மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா : ஏழாம் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2016 11:04
சித்திரை திருவிழாவில் இன்று சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் பவனி வருகின்றனர். இந்த தரிசனத்தைக் காண்பவர்களின் செயல்கள் தடையின்றி நிறைவேறும். ஸ்ரீசைலத்தில் வாழ்ந்த சிலாத முனிவர் சிவனருளால் பெற்ற குழந்தைக்கு நந்தி என்று பெயரிட்டு வளர்த்தார். விதிப்படி நந்திக்கு அற்ப ஆயுளே இருந்தது. இதனால் முனிவர் வருந்தினார். நந்தி தந்தையின் வருத்தத்தைப் போக்க சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அதன் பயனாக அழியாத வரம் பெற்றார். சிவகணங்களின் தலைவராக நந்தீஸ்வரர் எனும் பெயர் பெற்றார். நெற்றிக்கண் உட்பட மூன்று கண்கள் பெற்றவர். மழுவும், மானும் ஏந்தியிருப்பார். அன்னை மீனாட்சி பவனிவரும் யாளி வாகனம் யானையும், சிங்கமும் கலந்த உருவமாகும். மதம் பிடித்து அடங்காமல் திரியும் யானையும், தற்பெருமை,கோபம் கொண்டு அலையும் சிங்கமும் அருள்சக்தியான அன்னையின் முன் அடங்கி ஒடுங்கி விடும். அதுபோல, ஆணவம் போன்ற கீழான குணங்கள் கொண்ட மனிதனும், அன்னையின் அருளால் அவை நீங்கி நற்கதி பெறுவான்.