பதிவு செய்த நாள்
04
மே
2017
12:05
திருப்பூர்: திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட், பிச்சம்பாளையம் மாரியம்மன் விநாயகர் கோவில், சித்திரை பூச்சாட்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 17ல், கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. பூச்சாட்டு மற்றும் பொரி மாற்றுதலை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்து வந்தது; 25ம் தேதி, கம்பம் நடப்பட்டது. மறுநாள், 108 கலச சிறப்பு அபிஷேக பூஜை, தீபாராதனை நடந்தது. கடந்த, 28ல் திருவிளக்கு பூஜை, மறுநாள் நவசக்தி அர்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்; பொங்கல் விழாவில், இன்று மஞ்சள் நீர் ஊர்வலம் நடக்கிறது.
திருப்பூர் துளசிராவ் வீதி, ராம்ராஜ் நகர் ஆதி தெய்வம் சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 2ல் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, முப்போடு பூ மிதித்தல் விழா நடந்தது. அதை தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, சக்தி கரகம் அழைத்தல், புனித தீர்த்தக்குடம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று, அம்மன் அழைத்தலும், பொங்கல் மாவிளக்கு படைத்தல், அம்மன் குதிரை வாகன பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை இரவு, அக்னி கரகம் எடுத்து வருதலும், அம்மன் மின்சார ஒளி அலங்கார பவனியும் நடைபெறவுள்ளது.