பதிவு செய்த நாள்
29
செப்
2016
12:09
மானாமதுரை, மானாமதுரையில் மழை வேண்டி புரட்டாசியில் எல்லைப் பிடாரியம்மனுக்கு மட்டன், சிக்கன், முட்டை, மீன், தீப்பந்தங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்து விநோத திருவிழாவை கொண்டாடினர்.
புரட்டாசியில் தமிழகத்தில் பெரும்பாலும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது வழக்கம். ஆனால் மானாமதுரையில் புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து அசைவ உணவு வகைகளை அம்மனுக்கு படைத்து வழிபடுகின்றனர். மானாமதுரை நகரை காக்கும் தெய்வம் எல்லை பிடாரி அம்மன்.இக்கோயிலில் புரட்டாசி மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை காப்பு கட்டி விரதமிருக்கின்றனர்.
ஒரு வாரம் விரதமிருந்த பக்தர்கள் புத்தம் புதிய மண் பானைகளில் மட்டன், சிக்கன், மீன், முட்டை, கொழுக்கட்டை, பணியாரம் ஆகிய உணவு வகைகளை சமையல் செய்து வர்ணம் தீட்டிய மண்பானைகளில் சாதத்துடன் சேர்த்து தலையில் சுமந்து ஊர்வலமாக வருகின்றனர். சாதத்தின் நடுவே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்து நகரின் அனைத்து வீதிகளின் வழியே வலம் வருகின்றனர்.இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் விரதமிருந்த பக்தர்கள் அசைவ உணவு வகைகளுடன் ஊர்வலமாக அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அசைவ உணவு வகைகளை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். வழிபாடு குறித்து கணேசன் கூறுகையில்: செவ்வாய் சாட்டு என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவில் மட்டன்,சிக்கன் ஆகியவற்றை வீட்டிலேயே சமைத்து மண்பாத்திரங்களை இட்டு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படையல் செய்து வழிபடுகிறோம். பொதுவாக கோயில்களில் தான் கிடா வெட்டி வழிபடுவது வழக்கம்.ஆனால் நாங்கள் வீட்டில் சமையல் செய்து கோயிலில் வந்து வழிபடுகிறோம்.இவ்வாறு செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.