பசுக்களை தெய்வமாக போற்றும் நந்தகோபாலன் கோயில் பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 11:01
கம்பம்: நந்தகோபாலன் கோயிலில் பசுக்களை தெய்வமாக பாவித்து, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. 400 ஆண்டு பாரம்பரியம் கொண்ட கம்பம் நந்தகோபாலன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இக் கோயிலில் ஒக்கலிக கவுடர் இன மக்கள் பசுக்களை தெய்வமாக பாவித்து வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள ’பட்டத்துக்காளைக்கு’ சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த வளாகத்தில் 30 க்கும் மேற்பட்ட கிளை கோயில்களில் அந்தந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்தனர். பொங்கலை இங்குள்ள தொழுவில் உள்ள பசுக்களுக்கு முதலில் படைப்பார்கள். பட்டத்துக்காளைக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து பட்டத்துக் காளைக்கும், தொழுவில் அடைக்கப்பட்ட பசுக்களையும் வழிபட்டு அவற்றிற்கு பொங்கல், கரும்பு படையல் செய்தனர். நேற்று கம்பம் பகுதியில் பிறந்த கன்றுக்குட்டிகள், இந்தகோயிலிற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து ஒக்கலிக பெரியவர்கள் கூறுகையில், ’பாரம்பரியமிக்க இந்த தம்பிரான் மாட்டுத்தொழுவில் ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாள் பொங்கல் விழா கொண்டாடுவோம். இங்குள்ள பட்டத்துக்காளைக்கு தான் சிறப்பு பூஜைகள், பசுக்களை தெய்வமாக வழிபட்டு வருகிறோம்’ என்றனர்.