சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திறந்தவெளியில் சிறிய புற்று ஒன்றை சென்னை பம்மல் கல்யாணிபுரம் பகுதியில் கண்ட மக்கள் அதை பராசக்தியின் வடிவமாக எண்ணி வழிபட ஆரம்பித்தார்கள். இந்தப் புற்றிலிருந்து ஒரு சர்ப்பம் சென்று வருவதைக் கண்ட மக்கள். அந்தப் புற்று மழைக்காலங்களில் கரைந்துவிடாதபடி பனை ஓலையில் கொட்டகை அமைத்தார்கள். பின்னர், புற்றுக்கு பால் சமர்ப்பித்து வழிபட ஆரம்பித்தார்கள். புற்று வடிவிலிருந்த அம்மனின் வளர்ச்சியும் அதிகரித்து பனை ஓலைக்கொட்டகையைத் தொடும் அளவுக்கு அமைந்தது. இதனால் ஓலைக்கொட்டகையை அகற்றிவிட்டு புற்றைச் சுற்றிலும் மண்சுவர் அமைத்து நாட்டு ஓடை மேல்கூரையாக அமைத்தார்கள். புற்றை அம்மனாக அமைக்க முற்பட்டபோது, பாளையத்தம்மன் முகமாக அமைந்தது. இந்த ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வாரத்தில் காப்பு கட்டி தீமிதி திருவிழா நடக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில், உஷ்ண நோய்கள் வராமலிருக்கவும், அம்மனைக் குளிர்விக்கவும் இளநீர் அபிஷேகம் செய்கிறார்கள்.