பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
11:04
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. நாளை அழகர் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏப்.,22ல் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். ஏப்., 20ல் மாலை 5.00 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்படுகிறார். 18ம் படி கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7.00 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார்.
ஏப்., 21ல் காலை 6.00 மணிக்கு மூன்றுமாவடியிலும், மாலை அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. ஏப்.,22ல் அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார்.காலை 10.00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகர், ஏப்.,23ல் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு 8.00 மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தடைகிறார். அங்கு இரவு தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏப்.,24ல் காலை மோகனி அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையும், இரவு 2.00 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அப்பன்திருப்பதி வழியாக ஏப்.,26ல் அழகர் மலையை அடைகிறார். முன்னதாக மதுரையில் கள்ளழகர் எழுந்தருளும் தங்க குதிரை, கருடாழ்வார், சேஷ வாகனங்கள் அழகர்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மதுரைக்கு எடுத்து வரப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை செய்து வருகின்றனர்.