பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
மரக்காணம்: மரக்காணம் பூமீஸ்வரன் கோவில் குளத்தை சீரமைக்க அறநிலையத் துறையினர் முன்வராததால், கிராம இளைஞர்கள் துார்வாரும் பணி யிணை மேற்கொண்டனர். மரக்காணம் இ.சி.ஆர்., சாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் குளத்தின் தண்ணீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். ஆண்டுதோறும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாக விளங்கியது. நாளடைவில், இந்த கோவில், தேர், குளம் ஆகியவற்றை முறையாக பாராமரிப்பு செய்யதாததால் பழுதடைந்து போனது. இதனால் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. குளத்தை சுற்றிலும் முற்புதர்கள் மண்டி, தண்ணீரில் பாசை படிந்து பாழாகி போனது. கடந்த 20வது வருடங்களாக மரக்காணம் பகுதி மக்கள், கோவில் குளத்தை துார்வாரி படிகட்டுகளை சீரமைத்து, புதிய தேர் செய்து திருவிழா நடத்தவும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்களை கொடுத்துள்ளனர். மேலும் எம்.பி.,-எம்.எல்.ஏ., ஆகிய தேர்தலின் போதும், இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், பிரச்னை தீரவில்லை. இதனால் மரக்காணம், கரிப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து, கோவில் குளத்தை துார்வாரி, படிகட்டுகளை சீரமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.