பதிவு செய்த நாள்
09
பிப்
2016
11:02
உடுமலை : தை அமாவாசையை முன்னிட்டு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே, திருமூர்த்திமலையில் அமைந்துள்ளது அமணலிங்கேஸ்வரர் கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி, சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, தை அமாவாசை, மகா சிவராத்திரி போன்ற நாட்களில், விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், தை அமாவாசையான நேற்று, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று காலை, 5:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மும்மூர்த்திகளும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.