சொர்க்கம் செல்ல வழி இறப்புக்கு பின் சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள் ஒரு செயலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம். நாயகத்திடம் இறைவன் கூறும் போது, நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும் பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்லமாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம், உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை சுவர்க்கம் புகமாட்டாய் என்று கூறும், என்றான். ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நாயகத்திடம், நாயகமே! மனிதச் செயல்களில் சிறந்தவை எவை? எனக் கேட்டார். அதற்கு நாயகம், நேரம் தவறாமல் தொழுவது என்றார். இதற்கு அடுத்த இடத்தை எது பிடிக்கிறது எனக் கேட்டபோது, பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல் என்றார். இக்காலத்தில், பெற்றவர்களிடம் பணமிருந்தால் மட்டும் அவர்களை அண்டியிருப்பதும், பணமில்லாவிட்டால், விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது. இதனால், முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. அங்கே வசிக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நன்றி மறந்த தன்மையை எண்ணி குமுறியபடி வாழ்கின்றனர். பெற்றவர்களை குமுற வைக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு நிச்சயமாக நரக வேதனை காத்திருக்கிறது.