பதிவு செய்த நாள்
18
ஏப்
2016
10:04
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. நவரத்தின கீரிடம், நவரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட செங்கோலுடன் பட்டத்து ராணியாக வெள்ளி சிம்மாசனத்தில், மாசி வீதிகளில் அம்மன் வீதி உலா வந்தார்.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்.,10ல் துவங்கியது. அம்மன் பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 10.00 மணிக்கு கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் பரிவாரங்களுடன் அம்மன் புறப்பட்டார். கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, திண்டுக்கல் ரோடு, மேலமாசிவீதி வழியாக தங்கப்பல்லக்கில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி உலா வந்தனர். பின் மேலமாசி வீதி திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் எழுந்தருளினர். மதியம் 3.00 மணிக்கு புறப்பாடாகி கோயிலுக்கு சேர்த்தியானது.
மீனாட்சிக்கு வேப்பம்பூ மாலை: பட்டாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு 7.35 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேக யாக பூஜைகள் துவங்கின. கோயில் சார்பில் அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட தெய்வசிகாமணிக்கு மரியாதை செய்விக்கப்பட்டது. அம்மன் பிரதிநிதியான தக்கார் கருமுத்து கண்ணனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பச்சைப்பட்டு உடுத்தி மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். பாண்டிய மன்னர்களின் வெற்றியை குறிக்கும் வேப்பம்பூ மாலை, அம்மனுக்கு சூட்டப்பட்டது. பட்டாபிஷேகம்ஆறுகால் மண்டபம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் சார்பில் காப்பு கட்டிய சந்திரசேகரபட்டர், ஸ்தானிக பட்டர்கள், சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தினர். நவரத்தினக்கற்கள் பதித்த கீரிடத்திற்கு யாக தீர்த்தம் ஊற்றப்பட்டு அம்மனுக்கு சூட்டப்பட்டது. இரவு 7.40 மணிக்கு நவரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட செங்கோல், அம்மனுக்கு சாற்றப்பட்டது. தீபாராதனைகள் முடிந்து, அம்மன் பிரதிநிதி தக்கார் கருமுத்து கண்ணனிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அம்மனுக்கு பட்டாபிஷேகம் முடிந்ததை தெரிவிக்கும் வகையில் சகல விருதுகளுடன், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் செங்கோலுடன் தக்கார் வலம் வந்து மீண்டும் அம்மனிடம் ஒப்படைத்தார்.
துவங்கியது மீனாட்சி ஆட்சி: பட்டாபிஷேகம் முடிந்ததால் இன்று முதல் பட்டத்து மகா ராணியாக மீனாட்சி அம்மன் நான்கு மாதங்கள் ஆட்சி புரிவார். இதை மெய்ப்பிக்கும் வகையில் நவரத்தின கீரிடம், நவரத்தின செங்கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி இரவு 9.00 மணிக்கு மாசி வீதிகளில் எழுந்தருளினார். திருவீதி உலா முடிந்து நள்ளிரவு 12.30 மணிக்கு கோயிலுக்கு சேர்த்தியானது.ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் இன்று (ஏப்.,18) மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நா.நடராஜன் செய்து வருகின்றனர்.