பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
12:04
பொன்னேரி : தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள கோவில் குளம், 30 ஆண்டுகளுக்கு பின், நீரின்றி வறண்டு கிடப்பதால், கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பொன்னேரி அடுத்த, தத்தமஞ்சி கிராமத்தில், மரச்சியம்மன் கோவில் குளம் உள்ளது. ஆண்டு முழுவதும் வற்றாத நிலையில், எப்போதும் குளத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். குளத்தில் தேங்கும் மழைநீர், ஆண்டு முழுவதும் நுாற்றுக்கணக் கான கால்நடைகளின் நீராதாரமாக இருந்து வந்தது. கிராமவாசிகளும் பல்வேறு தேவைகளுக்கு குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு குறைவான மழையின் காரணமாக குளத்தில் எதிர்பார்த்த அளவில் தண்ணீர் தேங்கவில்லை. தற்போது சுட்டெரித்து வரும் வெயிலினால் குளத்தில் இருந்த, சிறிதளவு தண்ணீரும் ஆவியாகி, குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. ’கடந்த, 30 ஆண்டுகளில், குளம் இதுபோன்று வற்றியதும் இல்லை, வறண்டு போனதும் இல்லை’ என, கிராமவாசிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால், கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் என்ன செய்வது என, தெரியாமல் தவித்து வருகின்றனர். கோடையில் மழை பெய்யுமா என, மழைக் காக கிராமவாசிகள் காத்திருக்கின்றனர்.