பதிவு செய்த நாள்
04
மே
2017
12:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, வடக்கு ஆடி, மேற்கு ஆடி வீதிகளில், பிரம்மாண்டமான செயற்கை ஆப்பிள் பூப்பந்துகளால், மெகா பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவில், சித்திரைத் திருவிழாவில், முக்கிய நிகழ்வான மரகதவள்ளி மீனாட்சிக்கும், சொக்க வைக்கும் சொக்கருக்கும், மே 7ல், திருக்கல்யாணம் காலை, 8:35 - 8:59 மணிக்குள் நடக்கிறது. கோவிலில் வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது.இதை, 15 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு வசதியாக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் கூரையில், செயற்கை முறையில் ஆப்பிள் பூப்பந்து பல வண்ணங்களில் கோர்க்கப்பட்டு சிறப்பாக அலங்கரித்துஉள்ளனர். பந்தல் பகுதிகளில், 300 டன் ஏசி மற்றும் திருக்கல்யாண மண மேடை பகுதியில், 100 டன் ஏசி வசதி செய்யப்படவுள்ளது. திருக்கல்யாண மண மேடை அலங்கரிக்கும் பணி மே, 6ல் துவங்குகிறது. 25 லட்சம் பல வண்ணப் பூக்கள், வெட்டிவேர் முடிச்சுகளுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட உள்ளது.