முதலாளிகள் பணியாளர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்கிறார் நபிகள்நாயகம். ஒருமுறை, தனது பணியாளர் ஒருவரை அபூ மஸ்வூத் (ரலி) என்னும் எஜமானர் அடித்து விட்டார். அப்போது அவரது பின்புறமாக ஒரு குரல் எழுந்தது. அபூ மஸ்வூதே! உம்மை விட இறைவன் உமது பணியாளர் மீது மிகவும் சக்தி படைத்தவன், என்றது அக்குரல். அங்கே நாயகம் நின்று கொண்டிருந்தார். அந்தப் பணியாளர், தண்டிக்கப்படும் அளவுக்கு தவறே செய்திருந்தாலும் கூட, அதற்குரிய தண்டனையை இறைவன் கொடுத்துக் கொள்வான், எஜமானனுக்கு அடிக்கும் அதிகாரமில்லை என்ற ரீதியில் அந்த எச்சரிக்கை அமைந்தது. திரும்பிப்பார்த்த அபூ மஸ்வூத், “நாயகமே! இந்த நிமிடமே எனது பணியாளரை விடுதலை செய்கிறேன், என்றார். உடனே நாயகம் “அவரை நீர் மட்டும் விடுதலை செய்யாதிருந்தால், தீர்ப்பு நாளில் (மரணத்துக்கு பின் இறைவன் முன்னால் நிற்கும்போது) உமது பணியாட்களின் துரோகம், மோசடி, பொய்கள் அனைத்தும் கணக்கிடப்படும். அதுபோன்று நீர் அவருக்கு செய்த கொடுமைகளும், தண்டனைகளும் கணக்கிடப்படும். அவர்களின் குற்றங்களை விட, உமது குற்றங்கள் மிகுதியாக இருந்தால் அந்த அளவுக்கு உமக்கு தண்டனை கிடைக்கும், என்றார்.