பதிவு செய்த நாள்
03
டிச
2016
12:12
ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மனுக்கு டிச.,2 காலை, சிறப்பு அலங்காரம், நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். இங்கு, நித்திய பூஜைகளும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் நாகாலம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் நவகிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவர் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
மழையையும் பொருட்படுத்தாமல், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். ராகு கால பூஜையை ஒட்டி, அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதே போல், வங்கனுார் செவிண்டியம்மன், பொதட்டூர்பேட்டைபொன்னியம்மன் கோவில்களிலும், நேற்று சிறப்பு தரிசனம் நடந்தது.