பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
திருக்கோவிலுார்: பாரிக்கும் கபிலருக்கும் இடையிலான நட்பு, உலகமே வியக்கும் வகையில் அமைந்தது” என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம் சார்பில் 41ம் ஆண்டு கபிலர் விழா நேற்று முன்தினம் துவ ங்கியது. திருக்கோவிலுார் ஸ்ரீசுப்ரமண்ய மஹாலில், நேற்று மாலை 5:30 மணிக்கு, இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடந்தது. பண்பாட்டுக் கழக செயலாளர் தேவஆசைத்தம்பி வரவேற்றார். பேராசிரியர் அ.ச.ஞா., நுாற்றாண்டு நினைவலைகள் குறித்த சிறப்பு அரங்கம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொன்முடி தலைமை தாங்கினார். புகழுரையாற்றிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: கபிலர் குன்று, ஆற்றின் நடுவே இருக்கும் குன்று மட்டுமல்ல; அது, நட்பின் இமயம் என்பதுதான் உண்மை. கோப்பெரும்சோழன் பிசி ராந்தையாரும் சேர்ந்தே சாவோம் என்ற நட்புடன் இருந்தனர். அதேபோல், உலகமே வியக்கும் நட்பாக இருந்ததுதான் பாரிக்கும் கபிலருக்குமான நட்பு. அ.ச.ஞா.,வை, சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், தமிழ் வழிபாட்டுக்கான போராட்டத்தின்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் மிகுந்த புலமை கொண்டவர். அவருக்கு எல்லா புகழும் தானாக தேடிவந்தது. பல்கலைக்கழகங்கள் அவரை வரவேற்க காத்திருந்தன. வானொலி, அவர் நிகழ்ச்சிக்காக காத்திருந்தது. அவரது உரைக்காக, உலகெங்கிலும் இருந்த தமிழறிஞர்கள் காத்திருந்தனர். அ.ச.ஞா. தொடர்ந்து 10 நாட்கள் உணவு உறக்கம் இல்லாமல் எழுதும் ஆற்றல் பெற்றவர். இவ்வாறு, பொன்னம்பல அடிகளார் பேசினார். தொடர்ந்து, அரிமளம் சு.பத்மநாபன் குழுவினரின் சத்தியவான் சாவித்திரி நாடக இசை அரங்கம் நடந்தது.