பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
சாயல்குடி: சாயல்குடி அருகே 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வில்வநாதர் கோயிலில் திருப்பணிகள் துவங்கி ஜரூராக நடக்கிறது.சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தில் ஐந்நுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் பக்தர்கள் முயற்சியுடன் கருங்கல்லால் ஆன மூலஸ்தான கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம் அமைக்கும் பணிகள் பாலாலயத்துடன் துவங்கி ஜரூராக நடக்கிறது. இதற்காக ஏற்கனவே இருந்த சிவன் கோயில் கருவறை அகற்றப்பட்டு, அதே இடத்தில் ஆகம விதிகள்படி கருங்கல்லால் ஆன கற்பகிரகம் அமைக்கப்படுகிறது. இதற்காக சிற்ப கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி ஸ்தபதி தலைமையில் 15 தொழிலாளர்கள் கலைநயத்துடன் கருங்கல்லில் சிற்பம் வடித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவாச்சாரியார் எம்.செந்துாரான் கூறியதாவது: பிரசித்தி பெற்ற வில்வநாதர் கோயிலில் பழமையான ஸ்தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. வயிற்று வலி, குழந்தை பேறு, மனக்குழப்பம் ஆகியவற்றிற்கு பிரசாதமாக விபூதியுடன் வில்வ இலை வழங்கப்படுகிறது. கோயில் குளம் 5 ஏக்கரில் உள்ளது. கரையோரங்களில் மரங்கள் நட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. அவற்றின் நடுவில் அமைக்கப்பட்ட கிணற்றில் சுவையான தண்ணீர் கிடைப்பதால், சுற்றுவட்டார கிராம மக்களின் தாகம் தீர்க்கப்படுகிறது. சிவபெருமான், தவசி தம்பிரான், தவமணி சுவாமி, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு, முந்தைய காலங்களில் செய்ததை போன்று கருங்கல்லால் கோயில் அமைக்கப்படுகிறது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 அடி உயரத்தில் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம் அமைக்கப்பட்டு, அதன் மீது ஐந்து நிலை கோபுரம் அமைய உள்ளது. சுற்றுவட்டார கிராமமக்கள், குலதெய்வ குடிமக்களின் பங்களிப்போடு திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர், என்றார்.