ஒவ்வொரு ஆண்டும் ஆனி (ஜ்யேஷ்டா) மாதம் கேட்டை (ஜ்யேஷ்டா) நட்சத்திரத்தில் முடிவடையும்படி மூன்று நாட்கள் திருமலையானுக்கு சம்பங்கி பிரதக்ஷணத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் விழாவை ஜ்யேஷ்டாபிஷேகம் எனவும் அபிதேயக அபிஷேகம் எனவும் கூறுவர். வழிவழியாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்போது, உற்சவமூர்த்தி விக்ரஹங்களில் தேய்மானங்கள் ஏற்படாது பாதுகாக்க வேண்டி ஏற்படுத்தப்பட்டதே இவ்வுத்ஸவமாகும் இது மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள் திருமலையப்ப ஸ்வாமிக்குரிய தங்க கவசத்தினை எடுத்து வைத்து ஹோமங்கள், அபிஷேகங்கள், பஞ்சாமிருதம் ஸ்நபன திருமஞ்சனம் செய்வித்த பின்னர் திருமலையப்ப ஸ்வாமிக்கு வைர அங்கி அலங்கரித்து திருமாடவீதிகளில் வலம் வருவர். இரண்டாம் நாள் முத்து அங்கி அணிவித்து ஊர்வலம் நடத்துவர். மூன்றாம் நாள் திருமஞ்சனம் செய்வித்து, தங்கக்கவசம் அணிவித்து திருவீதி உலா வருவர். அந்த தங்கக்கவசத்தினை அடுத்த ஜ்யேஷ்டாபிஷேகத்தின்போது தான் எடுப்பார்கள்.