செல்வம், ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை தரும் சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2016 04:11
சிவன் அபிஷேகப்பிரியர். அவர் தலையில் கங்கையை ஏற்றவர். கார்த்திகை மாதம் சிவனுக்குரிய கிழமையான திங்கட்கிழமையில் அனைத்து சிவன்கோயில்களிலும் சங்குகளில் நறுமண நீரை நிரப்பி இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதையே சங்காபிஷேகம் என்கிறோம். கார்த்திகை மாதம் முழுவதுமே சிவனுக்கும் அவர் குமரனுக்கும் பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் (கார்த்திகை சோமவாரத்தில்) ஈசனுக்கு நடைபெறும் சங்காபிஷேகம்.
கார்த்திகை மாதம் இறைவன் அக்னி ரூபமாக இருப்பார். சூர்யாக்கினி, அங்காரக அக்னி, கார்த்திகை அக்னி இம்மூன்றும் சேரும் நாளில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுக்க சிவனை தீப ஒளியில் நனைக்கவேண்டும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. அப்படிச் செய்வதால் ஏற்படும் சூட்டைத் தணிக்கவே சங்கால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல, கார்த்திகை மாதத்தில் சூரியன் அவரது பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீசம் அடைவார். அது தோஷம் எனப்படுகிறது. இந்த தோஷத்தைப் போக்கவுமே இறைவனுக்கு சந்திரனின் அம்சமான சங்கால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஏன் கடலில் விளைந்த சங்கைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்? காரணம் இருக்கிறது. சங்கு பஞ்சபூதங்களால் மாறாத தன்மை உடையது. நீரில் நெடுநாள் இருந்தாலும், நெருப்பில் எரித்தாலும் அதன் வெண்மை நிறம் மாறாது. எத்தனை காலங்கள் ஆனாலும் வெண்மைப் பொலிவோடு இருக்கும். எப்படிச் சங்கானது தனது தன்மையிலிருந்து மாறாமல் இருக்கிறதோ அதே போல நம் மனமும் எந்த சோதனை வந்தாலும், எத்தகைய வெற்றி கிட்டினாலும் இறைவனது சிந்தனையிலிருந்து மாறக்கூடாது என்பதைக் குறிக்கவே சங்கினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குகள் இருவகைப்படும். வலம்புரி மற்றும் இடம்புரி. வலம்புரிச் சங்கென்பது மிகவும் விசேஷமானது. ஒரு லட்சம் இடம்புரிச் சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி கிடைக்கும். வலம்புரியில் வைக்கப்படும் நீர் கங்கை நீரைவிடப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மேலும் சங்குக்குப் பவித்ர பாத்திரம் என்றொரு பெயர் உண்டு. அதில் வைக்கப்படும் நீர் கங்கை நீருக்கு ஒப்பான புனிதத்தன்மை உடையது என்று வேதங்கள் கூறுகின்றன. அதனால்தான் பிறந்த குழந்தைக்கு முதலில் பாலூட்டும் போது சங்கில் இருந்தே புகட்டுவது வழக்கமாக இருந்தது. மேலும் சங்கு என்பது செல்வத்தின் அறிகுறியாகப் போற்றப்படுகிறது. சங்காபிஷேகம் செய்யும் போது வற்றாத செல்வமாகிய உனது அருட்செல்வம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினால், அவரே நமக்குத் தேவையான அனைத்தையும் அருள்வார் என்பது ஐதிகம். உலக இன்பத்தையும், அழகையும் அளிக்கும் சந்திரனின் அம்சமாக சங்கு கருதப்படுவதால் சங்கால் அபிஷேகம் செய்தால் செல்வமும் உலக நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை. சந்திரனைப் போலவே சங்கும் கடலில் இருந்தே தோன்றுகிறது. சந்திரன் மூலிகைக்கும், மருந்துகளுக்கும் அதிபதி. சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் சங்காபிஷேம் செய்யப்படும்போது அதனை தரிசித்தால் நோய்நொடிகள் இல்லாமல் வாழலாம். சாப்பிடும் மருந்துகளுக்கு முழுப்பலன் கிடைத்து நோய்கள் விலகும். செல்வம், செல்வாக்கு, நிம்மதி, ஆரோக்கியம் நிறைந்த நல்வாழ்க்கை கிடைக்கும்.