பதிவு செய்த நாள்
30
மே
2017
01:05
குளித்தலை: தேவஸ்தானம் மத்யார்ஜீனேஸ்வரர் கோவில் திருத்தேர் பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்ச்சக்கரம் பொருத்தும் பணிக்காக காத்திருக்கிறது. குளித்தலை அடுத்த,
தேவஸ்தானம் மத்யார்ஜீனேஸ்வரர் கோவிலுக்கு, கடந்தாண்டு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், மரங்களாலான திருத்தேர் தயாருக்கும் பணி நடந்தது. இந்த தேரில், பாரம்பரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு, அழகிய தோற்றத்துடன், கடந்த, நான்கு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இத்தேர், 15 அடி உயரம் என்பதால், திருச்சி பெல் தொழிற்சாலையில் சக்கரம் தயார்செய்ய ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இருந்தும், சக்கரம் தயாரிக்கும் பணி
தாமதத்தால், தேரின் இறுதிகட்ட பணிகள் முடிவடையாமல் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது: கோவில் திருத்தேர் தயாரிக்கும் பணி முடிந்துவிட்டது. மேலும், வார்னீஸ் அடிக்கும் பணி நடக்கிறது. திருச்சி பெல் நிறுவனத்திடம் இருந்து சக்கரம் வந்தவுடன், திருத்தேர் வெள்ளோட்டம்
விடப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.