பதிவு செய்த நாள்
26
ஆக
2011
05:08
ராமாயணம் ஸ்ரீராமனின் வழி என்பது, நாம் தொன்றுதொட்டு நம்பி வருவது. நமது புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் என் முப்பாட்டனாரைப் பற்றி அறிந்திருக்காமல் இருக்கலாம். அதனால் அவர் இல்லை எனக் கூற முடியாது. அவர் இல்லையெனில், நான் எப்படிப் பிறந்திருக்க முடியும்? இதுபோன்று, கடவுள் இல்லையெனில் இந்த பிரபஞ்சமே இருக்க முடியாது. அவருடைய ஓர் ஆற்றலின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் ! நம் அனைவரையும் படைத்து, காத்துக்கொண்டிருப்பவரும் அவரே ! ஸ்ரீராமன், ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரம். அவதாரம் எனில், மேலேயிருந்து கீழே இறங்கி வருதல். எல்லாம்வல்ல பரம்பொருள். பரம கருணையால் ஜீவராசிகளுக்கு வழிகாட்டும் பொருட்டு உருவம் தாங்கிவந்த ஒரு ஒப்புயர்வற்ற உருவமே ஸ்ரீராமர். ஒரு மனிதன் துன்பம் வரும் காலத்திலும் நம்பிக்கையை இழக்காது உயர்ந்த குணங்களுடன் தர்மங்களைக் கடைப்பிடித்தால், அந்த தர்மமானது அவருக்கு வெற்றியையே கொடுக்கும் என நமக்கு வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ராமாயணத்தில் வரும் ஒவ்வொருவரும், வாழ்க்கையில் நாம் பார்க்கும், பார்க்கப்போகும் உறவுகளின் பிரதிநிதிகளே ! நாம் நமது பிரச்னைகளில் இருந்து வழிபட நல்லதொரு ஆலோசனை தேவையெனில், ராமாயணத்தைப் புரட்டினால் தெளிவு கிடைக்கும். காண்டம் எனில் பகுதி. சுந்தர காண்டம் என்பது ராமாயணத்தில் மிகவும் முக்கியமான பகுதி. சுந்தரம் எனில், தெளிவு. சீதாபிராட்டியைக் காண அனுப்பப்பட்ட அடக்கத்தின் உருவமான ஆஞ்சநேயர், சீதாபிராட்டியைக் கண்டு ஸ்ரீராமரின் எண்ணங்களை வெளிப்படுத்திய பகுதியைக் கொண்டது. அதாவது, தொலைத்த ஒரு பொருளைக் கண்டுபிடித்தல் எனக் கொள்ளலாம்.
இந்த சுந்தர காண்டத்தை, எவர் ஒருவர் பக்தியுடனும் பரிபூரண நம்பிக்கையுடனும் நித்தியம் பாராயணம் செய்கிறாரோ, அவர் தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை உணருவார் என்பதில் ஐயமில்லை. வாழ்க்கையில் உறவுகளினாலும், தொழில் மற்றும் பலவித ஊழ்வினை காரணங்களினால் நாம் தொலைத்த நிம்மதியை, சுந்தர காண்டம் பாராயணம் செய்வதினால் கண்டிப்பாக நாம் அடையலாம். பொழுது போகாத சிலபேர், இந்துமதத்தைப் பழிப்பதையே கடமையாகக் கொண்டவர்கள். இந்தப் பாராயணங்களைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாம். நாம், இவர்களின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கலாகாது. நமது முன்னோர்கள் இதுபோன்று பாராயணங்களைக் கடைப்பிடித்து இன்பம் அடைந்திருக்கிறார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்து துன்பங்களிலிருந்து விடுபடுவோம் என்ற உயர்ந்த சிந்தனையுடன் பாராயணத்தை ஆரம்பியுங்கள். துன்பம் விலகும். இன்பம் பிறக்கும்.