Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒன்பதாம் திருமுறையில் பாடிய பாடல் | திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் பாடிய பாடல் | ...
முதல் பக்கம் » ஒன்பதாம் திருமறை
ஒன்பதாம் திருமுறை பாடியவர்கள் | திருவிசைப்பா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2011
12:09

பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறை

1. திருமாளிகைத் தேவர்
2. சேந்தனார்
3. கருவூர்த் தேவர்
4. பூந்துருத்திநம்பி காடநம்பி
5. கண்டராதித்தர்
6. வேணாட்டடிகள்
7. திருவாலியமுதர்
8. புருடோத்தமர்
9. சேதிராயர்

ஆகியோரால் பாடப்பட்டது. திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் வரை ஒன்பது பேரும் திருவாய் மலர்ந்தருளிய இருபத்தெட்டுத் திருப்பதிகங்களைத் திருவிசைப்பா என்றும், சேந்தனார் பாடிய பல்லாண்டிசையினைத் திருப்பல்லாண்டு என்றும் வழங்குதல் மரபு. இவற்றைத் திருவிசைப்பா மாலை என்று கூறுவர். திருவிசைப்பாவில் அமைந்த பண்கள் காந்தாரம், புறநீர்மை, சாளரபாணி, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் என்ற ஆறு பண்களே. இவற்றுள் சாளர பாணி யொழிந்த ஐந்தும் தேவாரத் திருப்பதிகங்களில் பயின்ற பண்களே. இந்நூலில் மழலைச் சிலம்பு, நீறணி பவளக் குன்றம், மொழுப்பு, பேழ்கணித்தல் முதலிய அருஞ் சொற்றொடர்களும் அருஞ்சொற்களும் பயின்று வந்துள்ளன. திருப்பல்லாண்டு கடல் கடந்த நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடுகளில் திருமணக் கோலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறது என்பர்.

ஒன்பதாம் திருமுறையில் இருபத்தொன்பது திருப்பதிகங்கள் உள்ளன. தேவாரத் திருப்பதிகங்களைப் போன்று இசை நலம் வாய்ந்தவை. இத்திருமுறையின் இறுதியிலுள்ள இருபத்தொன்பதாம் திருப்பதிகம், எங்கும் நீக்கமறக் கலந்து விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்குப் பல்லாண்டிசை கூறி வாழ்த்துவதாகலின் திருப்பல்லாண்டு என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவதாயிற்று. இவ் ஒன்பதாம் திருமுறை முன்னூற்றொரு பாடல்களை உடையதாய், அளவிற் சிறியதாயினும் திருக்கோயில் வழிபாட்டில் பஞ்ச புராணமென ஓதப் பெறும் திருமுறைப் பாடல்கள் ஐந்தனுள் திருவிசைப்பாவில் ஒன்றும் திருப்பல்லாண்டில் ஒன்றுமாக இரண்டு திருப்பாடல்களை இத் திருமுறையிலிருந்து ஓதி வருகின்றனர். இவ்வழக்கம் இத் திருமுறையில் மக்களுக்குள்ள ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்துவதாகும்.

திருவிசைப்பா  திருப்பல்லாண்டு என்னும் இத்திருப்பதிகங்களைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள் வாழ்ந்த காலம், முதல் ஆதித்த சோழன் முதல் கங்கை கொண்ட சோழன் இறுதியாகவுள்ள சோழ மன்னர்களின் ஆட்சிக் காலமாகும். அதாவது கி.பி. 9,10,11 ஆம் நூற்றாண்டுகளாகும். திருவிசைப்பா பெற்ற திருத்தலங்கள் தில்லைச் சிற்றம்பலம், திருவீழிமிழலை. திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை யாதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் எனப் பதினான்கு தலங்களாகும். இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. ஏனைய பதின்மூன்று திருத்தலங்களும் ஒவ்வொரு திருப்பதிகமே பெற்றுள்ளன.

1. திருமாளிகைத் தேவர்

இவர் சுத்த சைவ வேளாளர் மரபில் தோன்றியவர். இவர் ஆதிசைவ (சிவப்பிராமண) குலத்தில் தோன்றியவர் என்றும் கூறுவர். இவர்தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகை மடம் (பெரிய மடம்) எனப் பெயர் பெறும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத்தேவர் என்ற பெயரைப் பெற்றார் என்பர். திரு  அடைமொழி. இவர் துறவு பூண்டு திருவாவடுதுறையை அடைந்து சிலகாலம் தவம் புரிந்தார். பின்பு இவர் திருவாவடுதுறையில் சிவாலயத்திற்கு அருகே தென்திசையில் தமக்கென ஒரு மடாலயம் அமைத்துக் கொண்டு இறை வழிபாட்டில் நின்றார். அப்போது அங்குச் சிவயோகத்தில் அமர்ந்திருந்த சித்தரான போகநாதரிடம் ஞானோபதேசம் பெற்றார். தம் தவத்தின் பயனாக அழகிய ஒளிவீசும் உடலைப் பெற்றுத் திகழ்ந்தார். அப்போது இவர் பல சித்திகளைச் செய்தார் என்பர். சைவ சமயத்தை நன்கு வளர்த்துப் போற்றினார். இவர் தில்லைக் கூத்தப் பெருமானை வழிபட்டு, திருவிசைப்பா திருப்பதிகங்கள் நான்கைப் பாடியுள்ளார். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம்.

2. சேந்தனார்

திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். சேந்தனார் செப்புறை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், திருவீழிமிழலை என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பா பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக்கிழார் கூறுவர். இச் சேந்தனாரேயன்றித் திவாகரம் செய்வித்த சேந்தனார் என்ற பெயரினர் ஒருவர் உண்டு. இதனால் சேந்தன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்தத் திருவிசைப்பா ஆசிரியர் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியவர். ஒரு சமயம் சேந்தனார் தில்லைப்பதியில் இருக்கும் பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில், ஓடாது தடைப்பட்டு நின்ற திருத்தேரைத் திருப்பல்லாண்டு பாடித் தானே ஓடி நிலையினை அடையுமாறு செய்தார். சேந்தனார் இறுதியில் திருவிடைக்கழி என்ற தலத்தை அடைந்து, முருகக் கடவுளை வழிபட்டுக் கொண்டு அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வசிக்கலானார் என்றும், தைப்பூச நன்னாளில் சேந்தனார் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார் என்றும் திருவிடைக்கழிப் புராணம் கூறுகிறது. இவருடைய காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சேந்தனார் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய முத்தலங்களுக்கும் மூன்று திருவிசைப்பாப் பதிகங்களையும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.

3. கருவூர்த் தேவர்

கருவூர்த் தேவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமங்கள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப் பெரிய யோக சித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று, ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப் பெற்றவர். உலக வாழ்வில் பற்றற்று வாழ்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று கருதும்படி செய்தன. இவர் தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களைத் தரிசித்தவர். தென்பாண்டி நாட்டுத் திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது. இந்நூலில் இவர் பாடிய திருப்பதிகங்கள் பத்து உள்ளன. இவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலும் 11ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம்.

4. பூந்துருத்திநம்பி காடநம்பி

பூந்துருத்தி என்பது சோழநாட்டுக் காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவத்தலம். நம்பி காட நம்பி இத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றினார். இவர் முதிர்ந்த சிவ பக்தர். இறைவனிடம் இடையறாத அன்பு கொண்டவர். சிவத்தலங்கள் தோறும் சென்று, சிவபெருமானை வழிபடுவதிலும், மூவர் பாடலாகிய தேவாரங்களை இடைவிடாது ஓதுவதிலும் காலங் கழித்தார். இவர் சாளரபாணி என்ற புதிய பண்ணில் கோயிற் பதிகம் பாடியுள்ளார். இவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் காடன் என்பது. ஆடவரில் சிறந்தோன் என்னும் பொருளைத் தரும் நம்பி என்ற சொல் இவரது இயற்பெயரின் முன்னும் பின்னும் இணைத்து வழங்கப் பெறுதலால் இவர்பால் அமைத்த பெருஞ்சிறப்பு இனிது புலனாகும்.

5. கண்டராதித்தர்

இவர் சோழர் குடியிற் பிறந்து முடி வேந்தராய் ஆட்சி புரிந்தவர். கண்டர் என்பது சோழ மன்னர்களுக்குரிய பொதுப்பெயர். ஆதித்தன் என்பது இவரது இயற்பெயராகும். இவர் இராசகேசரி என்ற பட்டத்துடன் கி.பி. 950 முதல் 957 வரை சோழ நாட்டை ஆட்சி புரிந்துள்ளார். கண்டராதித்தர் தில்லைக் கூத்தப் பிரானிடத்து நிறைந்த பேரன்புடையவர்.  செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். இவர் கி.பி. 957இல் இறைவன் திருவடி நீழல் எய்தினார். இவர் செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்தவர். புறச் சமயத்தினரையும் நன்கு மதித்து அவர்கள்பால் அன்புடன் ஒழுகியவர். இவரைச் சிவஞான கண்டராதித்தர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. இவர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்து புதுப்பித்த முதற் பராந்தக சோழன் (கி.பி 907  953) என்பவனின் இரண்டாவது திருமகனாவார்.

6. வேணாட்டடிகள்

வேணாடு என்பது சேர நாட்டிற்கும் தென் பாண்டி நாட்டிற்கும் நடுவே உள்ளது. வேணாட்டில் தோன்றிய இவரை வேணாட்டடிகள் என்றே எல்லாரும் வழங்கினர். அதனால் இவரது இயற் பெயர் தெரிந்திலது. இவர் அந்நாட்டு அரசர் குலத்தில் தோன்றி துறவு மேற்கொண்டவர். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பாடி வழிபட்டார். வேணாட்டடிகள் பாடிய திருவிசைப்பா பதிகம் ஒன்றே உள்ளது. அது கோயில் என்னும் சிதம் பரத்தைப் பற்றியது. இவர் உலக அனுபவம் மிகுதியும் உடையவர் என்பது இவரது பாடல்களால் அறியக்கிடக்கின்றது. இவரைப் பற்றிய பிற செய்தி, காலம் முதலியன அறிதற்கில்லை. வேணாடு என்பது தென்திருவிதாங்கூர்ப் பகுதிக்குரிய பழம் பெயராகும்.

7. திருவாலியமுதனார்

இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகில் உள்ளது திருவாலிநாடு. அதன் தலைநகர் திருவாலி. இந்நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குரிய பெயர் அமுதன் என்பது. இவர்தம் பெற்றோர்கள் திருவாலி அமுதனாரிடத்து அளவிறந்த பக்தி பூண்டிருந்த காரணத்தால் தம் திருமகனார்க்குத் திருவாலி அமுதன் என்று பெயரிட்டு அழைத்தனர். வைணவர் குடியில் தோன்றிய திருவாலி அமுதனார், சிவபிரானிடத்துப் பேரன்பு செலுத்தி அருள் நலம் பெற்றுச் சிவனடியாராகத் திகழ்ந்தார். தில்லை நடராசப் பெருமானையே தம் குல தெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார். பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் தோறும் திருப்பதிகம் பாடிப் பரவி வந்தார். பெரும்பாலும் இவர் சிதம்பரத்திலேயே வசித்து வந்தார். இங்கு மயிலை என்பது மயிலாடுதுறையேயாதல் வேண்டும் என்பர். திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு ஆகும். அவை அனைத்தும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியனவேயாகும். இவரது காலம், முதல் இராசராச சோழனுடைய கி.பி. 935  1014ஆம் காலத்திற்கு முற்பட்டது எனலாம்.

8. புருடோத்தம நம்பி

புருடோத்தமன் என்ற பெயர் திருமால் பெயர்களுள் ஒன்று. இவர் தம்மை மாசிலா மறைபல ஓது நாவன் வண்புருடோத்தவன் என்று கூறிக் கொள்வதால், இவர் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர் என அறியலாம். வைணவ குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்திபூண்டு சிவனடியாராக விளங்கியவர் இவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயர். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். தில்லையில் எழுந்தருளியுள்ள நடராசப் பெருமானையே வழிபட்டுக் கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்து வந்தவர். இவரது காலம் முதலிய பிற செய்தி அறிவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இவர் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

9. சேதிராயர்

திருவிசைப்பாவை அருளிச் செய்த ஆசிரியர்களில் ஒன்பதாமவராகத் திகழ்வர் சேதிராயர். இவர் சேதி நாட்டை ஆண்ட குறுநில மன்னர். சேதி நாடு, தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்கில் உள்ள நடுநாட்டில் ஒரு சிறு பகுதி. சேதிநாடு மலையமான் நாடு எனவும் வழங்கப் பெறும். சேதி நாட்டின் தலைநகரம் திருக்கோவலூர், கிளியூர் என்பன. கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவரே சேதிராயர் ஆவர். சேதிராயர் தம் முன்னோர்களைப் போலவே சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினார். பல சிவ தலங்களுக்கும் சென்று வழிபட்டார். இவர் பாடியருளிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே ஆகும். இப்பதிகம் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியது. இவர் முதற் குலோத்துங்கன் கி.பி. 1070  1120 காலத்தவராக அல்லது பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

 
மேலும் ஒன்பதாம் திருமறை »
temple news
9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar