பதிவு செய்த நாள்
26
ஆக
2011
05:08
ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு தன்மை உடையது. இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் மும்மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்களை மேல்நோக்கு நாள் என்பார்கள். இந்நட்சத்திரங்களை ஊர்த்துவமுத நட்சத்திரம் என்பர். இந்த மேல்நோக்கு நாளில் மேலே எழும்பக்கூடிய வீடு கட்டுதல், செடி, கொடி, மரம், பயிர்கள், விருட்சங்கள் பயிரிடுதல், பந்தல், மதில் எழுப்புதல் போன்ற காரியங்களைச் செய்வார்கள். பட்டாபிஷேகம், உத்தியோகம், ராஜதரிசனம், வியாபாரம், கிரயம், விக்கிரயம், ஆபரணம், மெத்தை போன்றவற்றுக்கும் மேல்நோக்கு நாள் உகந்ததாகக் கருதப்படுகிறது.
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வரும் நாட்களை கீழ்நோக்கு நாள் என்பார்கள். இந்நாளில் கீழ்நோக்கி செல்லக்கூடிய குளம், கிணறு ஆகியவை உண்டாக்கலாம்; புதையல், களஞ்சியம் ஆகிய விஷயங்களில் இறங்கலாம்; கிழங்கு வகை பயிர்களை பயிரிடலாம். கணக்கு அப்யாசிக்கலாம். கீழ்நோக்கு நாளில் இடம்பெறும் நட்சத்திரங்களை அதோமுக நட்சத்திரம் என்பர். அசுவினி, மிருகசிரீடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களை சமநோக்கு நாள் என்பார்கள். இந்நாட்களில் யானை, குதிரை, மாடு போன்ற கால்நடைகள் வாங்குதல், மேய்த்தல், உழவு, வண்டி வாங்குதல், நிலம் வாங்கி பயிரிடுதல், யாத்திரை போன்றவற்றைச் செய்யலாம். இந்நாளில் இடம்பெறும் நட்சத்திரங்களை திரியக்முக் நட்சத்திரம் என்பர். ஆகவே, நாம் ஒரு காரியம் தொடங்கும் முன்னர் இவற்றை அறிந்து செயல்பட்டால், காலம் நமக்கு அனுகூலமாக இருக்கும் என்பது நமது முன்னோர்கள் கண்ட அனுபவ உண்மை.