015
10:10
காஞ்சிபுரம்: சிவாலயங்களில் இந்தாண்டின் முதலும், கடைசியுமான சனி பிரதோஷம் இன்று நடைபெற உள்ளது. அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமான் லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தாண்டில் ஒரே முறைஆனால், ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான், உலகை காக்க வேண்டி, விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னையின் மடியில் படுத்து உறங்குவது போன்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில், அமாவாசை, பவுர்ணமிக்கு இரு நாட்களுக்கு முன், பிரதோஷ விழா நடைபெறும். இதில், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.
இது ஒரு ஆண்டில், இரண்டு அல்லது மூன்று முறை வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு முதலும் கடைசியுமாக, இன்று சனிபிரதோஷம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவிலில் உள்ள விநாயகர், முருகர், மரகதாம்பிகை, வால்மீகீஸ்வரர், தாம்பத்ய தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட, அனைத்து தெய்வங்களுக்கும் காலை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை, 4:30 மணிக்கு, சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை, 5:30 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. பின், உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும், சனி பிரதோஷ விழா நடைபெறுகிறது.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டியில் உள்ள, ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில், வரலாற்று சிறப்புமிக்க, அரியதுரை வரமூர்த்தீஸ்வரர் கோவில், புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலீஸ்வரர் கோவில்களிலும் இன்று சனி பிரதோஷ விழா நடைபெற உள்ளது.